If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
தமிழ் மருத்துவம்

கோட்பாடு விளக்கம்

சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும்.

மருத்துவக் கோட்பாடு

உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும்.

சித்த மருத்துவக் கோட்பாடு

சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும்.

பஞ்சபூதம்

பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.

"" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''1

இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.

உலகமும் பஞ்சபூதமும்

உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.2 பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.3

“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்

மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்

தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்

சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்

கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்

குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''4

என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர்.

உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.

பஞ்ச பூதங்களால் பிறப்பு

பஞ்சபூதங்கள் எங்கு உள, எங்கு இல என்றில்லாமல், எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் நிறைந்திருக்கின்றன. எந்த இடத்தில் பூதங்கள் அனைத்தும் இல்லையோ, அந்த இடத்தில் உயிரினங்களும் அவற்றின் பிறப்பும் இல்லை என்ற கருத்து உறுதிப் படுவதற்கு, ஒளவைக் குறள் கூறும் கருத்து சான்றாகும்5. பூதங்கள் எல்லாம் ஒரே அளவில் இருந்தால், அங்கும் பிறப்பில்லை.அவை, பங்கு பெரும் அளவு மாறினால் உயிர் உண்டாகும் என்பது ஒளவையின் கருத்தாகும்.

பூமி போன்ற கோள்களும், விண்மீன், சூரியன் போன்ற ஒளியன் களும், சுழன்று கொண்டிருக்கும் அண்ட கோளம் என்னும் வான்வெளி ஆகிய எங்கும் நிறைந்திருப்பது பஞ்ச பூதங்கள்6 என்பதே அடிப்படைக் கருத்தாகக் கூறக் காணலாம்.

பஞ்சபூதமும் உடம்பும்

உடம்பை ஆட்சி செய்வது பஞ்ச பூதமாகும். பஞ்சபூதம் அளவில் ஒன்று மாறினாலும் உயிர்க்குக் கேடு வந்து நேரும் என்பது சித்த மருத்துவக் கோட்பாடு7.

அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் அனைத்துக்கும் இதே நிலைமைதான் என்றும் பொதுவிதி கூறப்படுகிறது. அண்டத்துக்கு வேறு, பிண்டத்துக்கு வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை என்பதை உணர்த்துவது சித்த மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து என்பதை,

"" அண்டத்தி லுள்ளதே பிண்டம்

பிண்டத்தி லுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே''4

சட்டமுனிஞானம் உரைக்கக் காணலாம்.

பஞ்சபூதமும் உடல் உறுப்பும்

பஞ்சபூதம் உடலை உருவாக்குகிறது என்பது பொதுவாகக் கூறப்படும். பஞ்சபூதங்கள் உடம்பின் உறுப்புகளாக அமைந்துள்ளன என்பதை விளக்குவது, சித்த மருத்துவக் கோட்பாட்டியலின் உடலியல் கொள்கை. மருத்துவ நூலார் உடல் உறுப்புகளை நுண்ணிதின் உணர்ந்ததன் பயனாலேயே இவ்வாறான கொள்கையும், கோட்பாடும் உருவாகியிருக்கின்றன. (பஞ்சபூதத்தின் பரிமாணங்கள் இணைப்பு 5.)

உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு:

மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.

நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.

தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்.

காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல்.

ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.

என்னும் இருபத்தைந்தும் பஞ்சபூதத்தின் கூறுகளால்8 உடம்பில் அமைந்திருக்கின்றன என்பர். இதனோடு ஒத்தகருத்தைச் சங்ககால இசை நூலான பஞ்சமரபு9 உரைக்கின்றது.

உடம்பின் அகக் கூறுகள்

பஞ்ச பூதங்களால் உடம்பில் அமையப் பெற்ற இருபத்தைந்தை, உடம்பின் அகக் கூறுகள் என்று குறிப்பிடப்படும். இவையல்லாமல் மேலும் பல அகக் கூறுகள் உடம்பிலுள்ளதாகத் திருமந்திரம் உரைக்கிறது.

உடம்பில் அமைந்த அகக் கூறுகள் இருபத்தைந்து 4,00,48,500 அகக்கூறுகள் என்று விரித்து உரைக்கப்படும். அவை அனைத்தும் 96 என்று கூறப்படும் (96உடல் தத்துவம்) அகக் கூறுகளில் அடங்கும். அந்த 96 ஐயும் அடக்கிக் கூறினால் இருபத்தைந்தாகும்10 என்று, அகக் கூறுகள் தொகுத்தும் விரித்தும், சுருக்கியும் ஆராயப்பட்டிருக்கின்றன.

உடம்பில் அமைந்த பஞ்சபூதங்களின் கூறுகளைக் கருத்தில் கொண்டு சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம், ஆகிய கொள்கையினை உடையோர் கோட்பாட்டினை வகுத்துக் கொண்டனர்.

பொதுவாக, பஞ்சபூத மெய்க் கூறுகள் என 96ஐக் குறிப்பிடலாம். அந்தத் தொண்ணூ<ற்றாறு கூறுகளையே தத்துவம் என்பர். அந்தத் தத்துவங்களில் சைவ சமயம் முப்பத்தாறு தத்துவங்களையும், வேதாந்திகள் முப்பத்திரண்டு தத்துவங்களையும், வைணவ சமயம் இருபத்து நான்கு தத்துவங்களையும், மாயாவாதிகள் எனக்கூறப் படுகின்ற சித்தாந்திகளான மருத்துவ நூலார் இருபத்தைந்து தத்துவங் களையும் தங்கள் கொள்கைகளாகக் கொண்டிருக்கின்றனர் என்பர்11.

பஞ்சபூதங்களின் தன்மைகள்

பஞ்சபூதங்கள் அதன் அதன் இயல்புக்கு ஏற்ப அமைந்திருக்கும் தன்மையைக் குணங்களாகக் குறிப்பிடுவர். மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, என்னும் தன்மைகளைக் கொண்டவையாகக் குறிப்பிடுவர்.

மண்ணின் குணம் 5

நிறை, இடம், வெம்மை, தண்மை, வடிவம் என்பன.

நீரின் குணம் 4

நிறை, இடம், வெம்மை, தண்மை என்பன.

தீயின் குணம் 3

இடம், வெம்மை, வடிவம் என்பன.

காற்றின் குணம் 2

இடம், தட்பம் வெப்பம் என்பன.

ஆகாயத்தின் குணம் 1

இடம் என்பது12, என்று குறிப்பிடப்படுகிறது. இதனையே பரிபாடலும்13, குறிப்பிடும்.

பஞ்சபூதங்களின் தன்மையும் மருந்தும்

பஞ்ச பூதங்களின் இயல்பான தன்மைகளை எண்ணியே உலகப் பொருள்களில் பஞ்சபூதங்கள் இடம் பெற்றிருக்கும் அளவைக் குறிப்பதாகச் சித்த மருத்துவம் கருதுகிறது. பஞ்சபூத அளவின்படி மருந்துகள் கலந்திருந்தால், அம்மருந்து இயற்கையான ஆற்றலுடைய பண்பினைப் பெறும் என்னும் கருத்து சித்த மருத்துவத்தில் காணப்படுகிறது. பஞ்சபூதத்தின் குணம் அறியாமல் மருந்து செய்தால் அதனால் பயனில்லை என்றும் கூறப்படுகிறது.

"" அஞ்சு பஞ்சபூத மறிந்தா லனித்தி யம்போம்''14

என்று, திருவள்ளுவ ஞானம் உரைக்கிறது.

பஞ்சபூதத் தன்மையைப் போல மருந்துகள் கூட்டப்பட்டால், அம்மருந்துகள், மரணத்தை வெல்லச் செய்யும். பஞ்சபூதங்கள் நிலைத்திருப்பதைப் போல மனித உடலையும் நிலைத்திருக்கச் செய்யும் என்பது இதன் கருத்தாகக் கொள்ளலாம்.

“ பஞ்சபூத மொன்று கூடில் பளிங்கு போல தீதமாம்

விஞ்சையுப் பென்றே வழங்கி விளையும் பூமி நாதமே

நஞ்சதாகும் நாதநீரில் நாட்டுதோஷம் காற்றினில்

பஞ்சுபோல பறந்துபோகும் பாட்டை சொன்னேனாண்டையே'' 15

என்றும் கூறுவர்.

"" பூ நெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான் மஞ்சள்

கானகத்து வேம்பரிசி காரிகையே மானங்கேள்

ஒன்றரை ஒன்றேகால் ஒன்று உறுதிமுக்கால்

கன்றரைக்கை யான்நீரில் தேய்''16

என்னும் மருத்துவப்பாடல், நெல்லிக்காய், மிளகு, கடுக்காய், மஞ்சள், வேம்பரிசி என்னும் மருந்துப் பொருள்கள் முறையே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் எனக் கூறுவதுடன் 6,5,4,3,2 என்னும் அளவுகளைக் குறிப்பிடுகிறது.

பஞ்சபூதங்களின் குணங்கள் 5மண், 4நீர், 3தீ, 2காற்று, 1ஆகாயம் என்ற விகிதத்தில் இருக்கின்றனவென்று மேலே குறிப்பிடப் பட்டது. இதன் அடிப்படையில் மருந்துப் பொருள்கள் கூட்டப் படுகின்றன என்பது கருதத்தக்கது.

1. இனிப்பு = மண் + நீர்

2. புளிப்பு = மண் + தீ

3. உவர்ப்பு = நீர் + தீ

4. கைப்பு = காற்று + ஆகாயம்

5. கார்ப்பு = தீ + காற்று

6. துவர்ப்பு = மண் + காற்று

என, சுவைகளில் ஐம்பூதங்கள் கலந்திருக்கின்றன.

பஞ்சபூதமும் நாடியும்

மனித உடலில் அமைந்திருக்கும் வாதம், பித்தம், ஐயம் நாடிகள் சிறப்பானவை. இந்த மூன்று நாடிகளைக் கொண்டு உடம்பில் உருவாகியிருக்கும் அல்லது பிணித்திருக்கும் நோய்கள் கண்டறியப் படுகின்றன. இந்த மூன்று நாடிகளும் மூன்று பூதங்களின் கூறுகளாகச் செயல்படுகின்றன.

வாதம் காற்றின் கூறாகவும், பித்தம் தீயின் கூறாகவும், ஐயம் நீரின் கூறாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன17. பித்தம் நீங்கலாக, வாதம் காற்று + ஆகாயம், ஐயம் நீர்+மண் என்று இரண்டு பூதச் சேர்க்கையும் கூறுவர்.

நாடியும் சுவையும்

சித்த மருத்துவ முறைகளில் சிறந்த முறையாகக் காணப் படுகின்றவற்றுள் சுவையைக் கொண்டே நோயை அறிந்திடும் முறை சிறப்பிடம் பெறுகிறது. நோயாளியின் நாவில் எவ்வகையான சுவை தோன்றுகிறதோ அச்சுவையைக் கொண்டு நோயின் வகையை அறிந்து, அதற்குரிய மருத்துவ முறையை மருந்தாகக் கொள்கின்றனர்.

நாவில் இனிப்புச்சுவை தோன்றினால் ஐயம் மிகுந்த தென்றும், கசப்புச்சுவை தோன்றினால் பித்தம் மிகுந்ததொன்றும், புளிப்புச் சுவை தோன்றினால் வாதம் மிகுந்த தென்றும், துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு ஆகிய சுவை தோன்றினால் வாதபித்த ஐயம் கலந்த தென்றும் தெரிகிறது18.

பஞ்சபூதமும் நோய்த்தீர்வும்

சுவைகள், ஒவ்வொன்றிலும் இரண்டு பூதங்கள் சேர்ந்து இருக்கின்றன. நாடிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பூதம் இருக்கிறது. இதனை அறிந்து கொண்டால், நோயின் சுவையை அறிந்து, அதனால் எந்த பூதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறிய முடியும். அதற்கு எந்தச் சுவையுள்ள பொருளை வழங்கினால் வளர்ந்த பூதத்தின் வளர்ச்சி கட்டுப்படும் அல்லது குறையும் என்பதை எளிதில் அறியக்கூடும்.

இனிப்புச் சுவை மண்+நீர் பூதங்கள் கலந்து (உருவானது) தோன்றியது. ஐயமும் அதே பூதங்களின் கலவையால் தோன்றியது தான் என்பதனால், இனிப்புச்சுவை ஐயம் வளர பயன்படும். அல்லது ஐய நோய்க்குக் காரணமாகும். அதற்கு மாற்றுச் சுவையாக உவர்ப்புச் சுவை (உப்பு)யைப் பயன்படுத்தினால் ஐயம் கட்டுப்படும் அல்லது குறையும். உப்புச்சுவை தீப்பூதம் சேர்ந்தது என்பதால் நீர்ச்சுவையான ஐயம் கட்டுப்படும். அதுபோல், புளிப்புச் சுவை, தீச்சுவை (உப்பு)யால் வந்த நோய்க்கு வழங்கினால் அந்நோய் மிகுந்து வளரும். இதற்கு தீயின் எதிர்மாறான (நீர்+ மண் அல்லது மண் + காற்று) சுவையுடைய பொருள்களைப் பயன்படுத்தினால், தீயால் வந்த நோய் கட்டுப்படும் எனலாம்.

இனிப்பு, புளிப்பு, உப்பு இம்மூன்று சுவைகளும் வாதத்தால் வந்த நோயைக் கட்டுப்படுத்தும் (அ) தீர்க்கும். கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு இம்மூன்று சுவைகளும் ஐயத்தால் வந்த நோயைக் கட்டுப்படுத்தும். துவர்ப்பு, இனிப்பு, கைப்பு இம்மூன்று சுவைகளும் பித்தத்தால் வந்த நோயைக் கட்டுப்படுத்தும்19 என்றறியலாம். அதேபோல, கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் வாத நோயை வளர்க்கவும், வருவிக்கவும் காரணமாகும். புளிப்பு, கார்ப்பு, உப்பு ஆகிய சுவைகள் பித்த நோயை வளர்க்கவும், வருவிக்கவும் காரணமாகும். இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகிய சுவைகள் ஐய நோயை வளர்க்கவும் வருவிக்கவும் காரணமாகும்.

இச்சுவையின் அடிப்படையைக் கொண்டு நோயை அறியவும், நோயைத் தணிக்கவும் சித்த மருத்துவக் கோட்பாட்டு முறையால் கண்டறியப் பட்டுள்ளது.

பஞ்சபூதமும் மருந்துப் பொருளும்

சித்த மருத்துவம், உடம்பையும் உடம்பின் உறுப்புகளையும், உடல் உறுப்புகளில் உருவாகும் நோய்களையும், பஞ்சபூதத்துடன் தொடர்புடையவை என்கிறது. அதேபோல, நோய்களைத் தீர்க்கப் பயன்படுகின்ற மருந்துப் பொருள்களான உப்பு, உலோகம், பாடாணம், மூலிகை, மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகின்ற ‘குகை’ போன்ற கருவிகளும் பஞ்சபூத முறையோடு தொடர்புடையன என்பது இப்பகுதியில் ஆராயப்படுகிறது.

உடம்பின் உறுப்புகளான கால் நிலமாகவும், வயிறு நீராகவும், நெஞ்சு தீயாகவும், கழுத்து காற்றாகவும், நாதவிந்து ஆகாயமாகவும் கொள்ளப்படுகிறது. உலோகங்களில், தங்கம் நிலமாகவும், நாகம் நீராகவும், செம்பு தீயாகவும், இரும்பு காற்றாகவும், துத்தநாகம் ஆகாயமாகவும் கருதப்படுகிறது. உடம்பில், கால் நோயுற்றுத் துன்புற்றால், நிலப்பகுதி பழுதடைந்ததாகக் கருதலாம். அவ்வாறு பழுதடைந்த பகுதிக்குத் தங்கம் மருந்தாகப் பயன்படுகிறது. வயிறு பாதிக்கப்பட்டால் நாகம் மருந்தாகிறது. நெஞ்சு பழுதடைந்தால், செம்பு மருந்தாகிறது. கழுத்து பழுதடைந்தால் இரும்பு மருந்தாகிறது. நாதவிந்து பழுதடைந்தால் துத்தநாகம் மருந்தாகிறது.

(ஐ) மருந்துப் பொருள்களில் இந்துப்பு, கறியுப்பு, கல்லுப்பு, மிருதார்சிங்கி, சிலாசித்து போல்வன நிலப்பண்பு உடையவை என்பதால் மண்பூதமாகிறது.

(ஐஐ) சங்கு, வெடியுப்பு, நவச்சாரம், வெள்ளைப் பாடாணம், முட்டைத் தோடு, நத்தையோடு, முத்துச்சிப்பி முதலியன நீர்ப் பண்பினை யுடையவை என்பதால் நீர்ப்பூதமாகிறது.

(ஐஐஐ) மனோசிலை, தாளகம், பூரம், வெண்காரம், எலும்பு, கற்பூரம், லிங்கம் போல்வன தீயின் பண்பு கொண்டவை என்பதால் தீப் பூதமாகிறது.

(ஐங) அன்னபேதி, துருசு போல்வன காற்றின் இயல்பு கொண்டவை என்பதால் காற்றுப் பூதமாகிறது.

(ங) துத்தநாகம் (த்டிணஞி), அயக்காந்தம், பாதரசம், பல் துத்தம் (த்டிணஞி ண்தடூணீடச்tஞு) போல்வன ஆகாயத்தின் பண்பு கொண்டவை என்பதால் ஆகாயப் பூதமாகிறது.

மேற்கண்டவாறு மருந்துகளில் அமைந்துள்ள பண்புகளையும், பஞ்சபூதங்களின் பண்புகளையும் நன்கு ஆராய்ந்து மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மருந்துப் பொருள் களைச் சேர்க்கும் போது, 6+5+4+3+2=5/4 என்னும் விகிதத்தில் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும் மருந்துகள் 6 முதல் 2 வரை முறையே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பூதங்களின் அளவாகக் கருதப்படும்20.

பஞ்சபூத மூலிகைகள்

செம்பாலை, புளிநாரை – மண்;

கவுதும்பை, காசானி – காற்று;

துரா, பீநாறி – நீர்;

கரந்தை, குமரி – தீ;

காஞ்சோரி, சங்கரன் – ஆகாயம்21

என்று பஞ்சபூதக் குணங்களைக் கொண்ட மூலிகைகள் குறிப்பிடப் படுகின்றன. இவ்வாறு கண்டறியப்படுகின்ற மூலிகைகளைப் பஞ்சபூத முறைப்படி ஒன்று சேர்த்தால் அதுவே சித்த மருந்துவத்தின் மூலமருந்தாகப் பயன்படும்.

பஞ்சபூத முறையில் கூட்டப்படும் மருந்துகள் பல, நாட்டு வழக்கத்தில் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கதாக இருப்பது, ‘சிறுபஞ்சமூலம்’ ஆகும். இப்பெயர் சிற்றிலக்கியம் ஒன்றின் பெயராகவே இருப்பதனால் இதன் சிறப்பினை உணரலாம்.

பஞ்சபூதக் கருவி

மருந்துகளைத் தீக்குள் வைத்து எரிக்கவும், காய்ச்சவும் குகை என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. குகை பெரும்பாலும் பொற்கொல்லர்கள், உருக்கினால் உருவானதைப் பயன்படுத்துவர். சித்த மருத்துவக் கோட்பாட்டின் படி குகை பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட வேண்டு மென்று கூறப்படுகிறது.

பஞ்சபூதக் குகை உருவாக்கக் கடல் நுரை, கல்லுப்பு, வெடியுப்பு, சீனம், சூடன் ஆகிய ஐந்து பொருள்களைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றது. அவ்வாறு தயாரிக்கப்படும் குகையில் வைத்து ஊதப்படும் சூதம், ஐந்துவகை நாதம், உபரசங்கள், நாத விந்தாகிய மூலப் பொருள்கள், சாரம், துரிசு, உப்பு, காரம் முதலிய எல்லாப் பொருளும் நீறாகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குகைக்கு ஈடாக வேறு ஒன்றுமில்லை22 என்று மருத்துவக் கருவியைப் பற்றிக் கூறக் காணலாம்.

பஞ்சபூதமும் வைத்திய வாதயோகமும்

வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கும் சித்தர் முறையாகும். இந்த நான்கையும் கொண்டதே சித்தமருத்துவம்.

மரணமில்லாப் பெருவாழ்வு வாழ யோகம் வேண்டும். யோகம் செய்ய உடல் சுத்தி வேண்டும். உடல் சுத்தியடைய கற்பம் போன்ற வாதமுறையில் தயாரிக்கப்படுகின்ற மருந்து வேண்டும். அந்த மருந்தினால் உடலிலுள்ள குற்றங்களைப் போக்கும் மருத்துவம் வேண்டும். இவ்வாறான நான்கு முறைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளன. இந்த நான்கு செயல்களைச் செய்வ தற்கும், சித்த மருத்துவக் கோட்பாட்டில் பஞ்சபூதம் அடிப்படையாக விளங்குகிறது. பஞ்சபூத முறையே சித்த மருத்துவ முறை என்பதற்குச் சான்று கூறும் விதத்தில் யூகி பிடிவாதம் என்னும் நூலில், பஞ்சபூதத்தைக் கவனத்துடன் புரிந்து அதனால் அறியப்படும் உண்மைகளைக் கொண்டு செயல்பட்டால்தான், மருத்துவம் வெற்றி பெறும்23 என்று கூறப்படுகிறது.

தங்கம், காரீயம், செம்பு, இரும்பு, நாகம் ஆகிய உலோகங்கள் முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியன பூதங்கள். இந்த ஐந்து உலோகமும் கூடும்போது, வாத மருத்துவத்துக்குக் குரு மருந்தாக அமையும். குரு மருந்து என்பது சித்த மருத்துவத்தில் மூல மருந்தாகக் கருதப்படும். எந்த மருந்தைச் செய்தாலும் அந்த மருந்துடன் குரு மருந்தைச் சிறிதளவு சேர்த்தால், மருந்து சிறந்த மருந்தாக மாறும் என்பர்.

பஞ்ச பூதத்தினால் மருத்துவப் பயன் உண்டாகும். பஞ்சபூதத்தில் ஏதேனும் ஒன்றை மட்டும் கொண்டு எதையும் செய்ய முடியாது வீண் பேச்சு வேண்டாம். எல்லாமும் வெற்றிபெற வேண்டுமென்றால் பஞ்சபூதம் ஐந்தும் ஒன்று சேர வேண்டும்24 என்பது கண்டறியப் படுகிறது.

பஞ்சபூத சித்தி

பஞ்சபூதத்தினால் அடைக்கூடிய வெற்றியைச் சித்தி என்று கூறுவர். பஞ்சபூத உலோகங்களின் கூட்டினால் செய்யப்படுகின்ற குரு மருந்து ஒன்பது வகையான உலோகங்களையும் பொன்னாக மாற்றும். தரத்தில் குறைவான உலோகங்களைப் பொன்னாக மாற்றும் குருமருந்து, குற்றமுடைய உடம்பையும் பொன்னாக மாற்றும் என்பதே சித்தமருத்துவத்தின் வாதமுறை மருத்துவமாகும்25.

‘பஞ்சலோகச் செந்தூரம்‘ என்னும் மருந்தை நோயாளிக்குக் கொடுத்தால், வாதம் என்னும் காற்றுப் பூத நோய்84, பித்தம் என்னும் தீப்பூத நோய்48, ஐயம் என்னும் நீர்ப்பூத நோய்96 ஆக 228 நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது26. ஒரு மருந்து இத்தனை நோய்களைப் போக்கக் கூடியதாக அமைகின்றதென்றால், அது பஞ்ச பூதத்தின் சேர்க்கை முறையினால் மட்டுமே கூடும் என்பதைச் சித்த மருத்து வத்தின் கோட்பாடு உணர்த்துகிறது.

பஞ்சபூதத்தால் யோக சித்தி

பஞ்சலோகச் செந்தூரம் என்னும் குரு மருந்தைக் களங்கு என்னும் மருந்தாக மாற்றி உண்டு வந்த பின் யோகம் செய்தால் உடனே சித்தி அடையலாம் என்பர்.

யோக சித்தி பெறவும், சிவயோக நெறியில் சித்தி பெறவும் பஞ்சலோக முறையில் தயாரிக்கப்படுகின்ற வாதமுறை மருந்தான குருமருந்து வேண்டும் என்பதை உணர்த்துவதுடன், பஞ்சபூதத்தினால் கிடைக்கக் கூடிய வெற்றிகள் அனைத்தும் கூறப்பட்டிருக்கிறது.

பஞ்சபூதமும் பஞ்சாக்கரமும்

‘பஞ்சாக்கரம்’ என்பது ஐந்து எழுத்துகளைக் குறிக்கும். ஐந்து எழுத்துகளாவது ‘நமசிவாய’ என்பதாகும். இந்த ஐந்து எழுத்தின் பெருமையை உணர்ந்தால் தான் சிவகதி என்னும் யோகமுத்தி பெறமுடியும் என்கிறது சைவ சித்தாந்தம்.

உயிர்கள் வாழ்வதற்காக உண்டாக்கி வைக்கப்பட்டுள்ள சாதனம், திருவைந்தெழுத்து என்னும் மந்திரம். அதனை உணர்ந்து கொள்ளாமல் மக்கள் மரணத்தை அடைகின் றார்கள்27 என்று திருமந்திரம் கூறுகிறது. மந்திரம் என்பது மறை என்றும், மறைக்கப்பட்ட பொருள் என்றும், இரகசியம் என்றும் கொள்ளலாம். அத்தகையதாகவே, இந்த ஐந்து எழுத்தும் அமையும். ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்தின் மறைவைத் தெளியக் கற்றுணர்ந்து அதன் வழி ஒழுகினால், உடம்பு பொன்னாகும். அதன்பின் யோக முறையில் நின்றால் ஈசனை அடையலாம் என்பர்.

“தெளியவே ஓதின் சிவாய நம என்னும்

குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே’’28

‘சிவாயநம’ என்னும் குளிகை உயிரை மட்டுமல்ல, உடம்பையும் பொன்னாக மாற்றவல்லது என்பதே ‘பஞ்சாக்கரம்’ என்னும் சைவ மதத் திருவைந்தெழுத்தின் இரகசியமாகும்.

குளிகை என்பது பிற உலோகங்களைப் பொன்னாக்கும் இரசமணி. இதனைச் சித்தர்கள் செய்யக் கற்றிருந்தனர். உலோகங்களை உருக்கி இந்த மருந்தைச் சேர்த்தால் உலோகங்களிலுள்ள குற்றங்கள் நீங்கிப் பொன்னாகி ஒளிரும். அதேபோல, உடம்புக்கு அந்த மருந்தைத் தந்தால் உடம்பிலுள்ள குற்றங்குறைகள் நீங்கிப் பொன்னாகி என்றும் நிலைத்திருக்கச் செய்யும்; யோகத்திற்கு வழியமைத்துத்தரும் என்பதே திருமந்திரத்தின் உட்கருத்து.

‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் பஞ்சபூதத்தைக் குறியீட்டு முறையில் குறிப்பிட்டுக் காட்டுவதாகும். உலகத்தின் தோற்றத்தையும் உய்யும் வழியையும் உரைப்பதற்காக இந்த மந்திரம் பயன்படுகிறது. தோன்றுதல், நிலைத்தல், ஒடுங்குதல் ஆகிய மூன்று நிலைக்கும் பஞ்ச பூதமே காரணமாக அமைகிறது என்பதை உணர்த்துவதாகும். இந்த மந்திர எழுத்து நமண்; மநீர்; சிதீ; வகாற்று; யஆகாயம் என்று பஞ்சபூதத்தையும், நகால்; மவயிறு; சிமார்பு; வகழுத்து; யசிரசு என்று உடல் உறுப்புகளையும் நதங்கம்; மகாரீயம்; சிசெம்பு; வஇரும்பு; யநாகம் என்னும் உலோகங்களையும் சித்த மருத்துவத்தின் பஞ்சபூதக் கோட்பாட்டையே கொண்டிருக்கக் காணலாம்.29

பஞ்சபூத மரபு

இன்றைய உலகில் சிறந்த தொன்மையான மருத்துவங்களில் ஒன்றாக விளங்குவது சித்த மருத்துவம். இந்த மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் சித்தர்கள். சித்த மருத்துவம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது பஞ்சபூதம். பஞ்சபூதத்தின் தன்மையை அறிந்த பின்பே, சித்த மருத்துவம் கோட்பாட்டு முறையில் அமைந் திருக்க வேண்டும்.

பஞ்சபூதம் ஒன்றுடன் ஒன்று கலந்தே உயிர்கள், உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் தோன்றின. அவ்வாறு தோன்றிய உயிரும், பொருளும் பஞ்சபூதங்களின் கூறுகளாகும். உயிரும், பொருளும் தோன்றவும், காக்கவும், நிலைக்கவும், அழிக்கவும், செய்வது பஞ்சபூதமாகும். இதுவே, பஞ்சபூதக் கோட்பாடு. இக்கோட் பாட்டினைப் பின்பற்றித் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இனத்த வரைப் பஞ்சபூத மரபினர் எனலாம்.

அத்தகைய மரபினராகக் கருதத்தக்கவர்கள் சித்தர்கள். பஞ்சபூதக் கோட்பாடு உருவாகிய காலத்தைச் சித்தர் காலமெனவும், சித்த மருத்துவத்தின் தொடக்கக் காலம் எனவும் கொள்ளத் தோன்றுகிறது.

பஞ்சபூதங்களைப் பற்றிய சிந்தனை தொல்காப்பியக் காலத்துக்கும் முந்தியது. கடல்கோளால் அழிந்துபட்ட இரண்டாம் தமிழ்ச்சங்க நூல்களில் ஒன்று பஞ்சபூதக் கோட்பாட்டை விவரிப்பதாக இருந்திருக் கிறது. ‘பூத புராணம்’30 என்னும் அந்நூல் தொல்காப்பியக் காலத்துக்கும் முந்தைய நூலாக இருக்கலாம். அல்லது பூதக் கோட்பாட்டறிவு தொல்காப்பியக் காலத்துக்கு முந்தையதாக இருக்கலாம். அதனால் தான், தொல்காப்பியம் பஞ்ச பூதங்களால் உலகம் உருவானதென உரைக்கிறது.

தொல்காப்பியர் காலத்துத் தமிழர், உயிர் அழியாது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது என்னும் கருத்துடையவர்களாக இருந்திருக் கின்றனர்.

“உயிர்கள் என்றும் அழிவில்லன என்பது தமிழர் கொள்கை. உயிர்கள் என்றும் நிலை பேறுடைய வாதலின் அவற்றை மன்னுயிர் என வழங்குதல் தமிழ் வழக்கு. இப்பழைய வழக்கினைத் ‘தொல்லுயிர்’ என்ற தொடரால் தொல்காப்பியரும் உடன்பட்டு வழங்கியுள்ளார்’’31 என்னும் கருத்துக்கு உரிமையுள்ளவர்கள் சித்தர்களே. சித்தர்களே மருத்துவ முறையால், உடல் அழியாமல் உயிரைப் பாதுகாக்க முடியும் என்று கூறியவர்கள்.

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’’32

என்றதால் அறியலாம். சித்தர்கள் கூறிய இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் அடிப் படையாக இருப்பது சித்த மருத்துவத்தின் பஞ்சபூதக் கொள்கையாகும்.

பஞ்சபூதம் பற்றிய கருத்து மருத்துவத்தில் மட்டுமல்லாமல் தொல்காப்பியம், புறநானூறு, பரிபாடல், சிறுபஞ்சமூலம் போன்ற சங்ககால நூல்களிலும் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்ற ‘பஞ்சமரபு’ என்னும் இசைநூல் பஞ்சபூதத்தை விவரிக்கிறது.

தென்னாட்டில் அமைந்திருக்கும் சைவத் திருக்கோயில் லிங்கங்கள்–காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக் காளத்தி, சிதம்பரம் ஆகியவை முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் எனக் கூறப்படுகின்றன.33 இவற்றால் பூதங்களின் தாக்கம் கோயில்களிலும் மதங்களிலும் இடம் பெற்றிருப்பது அறியலாம். இக்கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலையைப் பற்றிய செய்தி அகநானூறு.34, நற்றிணை35 ஆகிய இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதால் அக்கோயில் பழமை வாய்ந்த சங்ககாலத்தில் ஏற்பட்டதென்று கூறலாம்.

பஞ்சபூதங்களைப் பற்றிய செய்திகள் தமிழிலக்கியங்களில் சைவத் திருக்கோயில்களில் காணப்படுவதைப் போல வேறிடங்களில் காணப் பெறவில்லை என்பதால், பஞ்சபூதக் கொள்கை தமிழகத்துக்கு மட்டுமே உரியதெனலாம்.

பஞ்சபூதங்களை அடையாளமாகக் கூறும் சைவக் கோயில்களிலும், வேறு சில சைவக் கோயில்களிலும் சித்தர்கள் சமாதி அடைந்ததாகக் கூறுவர். பழமையான சைவக் கோயில்களில் சித்தர் சமாதி இருப்பதைக் கொண்டு சித்தர்களுக்கும் சைவக் கோயில்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது தெரியவரும். (சித்தர் சமாதி இணைப்பு 6).

சைவ மத மரபு, சித்த மருத்துவ மரபு, சித்தர் மரபு ஆகியவை பஞ்சபூதத்துடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. இதனால், மேற்கண்ட மரபுகள், பஞ்சபூத மரபின் விரிவாகவோ தொடர்ச்சியாகவோ கொள்ள முடிகிறது என்பதால், பஞ்சபூத மரபினர் எனக்கருத வேண்டியவர்கள் பழமையான சித்த மரபினர் எனலே பொருத்தமாக இருக்கும்.

பஞ்சபூத மரபின் தோற்றம், இடைச்சங்க காலத்திலிருந்து தொடங்குவதனால், அது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டிற்கும் முற்பட்டதெனலாம். அதுவே, சித்தர் காலமாகவும், சித்த மருத்துவக் காலமாகவும் கொள்ள ஏதுவாக அமைகிறது. பஞ்சபூத மரபே சித்தர் மரபு எனவும் சித்த மருத்துவ மரபு (அ) சித்த மருத்துவக் கோட்பாடு என்று கொள்ளும் கருத்தும் இறுதியாகிறது.

மருத்துவம்

மருத்துவம் போற்றுதலுக்குரிய அருந்தொழில். தன்னலம் கருதாதது, பொதுநலம் கருதிச் செய்கின்ற தொண்டிற்கு உரிய தொழில். மருத்துவம், தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் பண்பாட்டு மரபுகளைப் போல் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்தது.

நோயுற்ற துன்பமும் நோயற்ற இன்பமும் பிறரால் தனக்குக் கிடைப்பதில்லை. மனிதன், தானே தனக்குத் தேடிக் கொள்வது36 என்றறிந்தான்.

மனிதனுக்குப் பிறர் செய்வது என ஒன்றில்லை; தனக்கு வந்துற்ற நோய்க்கும் அந்நோய்க்குரிய மருந்தும் தானே அறிந்திடல் வேண்டும்37 என்னும் தன்னுணர்வுடன் வாழத் தலைப்பட்டான். மனிதன், தன் நோய்க்குத் தானே மருந்து38 என வாழத் தொடங்கியதால், வாழ்க்கை வளமும் நாகரிகச் செழிப்பும் பண்பாட்டில் உயர்நிலையும் பெறத் தொடங்கினான்.

தமிழ் மருத்துவம்

பண்டைய காலத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் நேர்ந்த பட்டறிவினாலும், முதிர்ச்சியினாலும், தெளிவினாலும் கண்டறிந்து, நடைமுறைப் படுத்தி, பாதுகாத்துக் கொண்டிருந்த மருத்துவ முறை தமிழ் மருத்துவம் என்பதாகும்.

சித்த மருத்துவம்

தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவு முறையாலும் மருந்து முறையாலும், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ எனக் கண்டறிந்து, அவ்வகையான உணவு முறைகளை உள்ளடக்கியது "சித்த

மருத்துவம்’.

“சித்த மருத்துவ நூல்கள் தமிழில் மட்டுமே அதிகமாகக் காணக் கிடைப்பதனாலும், சித்த மருத்துவமுறை பண்டைய நாள் முதல் இன்றுவரை தமிழ் நாட்டிலேயே பயிலப்பட்டு வருவதனாலும் சித்த மருத்துவத்தைத் தமிழ் மருத்துவம்’’39 என்பர். தமிழ் மொழியிலும் தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் தமிழர்களால் போற்றிப் பாதுகாக்கப் படுவதனாலும், ‘சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம்’ என்பதற்குரிய அடிப்படையாகக் கொள்ளலாம்.

சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமே

சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என்பதற்குச் சில அடிப்படை ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழக நிலத்துக்கு உரிமையுடைய மூலிகை வகைகள், மலைப் பகுதிகளிலும், காடுகளிலும், நீர்ப் படுகைகளிலும் காணப்படுகின்ற செடி, கொடி, மரவகைகள், சித்த மருத்துவத்தின் அடிப்படை மருந்துப் பொருள்களாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. சித்த மருத்துவத்தின் ‘மூலச் சுவடிகள்’ அனைத்தும் தமிழில் அமைந்திருப்பதுடன் அவை தமிழகத்திலேயே வழங்கியும் வருகின்றன.40

தமிழ்நாட்டு, தென்னாட்டு மருத்துவமுறை வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் தங்கள் மனத்தின் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, அந்த ஆற்றலின் பயனால் ‘உருவாக்கம்’ எனும் முறைகளால் மருத்துவத்தை வளர்த்தனர்41 என்பதனால், ‘சித்த மருத்துவம்’ எனப் பெயர் கொள்ளலாயிற்று.

இயற்கை மருத்துவ முறைகளோடு மூலிகை மருத்துவம், யோகாசன முறை மருத்துவம், வாதமுறை மருத்துவம், கற்பமுறை மருத்துவம், வர்ம முறை மருத்துவம் ஆகிய முறைகள் அனைத்தும் தமிழ் நாட்டவரால் உருவாக்கப்பட்டுத் தமிழ் நாட்டவரால் பாது காக்கப்பட்டு வருகின்றன என்பவை, சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என்பதற்கு அடிப்படையான சான்றுகளாகும்.

சித்த மருத்துவம் மூலிகை மருத்துவமா ?

அறுவை முறையால் செய்யப்படும் மருத்துவம் அறுவை மருத்துவம், மகளிர்க்குச் செய்யப்படும் மருத்துவம் மகளிர் மருத்துவம். விலங்களுக்குச் செய்வது விலங்கு மருத்துவம் என வழங்கப் படுவதைப் போல, சித்தர்களால் செய்யப்பட்ட மருத்துவம் ‘சித்த மருத்துவம்’ என வழங்கலாயிற்று. சித்த மருத்துவத்தில் மூலிகையின் பங்கு அதிக அளவில் காணப்படுவதனால், ‘மூலிகை மருத்துவமே, சித்த மருத்துவம்’ எனவும் வழங்கிவரக் காணலாம்.

“மூலிகை மருத்துவம் சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியே யன்றி அதுவே முழுமையானதன்று. உணவுப் பழக்கத்தில் உலகின் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியா, குறிப்பாகத் தமிழகம் விளங்குகிறது. காரணம், அன்றாட உணவே (அறுசுவை) மருந்துச் சரக்குகளோடு கூடியவை. நோய் வராமல் தடுக்கும் முறையில் மேற்கொள்ளப்படும் உணவு முறை சித்த மருத்துவத்தில் அடங்குகிறது. கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், கொத்துமல்லி, பெருங்காயம், மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை இவ்வாறான பல பொருள்கள், மருந்தாக அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. நோய் வந்தால் இவற்றையே சூரணம், கசாயம், இரசம், உப்பு, உலோகம், பாசாணம் போன்றவை யாகவும், நிறைவாக இரத்தினங்களாகவும் ஆக்கி வழங்குவர்’’42 என்னும் கருத்துகளால், மூலிகை மருத்துவம் மட்டுமே சித்த மருத்துவம் என்னும் கருத்து வலுவற்றதாகிறது. சித்த மருத்துவம் ஒரு முழுமையான மருத்துவக் கல்வி என்ற நிலைக்கு வளர்த்துப் போற்றப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவக் கல்வி

சித்த மருத்துவத்தை மேற்கொண்ட சித்தர்கள், தாங்கள் கற்று ஆராய்ந்து அறிந்த உண்மைகளைப் பயனுடையவர்களுக்கும்,

பக்குவ மடைந்த பயனீட்டாளர்களுக்குமே கற்பிக்க வேண்டுமென்று கருதினர்.

சித்த மருத்துவம், குரு சீட பரம்பரையாக அனுபவப் பக்குவத் தினால் கற்றறியப்படுகிறது. மருந்தின் குணம், நோயின் குணம் ஆகிய இவற்றை நன்குணர்ந்து பின் விளைவுகள், முறிப்பான்கள் போன்றவற்றைத் தெளிவாக உணர்ந்தாக வேண்டும். பக்குவமற்ற மருந்துகள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே மருந்து காலையில் உட்கொண்டால் ஒரு பலனும், மாலையில் உட்கொண்டால் வேறொரு பலனும் தரும். ஒரே நேரத்தில் அனுபானத்தை (துணைப்பொருள்) மாற்றிக் கொடுத்தால், மாற்றுப் பலனைத் தரும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் இடம் பெறுகின்றன. சான்றாக, தூதுவளைக் கற்பம் நெய்யில் உண்டால் உடல் பெருக்கும். தேனில் உண்டால் உடல் மெலியும். வெண்ணெயில் உண்டால் தாது உற்பத்தியாகும்.

இப்படிச் சாதாரணமாகப் பயன்படும் கீரை, மருத்துவப் பண்பினால் சூழல், உட்கொள்வோர் வயது, காலம், உடன் உண்ணும் துணைப் பொருள் போன்றவற்றால் வேறுபட்ட பலன்களைத் தரும். இது போன்ற மருந்துகள் சித்த மருத்துவத்தில் இடம் பெற்றுள்ளன. சித்தர்கள் வகுத்துள்ள மருந்துவக் கொள்கை கடினமான முறைகளினால் வகுக்கப் பெற்றது. சித்த மருத்துவ முறைகள் (இரகசிய) மந்தண அளவில் பரிபாஷை, சங்கேதம் போன்றவற்றால் காக்கப் பெற்றன. அனுபவ மற்றோர் சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதைத் தடைப் படுத்துவதே இதன் நோக்கமாக இருந்த போதிலும் பின்னாளில் அவை பிறரால் அறிய முடியாமலேயே மறைந்து போவதற்கும் காரணமாக அமைந்து விட்டது43. என்று கருத்துரைக்கப் பட்டிருப்பதிலிருந்து, சித்த மருத்துவக் கல்வி எளிய முறையினால் உருவானதல்ல என்பதும் அதன் முறைகள் எல்லோருக்கும் சென்றடையாத நிலையில் ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடக்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது என அறியலாம்.

சித்த மருத்துவக் கல்விக்குத் தகுதி

சித்த மருத்துவ முறைகள் உணவின் அடிப்படையைக் கொண்டது என்றால், அதன் முறைகள் ஒருசிலரிடமே முடங்கிக் கிடக்கிறது என்னும் கூற்று உடன்பாட்டிற்கு உகந்ததாக அமையவில்லை. என்றாலும், சித்த மருத்துவ நூல்களை எல்லாருக்கும் காட்டக் கூடாது என்றும், மருந்துமுறைகளைக் கூறக்கூடாது என்றும் குறிப்பிடுவது காணப்படுகிறது.

“ மற்றுள்ளோர்க் கிந்நூலை யீந்தா யானால்

மாண்டிடுவாய் மகத்தான சாப மெய்தே’’44

என்னும் கடுஞ்சொற் கட்டளையும் சாபமும் இடப்படுவதை அறியலாம். மேற்கண்ட கருத்தைக் கூறும் இந்நூல் ஒரு ரசவாத நூல். ரசவாதம் என்பது உலோகங்களைத் தங்கமாக மாற்றும் கலையுடன் தொடர்புடையது. இக்கலையை எல்லாரும் அறிய நேர்ந்தால் மருத்துவம் செய்வதை விட்டு விட்டு எல்லாரும் தங்கம் செய்யும் தொழிலைச் செய்ய முற்படுவர். அத்தகைய நிலை ஏற்படுவது சரியன்று என்பதை உணர்ந்தே சித்தர்கள், தாங்கள் கூறிய ரசவாத முறைகள் வேறு நோக்கத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்று கருதி இவ்வாறு உரைத்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

“ என்மகனே என் மேலே ஆணை ஆணை

புல்ல ரென்ற புல்லரிடம் நூல் காட்டாதே''45

என்று அகத்தியர் தன் மாணாக்கனிடம் கூறுவதைக் காண்கிறோம்.

“கை முறைகள் காட்டாதே கருச்சொல் லாதே’’46

என்று ரோமரிஷி சூத்திரத்தில் உரைக்கின்றார். மற்ற சித்தர்களைப் போலப் பாடல்களைக் காட்டக் கூடாது என்று கூறாமல், கை முறைகள்,கரு ஆகியவற்றைச் சொல்லாதே என்கிறார்.

சித்த மருத்துவ நூல்கள் பெரும்பாலும் பரிபாஷைச் சொற்களால் இயற்றப் பெற்றிருக்கும் என்பர். பரிபாஷை எல்லாருக்கும் தெரியக் கூடியதல்ல. பாவிகள் எனப்படுவோர், சித்தர்கள் கூறுகின்ற ஒழுக்க முறைகளுக்கு உட்படாமல் இருப்பவர்கள் பாவிகளாவர். அவர் களுக்குத் தெரியக் கூடாது என்பதற்கே பரிபாஷைச் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன.47 அவர்களால், மருந்துப் பொருள்களும், மருத்துவமும், மருத்துவத்துக்குரிய நற்பெயரும் அழியக் கூடாது என்பதைக் கருத்திற் கொண்டே அவ்வாறு உரைத்துள்ளனர்.

சித்த மருத்துவத்தை மறைவாகக் கூறாவிட்டால், அதன் சிறப்பினால் இறந்தவனும் உயிர் பெற்றிடக் கூடும். அவ்வாறு, செத்தவன் எல்லாம் திரும்பி வந்தால், உலகம் இடங்கொள்ளாமல் போகும். சித்த மருத்துவத்தை எவன் முறையாகக் கற்க வேண்டுமென்ற விதி அமைந்திருக்கிறதோ அவன் வந்தால், சித்தர்கள் தாங்களே முன்வந்து அவனுக்கு மருத்துவக் கல்வியைக் கற்றுத் தந்து விடுவார்கள் 48 என்று சித்த மருத்துவத்தின் இரகசியத்தைக் கூறுகின்றார்.

சித்த மருத்துவத்தைக் கற்கும் தகுதியாளர் யார் எனத் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது. சித்தர்கள் ஒருவருக் கொருவர் செய்முறை களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதும் இயற்கை. சிவயோகிக்கும், மெய்ஞ்ஞானிக்கும் இந்நூலைச் சொன்னதாகக் கூறினர். சிவயோகியும், மெய்ஞ்ஞானியும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து கிடப்பவர்கள். அவர்களுக்கு மருந்து செய்யவும், பொருள்களைச் சேகரிக்கவும், மருத்துவம் பார்க்கவும் பொழுது வேண்டுமே! பன்னிரண்டு ஆண்டுகள் தொண்டு செய்து பணிந்திருக்கும் மாணவன், கல்வியறிவுள்ள கல்வியாளர் ஆகியோர்களே சித்த மருத்துவக் கல்விக்குத் தகுதியானவர்கள்49 என்பது பெறப்படுகிறது. மாணவன், செய்முறைப் பயிற்சியினாலும், பக்குவத்தினாலும் சிறந்தவனாகும் போது மருத்துவ முறை வழுவாது பாதுகாக்கப்படும் எனக் கருதியுள்ளனர்.

சித்த மருத்துவத்தின் இயல்புகள்

மருத்துவ நூலார் மருத்துவ நூல்களை எழுதுங்கால், அவ்வக் காலத்திலும் இடத்திலும் அங்கே வழங்கப்படும் மருத்துவ முறைகளைக் கைக்கொண்டே நூல் எழுதினர்.

"" வண்கால தேசவர்த்த மானமறி பண்டிதர்க்குங்

கண்காண் வழக்கமே கைமுறையாம் பெண்காணி

ஆனாலுஞ் செல்வாக்கே யாதீன மப்படி நீ

நானாலுஞ் சொல்லவறி நாள்.''50

காலம், இடம், வழக்கம் ஆகிய மூன்றையும் முறையாக அறிந்த மருத்துவர்க்கு, அவ்வவ்விடங்களில் நிகழும் வழக்கமே கைமுறை யாகக் கொண்டு வருவது வழக்கமாக அமையும். அதுவே மருத்து வர்க்குக் கண்ணாகவும் அமையும் என உரைப்பதனால், நிலத்தின் இயல்பினை உணர்ந்து அவற்றிற்கு ஏற்ப செய்யப்பட்டதே சித்த மருத்துவம் என்று அறியலாம்.

மருத்துவ இயல்புகள்

மருத்துவ இயல்புகள் என்பது, முன்னோர் மேற்கொண்ட முறைகளின் வழியே பின்னோரும் பின்பற்றி, அம்முறை தவறாமல் மருத்துவம் செய்வதைக் குறிக்கும். இவை, முறைப்படி வகுக்கப் பெற்ற வழிமுறைகள் என்று கூறலாம். வழிமுறை தவறிய மருத்துவச் செயல்களினால், மருத்துவத்தின் பயனும் தவறக் கூடும் என்பதனால் வழி முறை வகுத்துள்ளனர்.

இயல்புகள்16

1. வியாதி அறிதல், 2. அதன் காரண மறிதல், 3. அது நீங்கும் வழி தேர்தல், 4. பிணிக் காலங்களின் அளவை உணர்தல், 5. நோயாளி அளவு அறிதல், 6. உடலின் தன்மை அறிதல், 7. பருவம் நாடல், 8. வேதனைகளின் அளவு அ றிதல், 9. சாத்தியம் ஆய்தல், 10. அசாத்தியம் ஓர்தல், 11. யாப்பியம் உணர்தல், 12. மருந்து செய்தல், 13. பழைய மருத்துவர் முறையில் தவறாமை, 14. உதிரங்களைதல், 15. அறுத்தல், 16. சுடுதல் என்பன மருத்துவ இயல்புகளாகும்.

நோயாளிக்கு வந்துற்ற நோய் எது எனத் தேர்வு முறையால் அறிந்து, அந்த நோய் வருவதற்குரிய காரணங்களைக் கண்டறிய வேண்டும். வந்துள்ள நோய் நீங்க வேண்டுமானால், மருத்துவத்தில் எந்த முறையைப் பயன்படுத்தினால் நீங்கும் என ஆராய்ந்து தேரவேண்டும். நோய் எத்தனை நாளாக இருக்கிறது என்பதைக் கேட்டு, நோயாளியின் உடலின் தன்மையை அறிந்து, வந்துற்ற நோய் நோயாளியால் தாங்கக் கூடியதா? ஏற்ற மருந்தைக் கொடுத்தால் உடல் தாங்குமா? என்பதை அறிந்து, நோய் வந்த காலத்தை அறிந்து, நோயாளி படுகின்ற துன்பத்தின் அளவைக் கொண்டு, நோய் நீங்கும்– நீங்கா தென்று கணித்து மருந்து செய்ய வேண்டும். மருத்துவம் பார்க்கும் போது, முன்னோர் மேற்கொண்ட முறையின்படி மருத்துவ விதி மேற்கொள்ளப்பட்டது.

மேலே கூறப்பட்ட பதினாறு முறைகளையும் முற்றக்கற்று அதன் வழி மருத்துவம் செய்யத் தக்கவனே முறையான மருத்துவனாகக் கருதத்தக்கவன் என அறியலாம். இவற்றில் காணப்படும் அறுத்தல், சுடுதல், உதிரங்களைதல் என்னும் முறைகள் அறுவை மருத்துவ முறைகளாக இருக்கின்றன. மருந்து முறைகளோடு அறுவை முறைகளும் சேர்ந்து அமைந்தது சித்த மருத்துவ முறை என்பது தெரியவரும்.

சித்த மருத்துவ உறுப்புகள்

மருத்துவ உறுப்புகள் என்பது, உடல் உறுப்புகளைப் போல இயற்கையாக அமைய வேண்டியவை எனலாம். உடல் உறுப்பில் ஏதேனும் ஒன்று குறைந்தாலே ஊனம் என்றாகும். அதிலும் சில உறுப்புகள் குறைந்தால் உடல்தான் இருக்கும்; உயிர் இருக்காது. அதைப் போலவே மருத்துவ உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குறைந்தாலும் மருத்துவம் ஊனம் ஆகிவிடும். ஒரு சில உறுப்புகள் குறைந்தால் மருத்துவமே உயிரற்றுப் போகக் கூடும் என்பது உணர்ந்து, மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கருதி உறுப்புகள் உரைக்கப் பட்டன.

அவ்வாறு கூறுவது, ஒரு முழுமை நிலையை உணர்த்தவும், முழுமையான மருத்துவமுறை வளர்ந்தோங்கவும் உறுப்புகள் அமைத்துக் கூறப்பட்டது எனலாம்.

உறுப்புகள்

மூன்று கண்கள்; நான்கு தலைகள்; ஐந்து முகங்கள்;

ஆறு கைகள்; எட்டு உடல்கள்; பத்துக் கால்கள் எனும்

முப்பத்தாறும் மருத்துவ உறுப்புகளாகும்51.

மூன்று கண்கள் : மருந்து, மருந்தின் சுத்தி, மருந்தின் குணம் ஆகிய மூன்றும் மூன்று கண்கள்.

நான்கு தலைகள் : வாதம், பித்தம், ஐயம், தொந்தம் ஆகிய நான்கும் நான்கு தலைகள்.

ஐந்து முகங்கள் : வாந்தி, பேதி, குடல் சுத்தி, நசியம், இரத்தத்தை வெளியாக்கல் ஆகிய ஐந்தும் ஐந்து முகங்கள்.

ஆறு கைகள் : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறும் ஆறு கைகள்.

எட்டு உடல்கள் : எண்வகைத் தேர்வு முறைகள் எட்டு உடல்கள்.

பத்து கால்கள் : நாடிகள் பத்து, வாயுக்கள் பத்து ஆனாலும் அவை பத்துப் பெயர்களால் குறிக்கப்படுவதால் பத்து கால்கள் எனப்படும்.

என்று குணவாகடம்52 கூறுகிறது.

இவை முப்பத்தாறும் மருத்துவர்க்குரிய செயல்களாகவும், அவை மருத்துவத்துக்கு மிகவும் தேவையான கருவிகளாகவும் கருதி, மருத்துவ உறுப்புகளாகக் கொண்டனர். இவற்றில் எவையேனும் குறைந்து மருத்துவம் செய்யப்பட்டால், அது குற்றமுடையதாக இருக்கும் என்பதால், மருத்துவ உறுப்புக் கோட்பாட்டின் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்

நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் செயல்முறை விதிகளில் காணப்பட வில்லை. மாறாக, நோயாளியைக் கண்ட மருத்துவன், நோயாளியின் உடல் பருமன்–மெலிவு இவற்றின் தன்மை, நோயின் தன்மை, நோயின் ஆற்றல், நோய் குணமாகுமா? குணமாகாதா என்னும் கணிப்பு, நோயாளி தூங்கிய தூக்கத்தின் அளவு, நோயுற்ற பின் நோயாளிக்கு உடல் உறவுக்காகப் பெண்ணிடம் உண்டாகும் மயக்கத்தின் அளவு, நான்கு வகையான உடலின் இலக்கணத்தில் நோயாளியின் வகை, ஆள், நாள், குணம், நோய், நாடு, பேதம், நிலை, கோள்களின் ஆட்சி–வீழ்ச்சி ஆகிய அனைத்தும் பார்த்தறிந்து, அதன்பின் மருத்துவம் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின்னர், வேர்களைக் கொண்டு மருந்துகளைக் கொடுக்கவும், அதன்பின்னர் மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்து கொடுக்கவும். இவற்றினால் நோயின் குணம் தணியவில்லை என்றால், பற்பம், செந்தூரம் என்னும் மருந்து வகைகளைப் பயன்படுத்தவும் என்று செயல்முறை விதிகள் கூறப்பட்டுள்ளன.53

“ஆரப்பா நாலுலட் சணமும் பாரு

ஆள்பாரு நாள்பாரு குணமும் பாரு

நோய்பாரு தேசபேதங்கள் பாரு

நிலைபாரு கிரக வுச்சம் நீச்சம் பாரு

பேர்பாரு இவனை, நீ பிறகு பாரு

போதிலே கீர்த்திழின் றன்மன் பாரு

வேர்பாரு தழைபாரு மிஞ்சி னாக்கால்

மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரே.’’54

நோயையும் நோயாளனையும் கணித்தறியாமல் செய்யும் மருத்துவம், முறைப்படுத்தப்பட்ட மருத்துவமாகக் கருதப்பட மாட்டாது. நோயின் வன்மை–மென்மைகளையும், நோயாளியின் உடல் மன உறுதிகளையும் ஆராய்ந்தே மருத்துவ முயற்சிக்கு மருத்துவன் முயல வேண்டும். அதுவும் ஆரம்ப நிலையிலேயே கடுமையான மருந்துகளைத் தந்துவிடாமல், மெள்ள மெள்ளக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயல்முறை விதிகளில் அடுக்கு முறை கையாளப் படுகிறது.

இதனால் மருத்துவத்தின் பக்குவமும் முதிர்ச்சியும் அறியப் படுகிறது.

“ உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்''55

என்று குறள் கூறும் மருத்துவச் செயல் விதி இதனைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறது.

சித்த மருத்துவ ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது தூய்மையான நடைமுறையைக் குறிக்கும். தூய்மையான நடைமுறைகள் உயிரினும் உயர்ந்ததாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருப்பது தெரியவரும். இது வாழ்க்கை ஒழுக்கத்தைக் குறிப்பிடும். வாழ்க்கையோடு ஒன்றிய மருத்துவ ஒழுக்கமும் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது.

மருத்துவம் செய்கின்ற மருத்துவன் சாதாரண மனித குணங்களி லிருந்து மாறுபட்டு உயர்ந்த குணமுடையவனாக இருக்க வேண்டும் என மருத்துவ நூலார் கருதுகின்றனர். அதனால்தான் ஒழுக்கமும் ஒழுக்க முறையையும் வகுத்துக் காட்டினர். அவ்வழிமுறைகளைப் பின் பற்றி மருத்துவம் செய்வதே ஒழுக்கமுடைய மருத்துவமாகக் கருத முடியும் என எண்ணினர்.

மருத்துவனின் பற்றற்ற நிலை

மருத்துவன், பொருளின் மீது ஆசையோ பற்றோ கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக மருத்துவத்தைப் பயன்படுத்தக் கூடியவனாக இல்லாமல், பொருளாசை கொள்ளாத வனாக இருக்க வேண்டும்.

மருத்துவனின் அன்புடைமை

மருத்துவத்தின் மீதும், பிணியாளர் மீதும் ஆர்வமும் இரக்கமும் உடைய ‘அன்புடையவனாக’ இருக்க வேண்டும்.

மருத்துவனின் கல்வி

வன்மையான, ஒன்பது வகை உலோகங்கள், ஒன்பது வகைப் பாடாணங்கள், இருபத்தைந்து வகை உப்புகள், நூற்றிருபது வகை உபரசங்கள், முன்னூற்றுக்கும் மேற்பட்ட கற்பவகைகள், ஆயிரத்து எட்டுவகை மூலிகைகள் ஆகிய, இவற்றின் வழிமுறைகளைக் கண்டறிந்தவனாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட மருந்துப் பொருள்களின் குற்றங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் அறிந்திருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியின் முதிர்ச்சி

மருந்துப் பொருள்களில் இயற்கையாக உள்ள மாசுகளான கசடுகளை நீக்கும் சுத்திமுறைகளை அறிந்து, பல்வேறு வகையான செய்முறைகளால் – புடமுறைகளால் பக்குவப்படுத்தி மருந்துகளாக உருவாக்க வேண்டும். எந்தெந்த மருந்துகள் எந்தெந்த நோய்க்கு உரியதென்று அறிந்தறியும் ஆராய்ச்சி அறிவுடையவனாக இருந்து, மருத்துவ நெறிகளுக்குக் கட்டுப்பட்டு, அதன் வழியில் மருத்துவம் செய்யும் மருத்துவனே மருத்துவ ஒழுக்கமுடைய மருந்துவனாகக் கருதப்படுபவன் ஆவான்56 என்பர்.

மருத்துவனுக்கு வேண்டிய ஈகைக்குணம்

வாதமுறையில் மருத்துவம் செய்யும் மருத்துவர்கள், உலோக மாற்று முறைகளைப் பயன்படுத்திப் பொருள் தேட முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்ய நேர்ந்தால், தேடிய பொருள்களை ஏழை, எளியோர்க்கும், வறுமையுற்றவர்களுக்கும், நோயாளிகளுக்கும், உதவ வேண்டும். அவர்களுக்குத் தானமாக ஆடை, உணவு, பொருள் முதலிய வற்றால் உதவி புரிய வேண்டும்57 என்று குறிப்பிடுவதிலிருந்து, மருத்துவ ஒழுக்கத்தினால் மருத்துவம் சிறந்தோங்குவதுடன் மருத்துவக்கலை தவறான முறையில் பயன்படுத்தப் படுவதைத் தவிர்க்கும் பொதுநல நோக்கமும் உள்ளடங்கியிருப்பது தெரியவரும்.

மருத்துவரின் சீருடை

வாழ்க்கை வசதியும் செல்வச் செழிப்பும் மிக்கவர்கள் மிடுக்கான ஆடை அலங்காரங்களையும், பொன், முத்து, மணியாரங்களையும் அணிந்து, தங்களின் வளத்தையும் செழிப்பையும் மற்றோர்கள் அறியச் செய்ய அலங்கரித்துக் கொள்வர். அத்தகைய ஆடை அலங்காரங்கள் மருத்துவம் செய்யும் மருத்துவர்களுக்கு உரியதாக ஆகாது என்பதால், மருத்துவர்கள் எவ்வாறிருக்க வேண்டுமென்று சீருடை முறை பரிந்துரைக்கப்படுகிறது.

மருத்துவர்கள் சிவப்பு வண்ணத்தை உடைய ஆடைகளையும், புள்ளிகளை உடைய ஆடைகளையும், மணந்தரும் மணப்பூச்சு களையும், பட்டாடை போன்ற உயர்ந்த ஆடைகளையும், துறவிகள் அணியும் மரவுரிகளையும் அணியக் கூடாது. இவை மருத்துவருக்கு ஆகாத உடைகளாகும். வெண்மையானதும் தூய்மையானதுமான துகிலினாலான ஆடைகளை அணிய வேண்டும்58 என்பர்.

மருத்துவர்கள் அணிகின்ற ஆடைகள், மருத்துவரைக் காணும் நோயாளிகளுக்கு மனத்தளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்க வேண்டும். சிவப்பு வண்ணம் மனத்தைப் பாதிக்கும் என்பதால், அந்த வண்ணத்தையும் கண்ணில் உறுத்துதலை ஏற்படுத்தும் என்பதால் புள்ளிகளை உடைய ஆடைகளையும், மரவுரி தரிப்பவர் துறவி என்பதால், துறவி எதையும் எதிர்பார்க்காமல் தான் மேற்கொண்ட வழிப்படியே செல்பவர் என்னும் கருத்து நிலவுவதால், அவர் மருத்துவம் முறையாகப் பார்க்கக் கூடியவர் என்னும் நம்பிக்கை தோன்றாது என்பதனால் இவ்வகையான ஆடைகள் வேண்டாமெனக் கூறப்பட்டது.

வெண்மையான தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவ ரானால், அவரைக் காணும் நோயாளர், அவரைச் சார்ந்தோர் அனை வருக்கும், அவரின்பால் நம்பிக்கையும் நன்மதிப்பும் தோன்றும். நோயைத் தீர்ப்பதற்குத் துணைபுரிவது மனமும் நம்பிக்கையும் காரணம் என்பதனால், தூய வெண்ணிற ஆடை மருத்துவர்க்கு உரியதாகக் கூறப்பட்டது.

சித்த மருத்துவ முன்னோர்கள் விருப்பம்

சித்த மருத்துவம் நின்று நிலைத்திருக்க வேண்டுமானால் சித்த மருத்துவப் பரம்பரை நல்லொழுக்கமும் நல்லெண்ணமும் கொண்டிருக்க வேண்டும். மருத்துவ மரபு சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறிருந்தால் தான் மருத்துவம் புகழுடையதாக இருக்குமெனக் கருதினர். அதனை அடிப்படையாகக் கொண்டே மருத்துவம் பயில்வோர்க்கு மருத்துவ விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

தான் என்னும் அகந்தையும் செருக்கும் கொண்டவர்கள் மருத்துவத் துறைக்கே இழுக்கானவர்கள் என்பது மருத்துவ முன்னோர்களின் விருப்பமாக இருந்திருக்கிறது.

மருந்துகளைச் செய்யும் போது ஒரு சில தவறுகள் நேர்ந்தால் செய்த மருந்து அனைத்தும் கெட்டுவிடும். அதனைக் கண்டு மனம் கலங்காமல் மீண்டும் தவறு நேராமல் மருந்து செய்யும் பக்குவ மடைந்தவர்களுக்குக் கற்பம், தீட்சை முறைகளைக் கற்பிக்கலாம்.

கற்பம்,தீட்சை முறைகளைக் கற்று அவற்றை முறையாகப் பயன்படுத்தி, பணிவுடன் மருத்துவம் செய்பவர்களுக்கு, பூரணத்தின் கரு, பிரணாயாமத்தின் கரு ஆகியவற்றைக் கற்பிக்கலாம்.

பூரணம், பிரணாயாமத்தைப் பாதுகாக்கின்ற முறையை

அறிந்த பின்பே, இரசமுறை, வேதை முறைகளைக் கற்பிக்க

வேண்டும்.

கற்பத்தின் வழியில் ஒழுக்கமுடையவர்களாக இருப்பவர்களுக்கு மூதண்ட இளகம், தைல முறைகளைக் கற்பிக்கலாம்.59 என்று, மருத்துவத்தின் அனைத்து முறைகளையும் ஒரே நேரத்தில் ஒருவருக்குக் கற்றுத்தராமல், அவரவர்கள் தகுதியையும் குணத்தையும் கண்டறிந்த பின்னரே ஒவ்வொன்றையும் கற்றுத்தர வேண்டுமென்று, மருத்துவக் கல்வியில் அடுக்கு முறைகளை வைத்திருப்பது போற்றுதலுக்குரியது எனலாம்.

சித்த மருத்துவ முன்னோர்கள்

பண்டைய காலத் தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்த மருத்துவ முறைகள், ஆயுள் வேதம், ‘மருத்துவம்’ என்னும் இரு பெயர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த மருத்துவ முறைகள் தென்மொழி, வட மொழிகளைக் கற்றவர்களால் கற்பிக்கப் பட்டு வந்தன. கற்பிக்க வந்த ஒவ்வொருவரும் தத்தமக்குத் தெரிந்த வரையில் மருத்துவ முறைகளை விரித்துரைத்தும் நூல்வடிவில் எழுதியும் வந்தனர். இம்முறையில், ஆயுள் வேதம் கற்பித்தவர்கள் வடமொழியைச் சார்ந்தும், மருத்துவத்தைக் கற்பித்தவர்கள் தென் மொழியைச் சார்ந்தும் இருந்தனர். இந்த இருமுறை கல்வியாளர் களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டன. தமிழ் மொழிச் சார்புடைய மருத்துவர்கள் தங்கள் இடையறாத முயற்சியினால் மருத்துவ முறைகளைச் சிறந்த முறையில் மேம்படுத்தினர். மூலிகைகளினால் ஆன மருந்துகள் நோய்களைத் தீர்க்கப் போதுமானவையாக இல்லை என்பதை அறிந்து, அதற்கும் மேலான வழிகளை ஆராய்ந்து உலோகம், உபரசம், உப்பு, பாடாணம் என்பவற்றைக் கண்டறிந்து, அவற்றையும் சிறந்த மருந்துகளாகப் பயன்படுத்தினர்.

"" சூத கந்தி தாதுபற்பஞ் சொன்னநாட் டார்சிகிச்ø

ஓதரிய மூலியம்மண் ணோர்சிகிச்சை வேதடரும்

சந்திரசா ராக்கினி நி சாசரச்சி கிச்சை யென்றே

முத்தரத்த தாகும் மொழி''60

என, தேரையர் உரைக்கக் காணலாம்.

சித்த மருத்துவத்தின் தோற்றம்

சித்த மருத்துவம் கூறும் நூல்களில் தொண்ணூ<று விழுக்காட்டு அளவு நூல்கள், நூலின் முகப்பிலோ இடையிலோ நூலின் வழிமுறைகளை உரைக்கக் காண்கிறோம். அவ்வாறு உரைக்கப் படுபவை அனைத்தும் மருத்துவத்தின் தோற்றம், இறைவனிடமிருந்து அறிந்தது என்றே உரைக்கக் காண்கிறோம்.

சித்த மருத்துவத்தின் அறிவியல் அடிப்படைகள்

சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் நவீன அறிவியலோடு ஒத்த அமைப்பில் உருவானவை. ஆழ்ந்து நோக்கும் போது அறிவியலின் அளவை இயலிலின்று (ஃணிஞ்டிஞி) எந்த விதத்திலும் மாறுபடாதவை. காண்டல் (ணிஞண்ஞுணூதிச்tடிணிண), கருதுதல் (டிணஞூஞுணூஞுணஞிஞு), கருதுகோள் (டதூணீணிtடஞுண்டிண்), என்னும் மூன்று பிரமாணங்கள் (ஞூச்ஞிtணிணூண்) அடிப்படையானவை. ஒப்புறை, எதிருறை, கலப்புரை என்னும் மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்க வல்லதாக அமைந்துள்ளது சித்த மருத்துவம்61 என்று, அறிவியலோடு இயைந்து செல்வது ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், சித்த மருந்தியல் தத்துவப்படி, உடலானது ஐம்பூதங் களாலும், அப்பூதங்களின் தொகுதியான மூன்று உயிர்த் தாதுகளாலும் (வாதம், பித்தம், ஐயம்) ஆனது. இம்மூன்று தாதுகளும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவாதிக் குறைகளாலும், கோள்களின் பேதங் களாலும், தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை அடையும். வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்றின் நிலைப்பிறழ்ச்சியால் நோய்கள் தோன்றும். வாதம் இயக்கும் (ண்tச்ணூtஞுணூ), பித்தம் இயங்கும் (அஞிஞிஞுடூஞுணூச்tணிணூ), ஐயம் நிறுத்தும் (ஆணூஞுச்டு), மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந்நிலைப் பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை அனுமானமாகக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படும். இந்த அனுமானங்களே இன்ன நோய் என்று தீர்மானிக்க உதவும். மருந்தைத் தீர்மானிக்கும் போதும் இத்தகைய அளவையியல் தத்துவமே பயன்படுத்தப்படுகிறது. மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே. சித்த மருத்துவம் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர்.62

“நஞ்சை அமுதாக்கும் வித்தையை நம் சித்தர்களிடம் காண்கிறோம். நவபாடாணங்களில் ஒன்றான நாபி (அஞிஞிணிணடிtதட் ஞூஞுணூணிது) ஒரு பொல்லாத நஞ்சு. அதனைக் கோமூத்திரத்தில் இடுவதன் முன்னரும், இட்ட பின்னரும் வேதியல் நிலையில் சோதித்துப் பார்த்தனர். 24 மணி நேரம் கோநீரால் சுத்தியடைந்த நாபி இதயத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு முன், இதயத்துடிப்பை, குருதி அழுத்தத்தைக் குறைத்து உயிரைக் கொன்று விடுகிறது. மாஸ்கர் (Mச்ண்டுஞுணூ), காய்ஸ் (ஞிச்டிதண்) எனபவர்கள், 1937இல் செய்த சோதனையில், நாபியில் அடங்கிய அக்கோனிடின் (அஞிணிணடிtடிணஞு) கோநீரால் தீமை குறைந்த அக்கோனிடினாக மாறுகிறது என்று கண்டு பிடித்தனர். வேதியல் மாற்றம் கோநீரால் ஏற்படுவதை அறியும் போது, சித்தர்களின் சுத்திமுறை விஞ்ஞான முறையில் அமைந்த ஒன்றே என்று அறிந்து மகிழலாம். 63 பழமையான சித்தர் அறிவியல் இக்கால அறிவியலோடு ஒத்திருக்கிறது என்பது புலப்படுவதுடன், சித்த மருத்துவமும் அறிவியல் மருத்துவமே என்பதும் விளக்கும்.

வெங்காரம் (ஆணிணூச்து), நவச்சாரம் (அட்ட்ணிணடிதட் ண்தடூணீடச்tஞு) இரண்டும் முறையே நாத பிந்தாக இணையும். அவற்றின் கூட்டுச் சரக்கு ஆற்றல் மிக்கது. வீரத்தோடு வெண்ணெய் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. ஆனால் மிருதார்சிங் பாதிக்கப்படுவதில்லை. மிளகும் சுக்கும் மித்ரு என்பர். சுண்ணம் தயாரிக்கும் போது சத்ருவால் அழித்து மித்ருவால் எழுப்புவர். ஆங்கில முறையிலும் மருந்தின் கலப்பில் ஒவ்வாமை (டிட்ஞிணிட்ணீச்tடிஞடூஞு) பற்றி அறிந்திருக்க வேண்டும். தீயகம் அடங்கிய பொருளோடு தீயகம் ஏற்கும் பொருளைக் கலந்துவிடின் வெடித்து விடலாம். சிலபோது ஒன்றோடு ஒன்று கலந்து நச்சுப் பொருள் தோன்றலாம். இது வேதிநிலையில் ஒவ்வாமை. சாராயத்தில் கலந்து செய்த மருந்தில் தண்ணீர் ஊற்றினால் நீரில் கரையாமல் வண்டலாகப் படியும். மேலும் மணம் குணம் முதலியவற்றாலும் பொருந்தாது போகலாம். அது பௌதீக நிலையில் ஒவ்வாமை. மலமிளக்கியுடன் மலத்தைக் கட்டும் பொருளைச் சேர்த்தால், மருந்தியல் விளைவில் ஒவ்வாமை தோன்றும். சிலபோது ஒவ்வாமையும் தேவைப்படலாம். ஒன்றின் செயல்திறனைக் குறைப்பதற்கோ மாற்றுவதற்கோ அவை உதவும். இது போன்ற கருத்து சித்தர்களிடம் மிகுதியாக உண்டு.

ஒப்புறை – ஒத்த குண மருந்து

எதிருறை – எதிர் குண மருந்து

கலப்புறை – இருவித மருந்து

என்னும் வகையில் வேறுபடுத்தி விளக்குதல் சித்தர் முறை. 64

மனிதருக்கு உண்டாகும் நோய்கள் யாவுமே வாதம், பித்தம், ஐயம் என்ற இம்மூன்றில் அடங்கும். இம்மூன்றும் நோயின் மூன்று முகங்கள். இம்மூன்றினுள், வாத நோய்கள் எண்பது வகைப்படும். பித்தம்

நாற்பது ஐயம், இருபது வாத பித்த ஐய மெனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று கலந்தும், உழன்றும் வேறுவிதமான தொழில்களைச் செய்து பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

உடம்பில் தோன்றும் நோய்களின் எண்ணிக்கை 4448. வகைப்படுத்தப்பட்ட நோய்கள் 360. சுர நோய்கள் 108 ஆகும். கொடிய நோய்களாகச் சுட்டப்படுகின்ற நூற்றியெட்டு சுர நோய்களில் முதன்மைப் பெறுவன முப்பது. இம் முப்பது நோய்களுக்கும் தலைவனாக விளங்குவது வாத, பித்த, ஐயம் என்னும் முத்தோட நோயேயாகும். 65

பசியின்மை என்பது (ஈதூண்ணீஞுணீண்டிச்) மிகக் கடும் நோய்களின் ஒன்றென்பது ஆங்கிலேய மருந்துவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட் டிருக்கிறது. இந்தக் கொடிய நோயானது பொதுவாகச் சொல்லின், ஆங்கில மருத்துவ முறைப்படி பயன்படுத்தப்படும் பெப்சின் (கஞுணீண்டிண), பிஸ்மத் (ஆடிண்ட்தtட) முதலிய பல மருந்துகளுக்கு முற்றும் கட்டுப் படாமலே இருக்கிறது. வைத்தியத் திருப்புகழ் கூறும் இஞ்சி இளகம் என்னும் மருந்தினாலோ பெரும்பான்மையும் பயனுண்டாகி வருகிறது. இந்தச் செரியாமை நோயே குன்ம நோயை உண்டாக்குவது. உண்மையில் இதனைத் தொடக்கக் குன்ம நோயெனச் சொல்லலாம். ஆகையால் தான், இந்தக் கடும் நோயின் சிகிச்சையைத் தொடக்கமாக (வைத்தியத் திருப்புகழ்) எடுத்துச் சொல்கிறது66 என்பதிலிருந்து, நோயின் ஆரம்ப நிலையை அறிந்து அதற்குரிய முறையில் மருத்துவம் செய்வது சித்த மருத்துவம் என அறியலாம்.

சித்த மருத்துவத்தில் நோய்த் தேர்வு முறை

நோய்த் தேர்வு

சித்த மருத்துவத்தில் ‘நோய் நாடி’–நோயைக் கண்டறியும் தேர்வுமுறை சிறந்து காணப்படுகிறது. நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன் நோயைக் கண்டறிய வேண்டும் என்பதே மருத்துவக் கொள்கை. நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முறை ‘நோய்த் தேர்வு முறை’ எனப்படும்.

நோயைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு வகை மருத்துவத்திலும் வெவ்வேறு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் காணப்படும் நோய்த் தேர்வு முறை, பிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் சிறந்த தேர்வு முறையாகவும் கருதலாம்.

எண்வகைத் தேர்வு முறை

சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடி, பரிசம், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன.

"" நாடிப்பரிசம் நாநிறம் மொழிவிழி

மலம் மூத்திரமிவை மருத்துவ ராயுதம்''

என்றும்,

“மெய்க்குறி நிறந்தொனி விழிநா விருமலம் கைக்குறி’’67 என்றும் குறிப்பிடுவர்.

எண்வகைத் தேர்வு என்பது பிணியை அறியும் முறையைக் குறிக்கிறது. உடலைப் பிணிப்பது நோய் என்பதனால், நோயைப் பிணி என்னும் சொல்லாலும் குறிப்பிடுவர். நோயறிதல் என்பது, நோயைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முறை எனலாம்.

நாடி

நாடி, தாது என்னும் பெயராலும் வழங்கப்படும். நாடி, வாதம், பித்தம், ஐயம் ஆகிய பொருளில் ஆளப்படும். உயிர்த்தாது உடற்தாதுகளைக் குறிப்பிடவும் தாது என்னும் சொல் பயன்படும்.

சுருங்கக் கூறின், நாடியைக் குறிக்கும் தாது, உடலில் உயிர் தங்கி யிருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ அதுவே நாடி அல்லது தாது எனப்படும். 68

தாது ஒன்றாயினும் அதன் தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாக அல்லது ஒன்றாகக் கூடிய மூன்று புரிகளாகக் கருதப்படு கின்றன. அவையே வாதம், பித்தம், ஐயம் எனப்படும். இவையே அண்டரெண்டமெல்லாம் நால்வகைப் பிறப்பு, எழுவகைத் தோற்றம், எண்பத்தி நான்கு நூறாயிரமாகிய எவ்வுயிர்க்கும் பொருந்தும்69 என்பர்.

நாடிகளின் தொகை

உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். அவற்றில் கரு உருவாகும் போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றுகின்ற நாடிகள் பத்து ஆகும்.70

நாடிகளின் எண்ணிக்கை

நாடிகளின் தொகை 72,000 ஆனாலும் அவற்றில் பெருமைதரும் நாடிகள் பத்து. அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, குகு, சங்கினி, அசனி, அலம்புடை, புருடன், சிங்குவை என்பன.

இப்பத்து நாடிகளிலும் மேலும் சிறந்தனவாகக் கருதப்படுவன மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழு முனை என்பன.71

நாடிகளும் இயங்கும் இயக்கமும்

நாடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் பொருந்தி ஒவ்வொரு முறையில் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.

1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.

2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.

3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.

4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.

5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.

6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.

7. அசனி – வலது காதில் நிற்கும்.

8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.

9. சங்குனி – குறியில் நிற்கும்.

10. குகு – அபானத்தில் நிற்கும்72

என்று நாடிகள் ஒவ்வொன்றும் உடலில் பொருந்தி இயங்கும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாயுக்கள்

நாடிகள் பத்து என்று உரைக்கப் பட்டதைப் போல, வாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால், நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும்.

வாயுக்கள் பத்து வருமாறு

பிராணன், அபானன், வியானன், உதானன், கூர்மன், தேவதத்தன், சமானன், நாகன், கிரிகரன், தனஞ்செயன் என்பனவாகும்.

வாயுக்களின் இயக்கம்

நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.73

வாயுக்களின் இயக்கம் விபரம்

1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலை, பிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டி, மூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.

2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.

3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.

4. உதானன் – கழுத்தில் நின்று உணவு, நீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.

5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.

6. தேவதத்தன் – கொட்டாவி, உடம்பு முறுக்கலை உண்டாக்கும்.

7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.

8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.

9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.

10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டை யைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.

பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்று, சிரசில் முட்டி, நெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும். மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்; வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர்.

இவ்வாறு, பிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும், நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும். இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்.

உயிர்த்தாதுகள்

நாடிகள், வாயுக்கள் போலத் தாதுகள் உடலை இயக்கும் ஆற்றல்களாக அமைந்துள்ளன. இத்தாதுகள் உடலில் குறைந்தால் உடலின் இயக்கத்தில் குற்றம் நேரும் என்பதால் இவை உயிர்த்தாதுகள் என அறியப்படும். அவை, இரசம், இரத்தம், தசை, கொழுப்பு, என்பு, மச்சை, விந்து என்பன வாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக உடலில் இயங்குகின்றன.74

1. இரசம் – உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவு தரும்.

2. இரத்தம் – உயிரைக் காக்கும்.

3. தசை – உடலைத் தாங்கும், அசைவு, பலந்தரும்.

4. கொழுப்பு – உடலிலுள்ள தசைச் சந்துகளையும் என்புச் சந்துகளையும் தூர்த்து நிரப்பும். நெய்ப்பசை யூட்டும்.

5. என்பு – உடலை உயர்த்தி நிறுத்தித் தாங்கும்.

6. மச்சை – என்புத் துளைகளில் நிரம்பும்.

7. விந்து – இனப் பெருக்கத்தை ஏற்படுத்தும்.

என்று ஏழு தாதுக்களின் இயக்கம் உரைக்கப்பட்டது. இவற்றினால் தாதுகள் உடலுக்கு எந்த அளவுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன என்பது விளங்கும்.

நாடி, வாயு, தாதுஇவற்றுக்குள்ள தொடர்பு

நாடிகள் பத்துள் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறப்புடையன. வாயுக்களை மேற்கண்ட மூன்று நாடிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இடகலை வாத நாடியாகவும், பிங்கலை பித்த நாடியாகவும், சுழுமுனை ஐய நாடியாகவும் குறிப்பிடப்படும். வாயுக்கள் பத்துள் அபானன், பிராணன், சமானன் ஆகிய மூன்றும் வாதம், பித்தம், ஐயம் ஆகிய நாடிகளுடன் இணைந்திருக்கும். அதேபோல, தாதுகள் ஏழின் குணங்களையும் நலன்களையும் அறிய வேண்டுமானால், வாத பித்த ஐய நாடிகள் எவ்வாறு இயல்பாகவும் இயல்புக்கு மாறாகவும் இயங்குகின்றன என்பதைக் கொண்டே அறிந்திட இயலும்.

எனவே, நாடி, வாயு, தாதுகள் ஆகியவை உடலை இயக்கவும், காக்கவும், தாக்கவும், அழிக்கவும், ஆக்கவும் காரணிகளாக அமைகின்றன என்பது பெறப்படுகிறது. இவற்றின் இயக்கம் சீராகவும், முறையாகவும் அமைந்தால் உடல் நோயற்று இருக்க வகையேற்படும். அவை சீராக அமையாமல் முறை தவறினால் நோயோ நோய்க்குரிய பிற குற்றங்களோ உடலுக்கு நேர வழியேற்படும்.

நாடிகளில் மூன்று

நாடிகளில் வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று நாடிகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. இம்மூன்று நாடிகள் உடலுக்கு உற்ற நோய்த் துன்பத்தினைக் கணித்தறிய உதவும்.

"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று''75

என்னும் திருக்குறள், மூன்று நாடிகள் குறைந்தாலும் மிகுந்தாலும் நோயை உண்டாக்குமென்று உரைக்கக் காண்கிறோம். அவ்வாறே, மருத்துவ நூல்களும் வாதம் முதலாக உடைய மூன்று நாடிகளாலும் நோய்கள் தோன்றும் என்கின்றன.

மூன்று நாடிகளும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் களைச் செய்யும் இன்றியமையாக் கூறுகளே யன்றி, நோய்களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருள் இட மாற்றமும், வெறியேற்றமும், தனித்தும், பிற தாதுகளோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள்; உண்ட பொருளின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர்; தசைகளின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய் போல் பயன் படுவது ஐயம். இவை, உணவின் செயல்களினாலும், ஒவ்வாமையாலும், இயற்கை மாறுபாட்டினாலும், மிகுதலும், குறைதலும் நேரும் பொழுது, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

மேலை நாட்டு மருத்துவர்கள் வாதம் முதலிய மூன்று நாடி களையும் இரத்தம் (ஞடூணிணிஞீ), ஐயம் (ணீடடூஞுஞ்ட்), பித்தம் (ஞிடணிடூஞுணூ), கரும்பித்தம் (ட்ஞுடூச்ணஞிடணிடூஞுணூ) என நால்வகை நீரகங்களாகப் (டதட்ணிணூண்) பகுப்பர்76 என்றதனால், மேலை நாட்டு அறிஞர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் சித்த மருத்துவ முன்னோர்களால் நாடிமுறைகள் அறியப்பட்டிருக்கின்றன.

நாடிகளின் செயல்கள்

நாடிகள் மூன்றும் உடலைக் காக்கவும், அழிக்கவும் செய்ய வல்லன என்பதை மருத்துப் பாரதம் விளக்குகிறது.

வாதம் படைப்புத் தொழிலுக்கும், பித்தம் காக்கும் தொழிலுக்கும், ஐயம் அழிக்கும் தொழிலுக்கும் உடையனவாகக் குறிப்பிடுவதை இயைபுடையதாகச் சித்த மருத்துவர் இரா. தியாகராசன் 77 கருதுகிறார்.

"" சூழ்ந்தது சுக்கிலத்திற் சுரோணிதங் கலக்குமன்று

பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திய குமிழி போல''78

என்று, மூன்று நாடிகளும் உயிரின் கருதோன்றும் போதே உயிரோடு சேர்ந்தே தோன்றுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவர்கள் நாடிகளைக் கண்டறிந்து, ஆராய்ந்து, நோய்களை அறிந்திடக் கூடிய இடங்களாகப் பத்து இடங்கள் குறிப்பிடப்படுகிறது. அவை மறைவிடம், குதிக்கால், சந்து, உந்தி, கை, மார்பு, கழுத்து, புருவமத்தி, காது, மூக்கு ஆகிய பத்து இடங்களைச் சார்ந்த உறுப்புப் பகுதி நரம்புகளில் மூன்று நாடிகளும் நடந்து கொண்டிருப்பதனால், அவ்விடங்களில் நாடியைக் கண்டு உடலின் குண நலனை

ஆராயலாம் 79 என்றுரைக்கப்படுகிறது.

நாடிகளை அறியுமிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் நாபிக் கூர்மமானது பெண்களுக்கு மேல் நோக்கியும், ஆண்களுக்குக் கீழ் நோக்கியும் இருக்கின்றமையால், கைகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு தோன்றும். அதனால், ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. 80 இது, நுட்பமான அறிவியல் உண்மையாகும்.

நாடிகளை ஆராயும்போது, கையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்க, முதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும், இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும், மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.

நாடி வேளை நேரம்

வாதம் பகலும் இரவும் 6 10 மணி

பித்தம் பகலும் இரவும் 10 2 மணி

கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 6 மணி

என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்தறியப் பட்டுள்ளன. இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் தொந்தமானாலோ, மாறுபட் டாலோ நோயோ மரணமோ உண்டாகு மென்று உணர்த்தப்படுகிறது.

நாடிகளும் காலமும்:

"" காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்

பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்

மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்''81

பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும், அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும், மாலை பத்து நாழிகை ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும். அஃதேபோல், ஞாயிறு மறைவிற்குப்பின் முன்னிரவு பத்து நாழிகை வாதமும், அதன்பின் நல்லிரவு பத்து நாழிகை பித்தமும், பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர். இதனை வாத, பித்த, ஐயம் ஆகிய நாடிகளின் சிறப்புக்காலம்’’82 எனவும் கூறுவர்.

நாடிகளும் மாதங்களும்

"" கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்

கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்

விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்

விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்

திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்

சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்

நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்

நலமாக மாதமுதல் நடக்குங் காணே.''83

கடகம் முதல் துலாம் வரை (ஆடிஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனிஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகைமாசி) ஐயம் வளர்ச்சி பெறும் என்பர்,

நாடிபார்க்கும் மாதம், வகை:

"" சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்

அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்

மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி

வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே''

"" தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்

மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்

தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று

நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.''84

சித்திரை வைகாசியில் ஞாயிறு உதயத்திலும், ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகையில் நண்பகலிலும், மார்கழி, தை, மாசியில் மாலை எற்பாடு வேளையிலும், பங்குனி, ஆவணி, புரட்டாசியில் இரவிலும் நாடி களைக் கணிக்க நவின்ற நேரமாகும் என்பதனால், இயற்கையில் ஏற்படுகின்ற தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் இயக்கம் அமைந்திருக்குமென அறிய முடிகிறது. வாத, பித்த, ஐய நாடிகளின் பண்பிற்கு ஏற்றவாறு இரவில் ஐயமும், காலையில் வாதமும் நண்பகலில் பித்தமும் ஆட்சி புரிவதாகக் கருதலாம். அதே போல,

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய திங்களில், வாதம் வளர்ச்சி பெறும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய திங்களில், ஐயம் வளர்ச்சி பெறும். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய திங்களில் பித்தம் வளர்ச்சி பெறும். அவ்வாறே, சிறு பொழுதான ஆறில், வைகறையில் வாதமும், நண்பகலில் பித்தமும் எற்பாட்டில் ஐயமும் சிறப்புறுவதாகக் கூறப்படும்.

இயற்கையும் மாந்தர் தம் உடலும் இயைந்து இயங்கும் தன்மையன. ஆதலின் நாடிகளும் இயற்கைக்கு ஏற்ப இயைந்து இயங்குவதாகக் கருதலாம்.

நாடி தெரியாத பேர்கள்

பெண்போகர், நீண்டகால நோயாளி, குதிரை ஏற்றம் செய்தோர், யானை ஏற்றம் செய்தோர், வழி நடைப்பயணி, பேருண்டி உண்டோர், போதைப் பொருள் கொண்டவர், நீர்ப்பாடு, நீரிழிவு, பெருநோய், வீக்கம் ஆகிய நோய்களுற்றோர், அத்தி சுரத்தால் இளைத்தவர், பயமுற்றோர், துன்பமுற்றவர், விடந் தீண்டியவர், ஓட்டமுற்றவர், அளவுக்கு மிஞ்சிப் புசித்தவர், சூல் கொண்ட பெண், மாதவிடாயான பெண், பெரும்பாடுற்ற பெண், அதிகம் தூங்கியோர், எண்ணெய் தேய்த்து முழுகியவர், சினங்கொண்டோர், மோகங் கொண்டோர், முதிர்ந்த வயதினால் இளைப்புற்றவர், மதங்கொண்டோர், பெருத்த உடலினர், என்பு முறிந்தோர், சோகை நோயினர், பிணத்தைத் தொட்டோர், வாந்தி, விக்கல் எடுத்தோர், விரத மிருப்பவர், மழையில் நனைந்தோர், இசைப் பாடகர், களறி ஆடுவோர், நாட்டியமாடிக் களைப்புற்றோர், மூச்சுப் பயிற்சி மேற்கொண்டோர் ஆகிய இவர்களது நாடி நடை விரைவு கொண்டதாக இருக்குமாதலினால் நாடி நடையைக் கணித்தறிவது அரிதாம்.

மேலே குறிப்பிடப் பட்டிருப்போரில் பெரும்பாலோர் மெய்ப் பாட்டுணர்ச்சியால் அதிவேக இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு அதிவேக இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற அந்த வேளையில் நாடியைக் கணித்தறிதல் கூடாது என்றும், கணித்தறிவது கடினம் என்றும் கருதலாம். அந்த வேளையில் நாடித் தேர்வு நடத்துவது முறையற்ற மருத்துவத்திற்கு வழி காட்டியதாக அமையும் என்பதனால், நாடி தெரியதாக பேர்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பூத நாடி:

வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல.

“நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’’85

என்பதற்கிணங்க, நாடி நூல்கள் அனைத்தும் பூத நாடியைக் குறிப்பிட வில்லை. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறிச் செல்கின்றன.

"" சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி

தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி''86

என்றதனால், ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும் சிறுவிரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி எனப்படும்.

ஆராயுமிடத்து வாத, பித்த, ஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப்படும் நாடி பூதநாடி எனத் தெரிகிறது.

இவ்வாறாக மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகப் பூதநாடியும் நடக்கின்றவனுக்குச் சுக சன்னிமார்க்கமாகும். அவன் சாகான். காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.

பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்று பேருறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள்87 என்பதிலிருந்து, நாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருப்பது உணர்தற்குரியது.

குருநாடி:

வாத நாடியையே குருநாடி என்பர் சிலர். நாடிகள் தோறும் ஊடுறுவிப் பாய்ந்து அவற்றிற்கு இயக்கத் தன்மையைக் கொடுப்பதால் குரு நாடி என்கிறார்கள். எனவே தொழில் பற்றியே நாடிகளை வகுத்த போதிலும் குருநாடி எல்லா நாடிகளின் இயக்கத்திற்கும் காரண நாடியாக உள்ளபடியாலும், காரியத்தைச் செய்கின்றபடியாலும் இதனை உன்னதமாகவும், சிறப்பாகவும் போற்றினார்கள். மற்றும், இந்நாடி குற்றமடைவதில்லை. இதற்குக் குணமுமில்லை. ஆனால் ஐந்து நிலையாகிய விழிப்பு நிலை, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் என்பவற்றைக் கொண்டது. மற்ற நாடிகள் குற்றமடைந்த காலத்து அக்குற்றங்களுக்கேற்ப இந்நாடியின் நிலைமாறும். வாத, பித்த நாடிகளின் தொழிற்கேற்ப முக்கியமாக விழிப்பு நிலை, கனவு, உறக்கம் என்ற தொழில்களால் குருநாடியின் நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

குருநாடியில் உறக்க நிலை ஏற்பட்டு விட்டால் உடலுக்குச் சலனமில்லை. இந்நிலையைத்தான் பிணம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உயிர் வெளியாகி விடவில்லை. உயிர் அணுக்கள் உறக்க நிலையை அடைந்து விட்டது என்பது வெள்ளிடைமலை. ஆகவே, குரு நாடியை மருத்துவன் சாதாரணப் பயிற்சியினால் உணர வல்லன் அல்லன். யோக வல்லமையினால் தான் அறியமுடியும்.88 குருநாடி, வாத, பித்த, ஐய நாடிகள் மூன்றும் தராசு முனை போன்றதாகும்.

"" தம்முடன் வாத பித்த ஐய நடுவிலே தான்

தமரகம் போலாடி நிற்கும் குருவி தாமே''89

என்பதினால், குருநாடி வாத, பித்த, ஐய நாடிகளின் மத்தியில் தமரகம் போன்றது எனவும் விளங்குகிறது. ‘தமரகம்’ எனும் ‘இதயம்’ உடற்கு எவ்வளவு முதன்மையானதோ அதே போல குரு நாடியானது வாத, பித்த ஐயமாகிய உயிர்த்தாதுவுக்கு முதன்மையானது என்பதை அறிகிறோம். இதனை வேறுபடுத்திக் காண்பது எளிதன்று என்றதனால், குருநாடி, நாடிகளுக்கெல்லாம் தலைமை பெற்ற நாடியாகவும், மூலநாடியாகவும் ஆதிநாடியாகவும் விளங்குகிறது எனலாம்.

நாடி நடை

நோய் அற்றபோது ஒரு வகை நடையும், நோய் உற்ற போது ஒருவகை நடையும், நோயின் வேறுபாட்டிற்கு ஏற்ப நாடியின் நடையும் வேறுபட்டிருக்கும். இந்த நாடியின் நடை இம்மாதிரியிருந்தால் இந்த நோய் அல்லது இந்த நோய் வருவதற்குரிய அடையாளம் என அனுபவத்தின் மூலம் உணர்வர். இதைப் பயில்வதற்கு ஏற்றவாறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சி, புழுக்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி உவமைகள் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளன.

வாத நாடி

"" வாகினில் அன்னங் கோழி மயிலென நடக்கும் வாதம்''90

வாத நாடியானது இயல்பினில் அன்னம், கோழி, மயில், போல நடக்கும். உடலின் தன்மை மாறி நிற்குமானால் இந்நடையில் மாற்றம் ஏற்பட்டு நோயின் தன்மைக்கு ஏற்பச் செயல்படும். அவை, மண்டூகம் தாவுவது போலும், ஓணான் போலும், பாம்பு, அட்டை, வேலிக்குருவி, ஆமை போலவும் நடக்கும்.

பித்த நாடி

"" ஏகிய ஆமை அட்டை இவையென நடக்கும் பித்தம்''91

பித்த நாடியானது இயல்பினில் ஆமை, அட்டை போல நடக்கும். பித்த நோய்க்குறி தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை, நாகரிகமான அன்ன நடை போலும், மயில் போலும், தாரா போலும், மாடப் புறா, ஊர்க்குருவி போலும் , கருடப் போத்து, சிங்கம், பாம்பு, பிள்ளை குதிப்பது போல, மதயானை போல, சிறு காக்கை தூங்குவது போல, நடக்கும். 92

ஐய நாடி

"" போகிய தவளை பாம்பு பொல்லாத சிலேட்டுமந்தானே''93

ஐய நாடியானது இயல்பினில் தவளை, பாம்பு போல நடக்கும். ஐய நோய் தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை கோழியின் நடை, கொக்கினது உறக்கம், ஊர்க் குருவி, சிலந்திவலையினில் பூச்சி போல நடக்கும்.

பாம்பு நடையெனப் பதுங்கியும், அரணையினது வால் போலவும் ஐயநாடி நடையிருக்கும். 94

பூத நாடி

பூத நாடியானது இயல்பினில், கல்லெறிதல், ஆட்டுக்கிடா பாய்ச்சல், செக்கிடை திருகல், சீறுகின்ற மூஞ்சூறு, பந்தடித்து எழும்புதல், ஏற்றம் போல் ஏறி இறங்குதல் போல இருக்கும்.95 இதிலிருந்து மாறுபடும் போது,

பூனைபோல நடக்கும்96, வெள்ளெலி போல குன்றியும் 97ங

வண்டுபோல ஊர்ந்தும் 98, பாம்பு போல நெளிந்தும் 99

சங்கு போல ஊர்ந்தும்100, கார்வண்டு போல ஊர்ந்தும் 101

பூதத்தைப் போல ஊர்ந்தும்102, தேரை போல தாண்டியும் 103

காக்கைபோலக் குதித்தும் 104, நெருப்பு போல சுட்டும் 105

செக்குபோலச் சுற்றியும் 106, நடக்கு மென்றறியலாம்

என்பதனால், மருத்துவ நாடி நூலார் நாடித் தேர்வின் வளர்ச்சியையும், முதிர்ந்த நிலையையும் காட்டுவதாக அமைந்திருக்க காணலாம். பல்வேறு வகைகளைக் கொண்ட நாடியின் நடைகளை மிகவும் துல்லியமாக, வளர்ச்சியடைந்த நிலையிலுள்ள அறிவியல் கருவி களுக்கு ஈடாக, விரலைக் கொண்டு தொடு உணர்வினால் நோய்த் தன்மை, நோயுற்ற காலம், முதிர்ச்சி, மரணத்தின் எல்லை என்பவற்றை யெல்லாம் அறியும் வகையாக நாடித் தேர்வு அமைந்திருக்கிறது.

நாடிகளும் அளவுகளும்

நாடிகளை ஆராயும் போது அவற்றுக்கு உரிய அளவுகளின்படி அமையாமல் குறைந்தோ கூடியோ தோன்றுகின்றனவா என்று அறிவதற்கு நாடிகளின் இயல்பான அளவுகள் குறிப்பிடப் படுகின்றன.

வாத நாடி ஒரு மாத்திரை அளவும், பித்த நாடி அரை மாத்திரை அளவும், ஐயநாடி கால் மாத்திரை அளவும் என மூன்று நாடிகளின் அளவும் குறிப்பிடப் படுகின்றது. இந்த அளவுகளில் மூன்று நாடிகளும் தோன்றினால் உடலில் ஒரு குற்றமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.107 ஒரு மாத்திரை என்பது ஒரு கை நொடி அல்லது கண்ணிமைக்கும் கால அளவு ஆகும்.

நாடிகளுக்குரிய காலங்கள்

நாடிகளை எல்லா வேளையிலும், எல்லாக் காலங்களிலும் பார்த்தால் அதற்குரிய இயல்புகள் அறிய முடியாமற்போகும் என்பதால், நாடிகளுக்குரிய காலங்களாகச் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றில் உரிய காலத்தை உரைத்துள்ளனர்.

"" காலமே சேத்தும நாடி கட்டுச்சிப் பித்த நாடி

மாலையில் வாத நாடி வகை தப்பிப் பிதறி நின்றால்

... ... ... ... ... ... ... ...

நாலஞ்சில் மரணமென்று நன்முனி யருளிச் செய்தார்.''108

நாடித் தேர்வினால் அறியக் கூடிய நோய்கள்

நாடிகள் நடக்கும் இயல்பைக் கொண்டு உடலில் தோன்றிய நோய்களைக் கண்டறிவது மருத்துவத்தில் இயல்பானதாகும். நாடிகளைக் கொண்டு அறியப்படும் நாடிகள், இயல்புக்கு மாறாக நடந்தால் அது, தொந்தம் என்று குறிக்கப்படும்.

(டி) வாதம் கால், பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடிகள் தோன்றினால், வாந்தி, மந்தம், வயிற்றெரிச்சல், சுரம், கண்ணில் காந்தல், பாண்டு, மூலம் ஆகிய நோயும்,

செவி அடைப்பு, உடல் வெதுப்பு, உடல்வலி, உடல் நடுக்கம், மூத்திர எரிச்சல், போன்று உடலில் குணங்களும் காணப்படும். 109

(டிடி) வாதம் முக்கால், பித்தம் அரை, ஐயம் கால் என்னும் அளவில் நாடிகள் தோன்றினால், உடல் வேர்க்கும்; சீதளம் உண்டாகும்; மேகம் உண்டாகும்; உடல் தடிக்கும்; காலில் வெடிப்பு உண்டாகும். 110

(டிடிடி) பித்தம் அரை, ஐயம் அரை, வாதம் கால் என்னும் அளவில் நாடிகளின் நடை தோன்றினால், வாய் காந்தும்; வாயில் நீரூரும்; கண்ணுழலும்; இருமல் உண்டாகும்; கால்களில் வெடிப் புண்டாகும். 111

(டிதி) வாதம் ஒன்று, பித்தம் ஒன்று, ஐயம் ஒன்று என நாடி நடையிருந்தால்,

“சாவில்லை சாகாம லிருக்கலாகும்

சாத்தியத்தில் குணங்களப்பா யிதுகளெல்லாம்

சாவில்லை நோயில்லை வறுமையில்லை''112

என்றதனால், மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய உடலினர்க்கு இவ்வாறான நாடி நடை அமையுமென்று தெரிகிறது.

(தி) ஐயம் ஒன்று, பித்தம் கால், வாதம் கால் என்னும் அளவில் நாடி நடை அமைந்தால் காது அடைக்கும்; தலையில் வியர்வை உண்டாகும்; கண் மூக்கில் நீர் வடியும்; மயக்கம் உண்டாகும்.113

(திடி) வாதம் கால், பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடி நடை அமைந்தால், வாய்வு தொடர்பான நோய்கள் உண்டாகும்.114

(திடிடி) வாதம் ஒன்று, பித்தம் முக்கால், ஐயம் ஒன்று என்னும் அளவில் நாடி நடந்தால் தொப்புளுக்கும், தொண்டைக்கும் மூச்சிழுக்கும்; நெஞ்சடைக்கும்; உடல் முழுவதும் நோவும்; மரணம் நெருக்கத்தில் வந்து விட்டதென்று அறியலாம்.115

என்று நாடிகளின் தொந்தத்தால் பல நோய்களைக் கண்டறியும் குறிப்புகள் காணப்படுகின்றன. பெரும் பகுதி நாடிகள் மரணத்தின் அறிவிப்பைத் தெரிவிக்க கூடியதாகக் காணப்பட்டாலும், அவற்றின் அறிகுறியை அறிந்த பின்பு அதற்கான மருந்துகளைக் கொண்டு மரணத்திலிருந்து மீளுகின்ற வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

நாடிமுறைத் தேர்வின் மூலம் அறியக் கூடிய நோய்களாக மருத்துவ நூலார் குறிப்பிடுகின்ற வாத நோய்த் தொகை, பித்த நோய்த் தொகை, ஐய நோய்த்தொகை, தொந்த நோய்த் தொகை என்னும் நோய்கள் அனைத்தும் அறியலாம் எனத் தெரிகிறது.

நாடிகளை அறிக்கூடிய முறை, வகுப்பு, பயிற்சி, அடிப்படைகள் என எதுவும் நாடி நூல்களில் காணப்பட வில்லை. அல்லது கிடைத் துள்ள நாடி நூல்களில் அவ்வாறான பாடல்கள் இணைக்கப் பெற வில்லை.

நோயறியும் முறைகளில் நாடி முறை மிகவும் துல்லியமாகக் கணிக்கப்படுவதாகக் கருத்து நிலவுவதால், அவை பற்றிய அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சித்த மருத்துவத்துக்கு மட்டுமல்லாது உலக மருத்துவத்துக்கே அது உதவியாக இருக்கும்.

நோயாளிக்கு உற்ற நோயின் தன்மையை அறியவும், நோயின் வகையை அறியவும் எண்வகைத் தேர்வுகள் பயன்படுகின்றன. அவ்வாறான தேர்வுகள் மூலம் நோயாளியின் நிலையை அறிய முயல்கின்றனர். அவ்வகையில் ஒலி, உணர்வு, வடிவம், சுவை, நாற்றம், மலம், மூத்திரம், எச்சில், விந்து ஆகிய ஒன்பதைத் தேரையர் நூல் விவரிக்கக் காண்கிறோம். அந்நூல் காட்டும் முறைகள் வருமாறு:

1. ஒலித்தேர்வு

நோயுற்றவர் பேசுகின்ற போது அவரின் பேச்சு அவரின் இயல்பு நிலையினிலிருந்து மாறுபட்டு, வீணையினது நாதத்தைப் போலும், கின்னரி இசைப்பது போலவும், குழல் இசைப்பது போலவும் சன்னமாகவும், நாயின் சத்தத்தைப் போலவும், ஈச்சு கொட்டுகின்றதைப் போலச் சத்தமும், மலை எதிரொலிப்பதைப் போன்ற ஓசையும், கிணற்றில் பேசுவது போலவும், எக்காளம் போன்ற ஓசையும், பேரியம் கொட்டுகின்றதைப் போன்ற முழக்கமும் இருக்குமேயானால் வீணை யிசைக்கு ஒரு நாழிகையிலும், கின்னரத்திற்கு பத்து நாழிகையிலும், குழலோசைக்கு நூறு நாழிகையிலும், நாயோசைக்கு ஆயிரம் நாழிகையிலும், ஈச்சு கொட்டுகின்ற ஓசைக்கு இரண்டாயிரம் நாழிகையிலும், மலையோசைக்கு மூவாயிரம் நாழிகையிலும், எக்காளத்திற்கு நாலாயிரம் நாழிகையிலும், கிணற்றோசைக்கு ஐயாயிரம் நாழிகையிலும், பேரிய வோசைக்கு ஆறாயிரம் நாழிகையிலும், இறுதி வரும் என்று உரைக்கலாம்.

"" வீணையிசை நத்தோசை வேயோசை நாயோø

வீணையிசை நத்தோசை வெற்போசைவீணையிø

தாரையியம் பேரியியந் தப்பாதொன் றாதிலக்கந்

தாரையியம் பேர்கலைவி தான்''116

என்பதனால், ஒலித்தேர்வு முறையினால் நோயைக் காணாமல் நோயாளிக்கு இறுதி நாள் எத்தனை நாழிகையில் வரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடற்குரியது.

2. உணர்வுத் தேர்வு

நோயாளியை மருத்துவன் தொடுகின்ற போது, மருத்துவனின் உணர்வில் நோயாளியின் உடல், முதலையினது முதுகைப் போல இருக்குமானால் பன்னிரண்டு நாளிலும், ஆமையினது முதுகு போல இருக்குமானால் ஐம்பத்தாறு நாளிலும், மீனினது வால்புறம் போல இருக்குமானால் நாற்பத்தைந்து நாளிலும், குளிர்ச்சி அதிகமாயிருக்கு மானால் பன்னிரண்டு சாமத்திலும், வெப்பமும் சீதளமும் தொந்தித்து இருக்குமானால் ஐம்பத்தாறு சாமத்திலும், அதிக காங்கை இருக்கு மானால் நாற்பத்தைந்து சாமத்திலும், மறைவிடத்தைப் பார்க்கும் போது யானைத் தோலைப் போல வன்மையாயிருந்தால் பன்னிரண்டு நாழிகையிலும், மரத்தைப் போன்றிருந்தால் ஐம்பத்தாறு நாழிகை யிலும், கல்லைப் போன்றிருந்தால் நாற்பத்தைந்து நாழிகையிலும் இறுதிவரும். இரத்த நாளமானாது தாமரைக் கொடியின் முள்ளைப் போலிருக்கு மானால் பன்னிரண்டு விநாடியிலும், தச்சு உளிபோல கூர்மையாக இருக்குமானால் ஐம்பத்தாறு விநாடியிலும், ஆரம்போலக் கருக்குடன் இருக்குமானால் நாற்பத்தைந்து விநாடியிலும் இறுதி வருமென்று உரைக்கலாம்.117

உணர்வுத் தேர்வு முறைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்ற தோலில் தோன்றும் வேறுபாடுகள் அனைவராலும் அறியக் கூடியதாக இருந்தாலும், அவ்வாறு தோன்றுவதற்குரிய அடிப்படைகள் என்னவென்னு அறியமுடியவில்லை. அறிவியல் அடிப்படையாக அமைகின்றனவா அல்லது அனுபவம் அடிப்படையாக அமை கின்றனவா என்பது கண்டறியப்பட வேண்டிய தெனலாம்.

3. வண்ணத் தேர்வு

நோயாளியைக் காணுகின்ற மருத்துவன் கண்களுக்கு, நோயாளி யின் வடிவம் சூரியனைப் போலச் சிவந்த வண்ணமும், மினுமினுப் பும் தோன்றுமேயானால் இரண்டு மாதத்திலும், சந்திரனைப் போல வெள்ளை நிறமுமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் மூன்று மாதத்திலும், செவ்வாயைப் போலச் சிவந்த நெருப்பு நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் நான்கு மாதத்திலும், வியாழனைப் போல பொன்னிறமென்னும் மஞ்சள் நிறம் தோன்று மேயானால் ஐந்து மாதத்திலும், வெள்ளியைப் போல வெண்ணிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஆறு மாதத்திலும், காரியைப் போலக் கருமை நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஏழு மாதத்திலும், உமையாள் போலக் கறுத்த பச்சை நிறமான நீலச் சாமள நிறத்துடன் மினுமினுப்பும் தோன்றுமேயானால் எட்டு மாதத்திலும், வண்ணம் தோன்றாமல் மினுமினுப்பு மட்டும் தோன்றுமேயானால் அந்த நிமிடமே இறுதி வரும் என்று உறுதியாகக் கூறலாம்.

“ என்றுமதி செவ்வாய் இரணியன்சுங் கன்காரி

யென்றுமதி செவ்வாய் இவையோடுமைஎன்றுமதி

அஞ்சுமா தக்கணமேல் ஆறுதிங்க ளாமினுக்கே

அஞ்சுமா தக்கணமே யாம்.''118

இச் செய்யுளில் கிழமைகளையும் அவற்றிற்குரிய கோள்களின் வண்ணத்துடன் ஒப்பிட்டுக் காட்டி, நோயாளியின் இறுதி நாள் எண்ணிக் காட்டப்பட்டுள்ளது. புதன் குறிப்பிடப்படவில்லை. அதற்காக உமை என்று உரைக்கப்பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது.

4. சுவைத் தேர்வு

நோயுற்றவர் அறுசுவைப் பொருள்களை உண்ணும் போது அந்தச் சுவை தோன்றாமல் வேறு சுவைதோன்றுவதாகக் கூறினால், அதனால் நோயுற்றவர் என்ன நிலையில் உள்ளார் என்பதைத் தெரிவிப்பதே சுவைத் தேர்வாகும்.

ஒரு சுவைப் பொருளை உண்ணும் போது, அதற்குரிய சுவை தோன்றாமல்,வேறு எந்தப் பொருளை உண்டாலும் அந்தச் சுவை தோன்றுவதாகக் கூறினால், நோயின் முதிர்ச்சியால் எத்தனை நாளில் இறுதிவரும் என்பதை அறியலாம்.

கசப்புச் சுவையை உண்ணும் போது கசப்புத் தோன்றாமல் மற்றெந்தப் பொருளை உண்டாலும் கசப்பதாகக் கூறினால் ஏழு நாளிலும், இனிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு திங்களிலும், புளிப்புச் சுவை தோன்றாவிட்டால் பதினைந்து நாளிலும், காரச் சுவை தோன்றாவிட்டால் அரை நாளிலும், கரிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாளிலும், துவர்ப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாழிகையிலும் இறுதி வருமெனலாம். நோயாளியைப் பற்றிக் கொண்ட நோய் உயிரை வாங்கிக் கொண்டு போக நினைத்திருக்கிற காலத்தை இவ்வாறு அறிய வேண்டும்119

இச்சுவைத் தேர்வு மூலம் நோயாளியின் நிலைமையை மருத்துவர் மட்டுமல்ல, மற்றவர்களும் அறியக்கூடியதாக அமைந்திருக்கக் காணலாம். நோயாளியின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து நிலை மையை அறிய உணர்த்தப் பெற்ற இவ்வாறான முறைகள் அரியவை யாக உள்ளன.

5. நாற்றத் தேர்வு

மலர்களிடத்து எழுகின்ற மணத்தை நோயாளி நுகர்ந்து பார்த்து, அந்த மலருக்குரிய மணம் தோன்றாமல் வேறு மணமாகத் தோன்றுவ தாகக் கூறினால் நோயாளியின் நிலையை அறிவிப்பது நாற்றத் தேர்வாகும்.

மூங்கிற்பூ மணம் அறியாவிட்டால் ஏழு வினாடியிலும்,

வேங்கைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாழிகைக்குள்ளும்,

தாழம்பூ மணம் அறியாவிட்டால் ஏழு சாமத்திற்குள்ளும்

அத்திப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாளிலும்,

கொன்றைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு மாதத்திற்குள்ளும்,

சிறுசண்பகப்பூ மணம் அறியாவிட்டால் பதினான்கு மாதத்திலும்,

மராமரப்பூ மணம் அறியாவிட்டால் மூன்று ஆண்டிற்குள்ளும்

இறுதி வருமென்று அறிந்து பார்த்துத் துணிவுடனே உரைக்க வேண்டும்.120 என்று உறுதியாக உரைப்பதைக் கொண்டு மருத்துவ நூலாரின் ஆழ்ந்த புலமையும் ஆய்வும் தெளிவாகிறது.

6. மலத் தேர்வு

நோயாளியின் மலம் எந்த வடிவிலும், வண்ணத்திலும், தன்மை யிலும் இருக்கிறது என்றறிந்து நோயாளியின் நிலையை அறிவிக்கிறது.

வெள்ளாட்டுப் புழுக்கையைப்போல உலர்ந்து வரண்டிருந்தால், இறுதி அருகிலுள்ள தெனலாம். சற்றுக் குழம்பு போலிருந்தால் மிக நன்று. போதுமான நீர்த்தன்மையுடையதாய் கடினமுமில்லாமல், தளர்ச்சியு மில்லாமல், வெண்மையாயுமில்லாமலிருந்தால் மிக நன்று. செம்பு நிறம் மத்திமமாகவும், கறுப்பு நிறம் தீயதாகவும் இருக்கும்.121 இத்தேர்வு அதிக ஆய்வும் விளக்கமுமில்லாமல், சாதாரணத் தோற்றத் தைக் கொண்டு பொதுவாக உணரப்படும் கருத்தைப் போலுரைக்கப் பெற்றவையாகும்.

7. நீர்த் தேர்வு

நோயாளியின் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அறியப்படுகின்ற கருத்து இங்கு விளக்கப்படுகிறது.

“ மாணிக்கம் போன்று சிவப்பாக இருந்தால் அசாத்தியம்

வெண்ணிறமானால் பொல்லாங்கு. தேன் போன்றிருந்தால் சாத்தியம்

ஆனாலும் நாளாகும்.

பொன்னிறமானால் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை''122

இங்குக் குறிப்பிடப் பெற்ற நான்கு வகைகளில் இரண்டு அசாத்தியம் இறுதி நிச்சயமென்றும், இரண்டு சாத்தியம் ஆனாலும் நாளாகு மென்று ஒன்றிலும், மற்றொன்றில் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை என்பதைக் கொண்டு இறுதியாகக் கூறப்பெற்றதும் அசாத்தியம் போலவே தோன்றுகிறது. மூன்றாவதாகக் கூறப்பெற்ற தேன் போன்ற நிறத்தினை மட்டுமே நம்பி மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவிப்பதாக இருக்கிறது.

நீர்க்குறி

நோயாளியிடமிருந்து பெறப்படுகின்ற சிறுநீர் வண்ணத்தைக் கொண்டு, நோயாளியின் உடல்நிலை எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதைக் கண்டறியவே இவ்வாறான முறை சித்த மருத்துவத்தில் கையாளப் படுவதாகத் தெரிகிறது. சிறுநீரைக் கொண்டு ஆய்வுக்கூட முறையில் நோயை அறிய (அ) உடலில் இருக்க வேண்டிய சத்துப் பொருள்கள், உயிர்ப் பொருள், தாதுப் பொருள் போன்றவை இருக்கின்ற அளவு என்ன என்று கணித்தறியப் பயன்படுகிறது. இவ்விரண்டு வகையிலும் சிறுநீரைப் பயன்படுத்தினாலும் கண்டறியப்படும் அடிப்படையில் வேறு வேறாகத் தோன்றும்.

சித்த மருத்துவம் ஆராயும் சிறுநீர்த் தேர்வு முறையில், சிறுநீரின் அடிப்படையில் மஞ்சள், சிவப்பு, பச்சை, கறுப்பு, வெண்மை என்னும் ஐந்து வண்ணங்கள் கொள்ளப்பட்டு, இவற்றின் பிரிவுகளாக இருபத்தொறு வண்ணங்கள் ஆராயப்படுகின்றன.

சிறுநீரின் பொதுத் தன்மையாக நிறம், எடை, நாற்றம், நுரை, குறைதல் என்னும் ஐந்தினைக் குறிப்பிடுவர்.

சிறுநீர்த் தேர்வினால், உடலின் வெப்பக் குணங்களும், அதனால் உண்டாகக் கூடிய நோய்களும், வாதம், பித்தம், ஐயம் ஆகியவற்றினால் உண்டாகக் கூடிய உடலின் மாற்றமும் அறிப்படுகிறது.

சிறுநீர்த் தேர்வினால் கருப்பை, ஆண்குறியில் புண், கல்லடைப்புப் போன்றவற்றை அறியக் கூடும்.

“ காணிதில் சீழும் கலந்து இழிமணம் உறின்

கருப்ப நாபிகள் உளும் காமநா ளத்துளும்

விரணமுண்டு இன்றேல் எய்தும் அஸ்மரி யலது

இருத்தலே திண்ணம் எனமனத்து எண்ணே.''124

சிறுநீரில் சீழும் நாற்றமும் வீசினால், கருப்பை, கொப்பூழ், ஆண் குறியில் புண்ணும், கல்லடைப்பும் திண்ணம் என்கிறது.

நெய்க்குறி

சிறுநீரில் எண்ணெய் விட்டு பார்த்து சோதிக்கும் முறை வேறு மருத்துவத் துறைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறை சித்த மருத்துவத்துக்கு மட்டுமே உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்வகைத் தேர்வு முறைகளில் நெய்க்குறி என்னும் தேர்வு முறை சிறப்பானது என்கிறார் தேரையர். சிறுநீரில் ஒரு துளி அளவு நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் நீரில் எவ்வாறு பிரிகிறது என்றும், தோன்றுகிறது என்றும் கண்டு, நோயின் குற்றத்தைக் கண்டறிவது இம்முறை. எண்ணெய்த்துளி சிறுநீரில், பாம்பு, மோதிரம், முத்து, சங்கு, ஆசனம் போன்ற வடிவங்களாகக் காணப்பட்டால் அவற்றினால் நோய் கணிக்கப்படும். நோயாளியின் சிறுநீரும் எண்ணெயும் வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்தால், உயிர் நீங்கிவிடும் என்று கணிக்கப்படுகிறது.

சிறுநீரின் இயல்பான வண்ணம் தெளிந்திருந்தால் வாத நோயும், மஞ்சளானால் பித்த நோயும்,வெளுத்து நுரைத் திருந்தால் ஐய நோயையும் காட்டுவதாக இருக்கும். சிறுநீரின் இந்த வண்ணம் எக்காலத்திலும் மாறாமல் இருக்குமென்றும் உரைக்கப்படுகிறது.125

8. எச்சில் தேர்வு :

நோயாளியின் உமிழ்நீர் எட்டுவகையாகப் பிரிக்கப்பட்டு, அதனால் அறியப் பெறுவன உத்தமம், மத்திமம், அதமம் என்னும் மூன்று வகையில் கூறப்படுகிறது.

1. “உமிழ் நீரானது, இளநீர் போன்றிருந்தால் முதன்மையான உத்தமமென்றும்,

2. பால் போன்றிருந்தால் இரண்டாவது உத்தமமென்றும்,

3. வெண்ணெய் போல் அழுந்தி வெண்மையா யிருக்குமானால் மத்திமத்தில் முதன்மை யென்றும்,

4. தயிரைப்போல் அழுத்தமும் வெண்மையும் இருக்குமானால் மத்திமத்தில் இரண்டாவதென்றும்,

5. குதிரை வாயிலிருந்து வெளியாகும் நுரைபோ லிருந்தால் அதன்மத்தில் முதன்மையென்றும்,

6. களியைப் போலிருந்தால் அதமத்தில் இரண்டாவ தென்றும்,

7. ஓட்டிலே சுடப்படும் ஓட்டடை போலிருந்தால் அதமத்தில் முதன்மையான அசாத்தியமென்றும்,

8. மாவைப்போல வறட்சியாக இருக்குமானால் அதமத்தில் அதமமான அசாத்தியமென்றும், இறுதி மிகவும் அருகில் இருக்குமென்றும் எட்டு வகைகள் உரைக்கப்படுகின்றன.”126

விந்துத் தேர்வு:

விந்துத் தேர்வும் எச்சில் தேர்வைப் போலவே உத்தமம், அதமம், மத்திமம் என்கிற முறையில் உரைக்கப்படுகிறது. அதாவது நோயாளியின் விந்து,

1. “வெண்ணெய் போன்றிருந்தால் உத்தமத்தில் முதன்மை,

2. தயிரைப் போன்றிருந்தால் உத்தமத்தில் இரண்டாவது,

3. பால்போன்றிருந்தால் மத்திமத்தில் முதன்மை,

4. மோர் போன்றிருந்தால் மத்திமத்தில் இரண்டாவது,

5. தேன் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை,

6. நெய்போன்றிருந்தால் அதமத்தில் இரண்டாவது,

7. கள் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை ஆனாலும் பொல்லாங்கு (தீமை)

8. தண்ணீர் போன்றிருந்தால் அதமத்தில் அதமம். முயற்சி வேண்டாம் என்று கைவிடலாம்

என்று கூறப்படுகிறது. நோயாளியின் உயிர் பிரியும் போது இரத்தமும் விந்துவும் நீர்த்துத் தண்ணீரைப்போல வெளியாகும். அவ்வேளையில் நோயாளியைக் காப்பாற்ற முயல்வது வீண் என்று கூறப்படுகிறது.127

சித்த மருத்துவ நூல்கள் கூறும் நோய்கள்

மனித உடலுக்கு வயது ஆண்டு நூறு எனக் கணக்கிடப்படுகிறது. அதனை, மூன்று பாகங்களாகக் கொண்டு இளமைக் காலம், வாலிபக் காலம், முதிர்ந்த காலம் என மூன்று காலங்கள் பகுக்கப்படும். ஒவ்வொரு காலத்திற்கும் முப்பத்து மூன்று ஆண்டு, நான்கு மாதம் எனக் கொள்ளப்பட்டு இளமை ஐயகால மென்றும், வாலிபம் பித்த காலமென்றும், முதுமை வாத கால மென்றும் கணக்கிடப்படுகிறது.128

இம்மூன்று காலங்களையும் கொண்டு வாழ்வதே மனித உடல் வாழும் வாழ்நாளாகும். இது, நோய் நொடியற்று வாழும் வாழ்க்கை யைக் குறிப்பிடும். வாழும் நாளில் உணவாதிகளாலும், பழக்க வழக்கங் களினாலும், மரபு வழிகளாலும் நோய்கள் உருவாகி மரணம் நேர்வதும் உண்டு.

இயற்கையாக நூறு ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் உடலின் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்போது, இடையில் மரணம் எற்படுவது ஏன்? எக்காரணத்தினால் மரணம் ஏற்படும்? என்பதற்கு, தாய் தந்தை செய்த வினையால், பல நோய்களால், பஞ்ச பூதங்களால், போர் முறைகளான விபத்துகளினால், கருவிகளினால், வெட்டுக் குத்துக் காயங்களினால், நஞ்சினால், கடிகளினால், மிருகங்களால், புழுப்பூச்சிகளால், மேலும் பல காரணங்களினால் வயது குறைய மரணம் நேரும்129 என்பர்.

நூறு வயதை அடையாமல் மரணத்தைச் சந்திக்கின்ற அனைவரும் இயற்கை மரணத்தை அடைந்தார்கள் எனக் கருத முடியாது. அவர்கள் அனைவரும் செய்வினைகளினாலும், செயற்கையாகவும் மரணத்தை அடைந்தவர்கள் என்று சித்த மருத்துவம் கருதுகிறது.

நோய்களுக்குக் காரணங்கள்

காரண காரியத் தத்துவத்தின்படி வினைகள் என்னும் காரணத்தி னால் நோய்களென்னும் காரியம் தோன்றுகின்றன என்பது சித்த மருத்துவச் சிந்தனையாகும். எந்த நோயும் இயற்கையாக வந்ததில்லை என்பர்.

மனித உடல், ஏழுவகையான உடற் தாதுக்களால் அமைந்தது. அவற்றுக்கு, ஒழுங்கீனமான உணவு வகைகளை உணவாக அளிப்பது; வளி, அழல், ஐயம் என்னும் மூன்று உடல்சக்திகள் குறையவும், மிகவும் காரணமாகின்ற தொழில்களைச் செய்தல்; உணவு முறைகளால் உடல் சக்திகள், உடலுக்குள்ளிருந்து போராடச் செய்தல்; ஆகாத உணவு முறைகளால் தாதுக்களையும், உடல் சக்திகளையும் பழுதடைய செய்தல்; தாதுக்களின் செயலையும் சக்திகளின் செயலையும் மாறுபடச் செய்தல் போன்ற குற்றங்களினால் உடலில் தோன்றும் குணங்களின் காரியமே ‘நோய்’ எனப்படுகிறது.130

"" தன்வினை புறவினை தாழினும் மிகினும்

உடலைப் பிணிக்கும் உண்மையிது தாமே''131

என்னும் மருத்துவக் குறிப்பும் இதனையே வலியுறுத்தும்.

விந்து கெட்டால் வரும் நோய்கள்

உடல் தாதுகளில் ஒன்றான விந்து, மனித உடலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘விந்து கெட்டால் நொந்து போவான்’ என்னும் பழமொழி விந்தின் சிறப்பைக் குறிப்பிட்டுக் காட்டும். விந்து உடலில் இருக்கும் வரை உடலில் உயிரும் இருக்கும் என்பர். அத்தகைய விந்து அழிந்து விட்டாலோ அல்லது ஆற்றல் குறைந்து நீர்த்துப் போனாலோ மேக நோய் வந்தடையும். விந்து அழிந்தால் உடல் மிகுந்த வெப்பத்தை அடையும். அதனால் வாயு வரும். பின்னர் வாயு நோய் வரும். அதனைத் தொடர்ந்து சூலை, குட்டம், கிரந்தி, புற்று, ஒட்டியப்புண், கரப்பான், சிரங்கு, குன்மம், நீர்க்கட்டு, மலக்கட்டு, இளைப்பு நோய், இருமல், கொடிய பேதி, கிராணி, பாண்டு, காமாலை, பீனிசங்கள் ஆகியவற்றுடன் மேலும் பல நோய்களும் வந்து சேரும். அல்லது உடலைத் தாக்கி அழிக்கும். மேக நோயுடன் கபமும் பித்தமும் சேர்ந்தால் கண்களைத் தாக்கக் கூடிய கண்ணோய்கள் அனைத்தும் உண்டாகும். பித்தம் அதிகமானால் காய்ச்சல் வரும். மேகநோய் வந்தடைந்தால் அதன் துணை நோய்களான குடல் வாதம், திமிர்வாதம், குண்டல வாயு, கழல் வாதம், பச்சை வாதம், உள் நடுக்கம், நரித்தலை வாயு, பலவித புண்கள் எல்லாம் வந்தடையும்.132

வாத பித்த ஐய நோய்கள்

வாதம், பித்தம், ஐயம் என்னும் மும்மூலங்களினால், பொறியிலும் சிரசிலும் சூடுண்டாகும். அதனால் கனன்று எழுகின்ற வாயுவினால் சூலை நோய் உண்டாகும். வாதத்தினால் மேகநோய், விரணம், சுரமும் வரும்; பித்தத்தினால் கிராணி நோய் வரும்; வாய்வினால் குன்ம நோய் உண்டாகும். போதைப் பொருள்களினாலும், அளவு கடந்த போகத்தாலும் மேக நோய் தோன்றும். மேக நோய் இருபத்தொன்றும் அதனைத் தொடர்ந்து பிறநோய்களும் நீரிழிவு நோயும் உண்டாகும். பித்தம், வெப்பமான நோய்களும் வாதம், சீதளம் தொடர்பான நோய்களும் ஐயம், கபம் தொடர்பான நோய்களும் வாயுவின் விகற்பத்தினால் இம்மூன்று வகை நோய்களும் உண்டாகும்133 என்றதனால், நோய் உண்டாவதற்கான அடிப்படையாக அமைகின்ற காரணங்கள் உரைக்கப் பட்டுள்ளன. இதன் தொடர்பால் தொடரும் பெரு நோய்த் தொகைகள் அறியப்பட்டன.

நோய்களின் எண்ணிக்கை

வாத, பித்த, ஐயங்கள் அவற்றினால் உண்டாகும் நோய்களும் அவை அல்லாத வேறு பல காரணங்களினால் உண்டாகும் நோய்களும் தொகுத்துக் கூறப்படுகின்றன.

"" குறியுல கேத்தி தானே குறித்தநா லாயிரத்தி

நறிவரு நானூற்று நாற்பத் தெட்டன""

என்று, மனித உடலில் தோன்றக் கூடிய நோய்களின் தொகை, 4448 என சித்த மருத்துவம் கண்டறிந்துள்ளது.

உடம்பின் நீளம் எட்டுச் சாண் அளவு, அல்லது தொண்ணூ<ற்று ஆறு அங்குலம் எனவும், உடம்பில் அமைந்துள்ள நாடிகள் எழுபத்திரண் டாயிரம் எனவும் உடம்பில் உற்ற நோய்களின் சுருக்கம் எண்ணூ<ற்றுத் தொண்ணூ<று எனவும் அதை ஐந்தால் பெருக்கினால் (890 து 5 = 4450) நாலாயிரத்து நானூற்று ஐம்பது134 என நோயின் தொகையும் உரைக்கப்பட்டுள்ளன.

உறுப்புகளும் நோய்களும்

மருத்துவ நூலார் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307 11. குதம் 101

2. வாய் 18 12. தொடை 91

3. மூக்கு 27 13. முழங்கால் கெண்டை 47

4. காது 56 14. இடை 105

5. கண் 96 15. இதயம் 106

6. பிடரி 10 16. முதுகு 52

7. கன்னம் 32 17. உள்ளங்கால் 31

8. கண்டம் 6 18. புறங்கால் 25

9. உந்தி 108 19. உடல்உறுப்பு எங்கும் 3100135

10. கைகடம் 130 ஆக 4448

என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும்136 என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண், சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும்.137 மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு138 போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும்139 கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.140

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.141

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.142

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும்.143 கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று144 குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூ<ற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.145

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு146 மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு,147 காதில் நூறு,148 நாசியில் எண்பத்தாறு,149 அலகில் முப்பத்தாறு,150 கன்னத்தில் நாற்பத் தொன்பது,151 ஈறில் முப்பத்தேழு,152 பல்லில் நாற்பத்தைந்து,153 நாக்கில் முப்பது நான்கு,154 உண்ணாக்கில் இருபது,155 இதழில் பதினாறு,156 நெற்றியில் இருபத்தாறு,157 கண்டத்தில் நூறு,158 பிடரியில் எண்பத் தெட்டு,159 புருவத்தில் பதினாறு,160 கழுத்தில் முப்பத்தாறு,161 என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.162

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.163

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது164 என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை165

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

வர்ம நோய்கள்

உடலின் உறுப்புகளில் அல்லது உடற்பகுதிகளில் குறிப்பிடப்படும் நூற்றியெட்டு வர்ம நிலைகளில் ஆயுதங்களாலோ வேறு

பொருள்களாலோ ஏற்படுகின்ற அடி, குத்து, வெட்டு, தட்டு போன்ற காரணங்களால் வர்மம் ஏற்பட்டு, அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மரணத்தை ஏற்படுத்தும். வர்மங்கள் நாழிகை, நாள், மாதம், ஆண்டு என்னும் கணக்கில் விளைவுகளைத் தருவன. இவ்வாறான விளைவுகளே நோயாகவும் மாறி உடலைத் துன்புறுத்தும். அவை நோயாகவே கருதப்படும். வர்மப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஒடிவு முறிவு என்றும், ஈடு என்றும் குறிப்பிடப்படும். அவ்வாறானவை, வர்ம விளைவுகள் எனப்படும்.

1. நெஞ்சு பக்கத்தில் காணப்படும் அலகை வர்மத்தில் ஈடு கொண்டால், பற்களைக் கடிப்பதும், சத்தமும் ஏற்படும்.166

2. தண்டுவடத்தில் காணப்படும் நட்டெல் வர்மத்தில் முறிவு ஏற்பட்டால், முறிவு கொண்டவன் நாய் போல் அமர்வான். அவன் நாவில் சுவை உணர்வு தோன்றினால் 90 நாளில் மரணமும், சுவை காணப்படாவிட்டால் 300 நாளில் மரணமும் உண்டாகும்.167

3. பஞ்சவர்ணக் குகையாகிய நெஞ்சறையின் அருகிலுள்ள அக்கினி நரம்பில் முறிவு ஏற்பட்டால், உடல் முழுவதும் காந்தும். உடலில் எறும்பு ஊர்வது போன்று தோன்றும். 168

4. பழு எலும்பில் காணப்படும் விட்டில் வர்மத்தில் ஈடு கொண்டால், உடல் தீப்போல எரியும். விட்டில் போல் உடல் துடிக்கும்.169

5. நீர்ப்பையோடு இணைந்திருக்கும் நீர் நரம்பு முறிந்தால் சன்னி உண்டாகும்.170

6. கண்ணின் இமை அருகில் உள்ள பகலொளி நரம்பு முறிந்தால், பார்வை போகும். 171

7. தலை உச்சியின் நடுவில் உள்ள குருபோக நரம்பு முறிந்தால், போகம் கழிந்தபின் ஏற்படும் உணர்வு உண்டாகும். 172

8. முதுகிலுள்ள தாரை நரம்பு முறிந்தால், சேவல் போலக் கொக்கரிக்கச் செய்யும்.173

9. தேரை நரம்பு முறிந்தால், உடலில் நிறம் மாறித் தேரை நிறம் போலாகும். 174

10. குண்டிச் சங்கு நரம்பு முறிந்தால் தாகத்தினால் வருந்த நேரும்.175

11. மூச்சுக் குழலின் இடது பக்கத்திலுள்ள குயில் நரம்பு முறிந்தால், குயில்போல ஒலி யெழும். சன்னி உண்டாகும்.176

12. பீசத்தின் மேற்புறத்தில் காணப்படும் கொட்ட காய நரம்பு முறிந்தால், வேகமாக ஓடச் செய்யும்.177

13. இதயத்தின் அருகில் பதிவிருதை வர்மம் முறிந்தால், நீண்ட மூச்சு ஏற்படும். நினைவு தடுமாறும். பிறரைக் கண்டால் நாணம் உண்டாகும். மிகுந்த போக உணர்வு ஏற்படும். கண்களை உருட்டும். வண்ணத்தைக் கண்டு நாணும்.178

14. பிருக்கத்துடன் இணைந்திருக்கும் குக்குட நரம்பு முறிந்தால், சேவலாகக் கொக்கரிக்கும்.179

15. குய்யத்திற்கு இருவிரல் மேலே காணப்படும் பாலூன்றி நரம்பு முறிந்தால், சுரம் உண்டாகும். இரத்தம் பால் போல ஒழுகும்.180

16. முதுகிலுள்ள கூச்சல் நரம்பு முறிந்தால், கருச்சிதைவு உண்டாகும். 217ஆம் நாளில் கூம்பு வர்மத்தில் நீல நிறமும், முகத்தில் மஞ்சள் நிறமும் தோன்றும்.181

17. தலை உச்சியின் நடுவிலுள்ள துண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.182

18. நெஞ்சறையின் இடக்குய்யத்தில் மயிர்க் கூச்சல் நரம்பு முறிந்தால், உடல் வளைந்து குன்னிக் கொள்ளும், மயிர்க் கூச்சமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும்.183

19. முதுகின் நடுவில் புயம் அருகில் தீபார நரம்பு முறிந்தால், ஆண்குறி பாதித்து கறுப்பாகும்.184

20. கண்ணின் அருகில் உள்ள மாற்றான் நரம்பு முறிந்தால், தலை இடிக்கும். உடல் பொன்னிறமாகும். கண் மஞ்சளாகும். கொக்கரித்தல் செய்யும். சுவாசித்தல் கடினமாகும்.185

21. புச்ச என்பின் அருகில் பலமாக வர்மம் கொண்டால், விசை நரம்பு தளர்ந்து 90 ஆம் நாள் வாதம் வரும். விந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்; இரு கால்களும் செயலற்றுப் போகும்.186 என்று கூறப்பட்டுள்ளன.

வர்மம் என்பதை விபத்து போன்று எதிர்பாராமல் ஏற்படுகின்ற பாதிப்புகளாகக் கருதலாம். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து விடுபடவும், மருத்துவம் காணவும் அவசர கால நடவடிக்கை தேவைப்படும். வர்ம மருத்துவ முறை, விபத்து மருத்துவ முறை என்றால் பொருத்தமாக இருக்கும். அவ்வாறான அவசரமான மருத்துவத்தையும் சித்த மருத்துவத்துறை விரிவு படுத்தி வளர்த்து வந்திருக்கிறது என்பதை, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை எடுத்துக் கூறியிருக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நோய்நாடித் தேர்வு செய்யும் முறைகளால் நோயை அறிந்து கொள்வதில், குத்து/வெட்டு என்பவற்றினால் சுமார் 700 நோய்கள் உண்டாகுமென்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் வர்மத்தினால் ஏற்படும் விளைவுகளும் அடங்கும் எனலாம்.

உடலின் இயல்பு தரும் நோய்கள் :

கரு உருவாகும் போதே உடலின் இயல்புகளும் உடலோடு இணைந்தே உருவாகின்றன. உடலில் உயிர் இருக்கும் வரை, உடல் இயல்புகள் இருக்கும். உடலை நன்னிலைப் படுத்த உடலியல்புகள் கருவிகளாக அமைகின்றன. அவ்வாறான உடலியல்புகளை மருத்துவ நூலார் வேகம் என்னும் குறியீட்டினால் குறிப்பிடுவர். அவை அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், இளைப்பு, தூக்கம், வாந்தி, கண்ணீர், விந்து, மூச்சு, என்னும் பதினான்கு ஆகும்.

மேற்கண்ட இவை, தடுக்கப்பட்டாலும், தடைப்பட்டாலும் அவற்றின் எதிர்விளைவுகளாக நோய்களை உண்டாக்கும் என்று கணிக்கப்படுகிறது.

1. அபானவாயு: இது கீழ்வாய்வளி அல்லது கீழ் நோக்குங்கால் அல்லது கீழ்க்கால் எனப்படும். இது தடுக்கப்பட்டால் அல்லது தடைப்பட்டால், மார்பு நோய், வாயு, குன்மம், குடல்வாதம், உடல் குத்தல், குடைச்சல், வல்லை, மலத்தடை, பசி, மந்தம் ஆகியவை உண்டாகும். ஈரல், மார்பு இவற்றிலுள்ள ஈரம் வற்றும்; வயிற்றில் எரிச்சல் உண்டாகும்; உளைச்சல், தலை கனத்தல், நோதல், மயக்கம், புளிப்பு, வாந்தி, குடல்வலி ஏற்படும்; உணவு உண்ணாமை, செறியாமை போன்றவை

தோன்றும்.

2. தும்மல்: இது தடுக்கப் பட்டால் தலைவலி, முகம், இழுப்பு, இடுப்பு வலி, அரைமேல் வலி, வயிற்றுப் பொறுமல், விந்து நீத்தல், கால் கை கடுகடுத்தல், சிறுநீர்க் கடுப்பு முதலியன உருவாகும்.

3. சிறுநீர்: நீரடைப்பு, நீர்வரும்வழியில் புண், ஆண்குறி சோர்வு, குறியில் சீழ் குருதி சேர்தல், குறியில் எரிச்சல் தோன்றும்.

4. மலம் : சலதோசம், முழங்காலின் கீழ், பல நோய், தலைவலி, உடல்வலிமை குறைவு போன்றவை ஏற்படும்.

5. கொட்டாவி: இதனால் முகம் வதங்கும், இளைப்பு, செறியாமை, நீர் நோய், வெள்ளைநோய், அறிவு மயக்கம், வயிற்று நோய் உண்டாகும்.

6. பசி

7. தாகம் அடக்கினால், உடலும் உடற்கருவிகளும் இயங்கா; சூலை, பிரமை, இளைப்பு, வாட்டம், சந்துநோவு ஆகியவை தோன்றும்.

8. இருமல்

9. இளைப்பு (ஆயாசம்)கொடிய இருமல், மூச்சில் துர்மணம், நீர்மேகம், குன்மம், இதய நோய் உருவாகும்.

10. தூக்கம்தலைக்கனம், கண் சிவத்தல், செவிடு, அரைப்பேச்சு போன்றவை வரும்.

11. வாந்திநமச்சல், பாண்டு, கண்நோய், பித்தம், இரைப்பு, காய்ச்சல், இருமல், தடுப்புக் குட்டம் ஆகியவை தோன்றும்.

12. கண்நீர்தமரக வாயு, பீனிசங்கள், கண்நோய், தலையில் புண், குன்மம் வரும்.

13. விந்துசுரம், நீர்க்கட்டு, கை கால்கள் கீல் நோய், விந்து கசிவு, மாரடைப்பு, மார்பு துடிப்பு, வெள்ளை போன்றவை வரும்.

14. மூச்சுதடைப்பட்டால் இருமல், வயிற்றுப் பொறுமல், சுவையின்மை, குலைநோய், காய்ச்சல், வெட்டை ஆகியவை ஏற்படும்187 என்றுரைக்கப்படுகிறது.

இவற்றினால் நோய் என்பது இயல்புக்கு மாறானது என்பதும், மருத்துவம் என்பது இயல்புக்கு மாறான செயலை மீண்டும் இயல்பு நிலைக்கே மீளச் செய்வது என்பதும் பெறப்படுகிறது.

நிலமும் நோயும்

பண்டைய இலக்கிய மரபின்படி நிலம் நான்கு வகையாகப் பிரித்தறியப்பட்டது. அந்தந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, ஒழுக்கம் என்றுரைக்கப்பட்டது. அவ்வாறு பிரித்தறியப்பட்ட நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. அந்நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் பருவத்தினால் மாற்றமடையும்போது அந்நிலம் பாலை எனப்படும். இந்த ஐந்து நிலத்தையும் ஐந்திணை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது.

குறிஞ்சியில் ஐயமும், முல்லையில் பித்தமும், நெய்தலில் வாதமும் அதிகரிக்கும். பாலையில் வாத, பித்த, ஐயம் மூன்றும் வளர்ச்சியடையும். மருதத்தில் அம்மூன்றும் கட்டுப் பட்டுச் சமநிலை பெற்றிருக்கும்188 என்பதிலிருந்து, வாழ்வதற்கு மருதநிலம் ஏற்றது என்று கருதப்படுகிறது. குறிஞ்சி, இரத்தத்தை உறிஞ்சுகின்ற சுரமும், வயிற்றில் ஆமைக் கட்டியும் உண்டாக்கும்; ஐயம் ஓங்கும். முல்லை, வல்லை நோயும் வாத நோயும் உண்டாகும். பித்தம் ஓங்கும். நெய்தல், மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும். ஈரலைப் பெருக்கும். குடல் வாயு உண்டாகும். வாத நோய் வளரும். பாலை, வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் தோன்றும். மருதம்–வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் குணமாகும். வாழத் தகுந்த நிலம் மருத மாகும்189 என்று நிலத்தின் பண்பினால் உடல்வளம் அறியப்பட்டது. மேலும், நிலப் பாகுபாட்டையும், தட்ப வெப்ப நிலையையும், நில வளத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதனால், அந்தந்த நிலத்திற்குரிய வெப்பமும் நிலத்தின் வளத்திற்கு ஏற்ப விளைகின்ற உணவுப் பொருள்களை உண்பதினால் உடற்குற்றங்கள் ஏற்படுவதாகக் கொள்ளலாம்.

சுவையும் குணமும்

நிலத்திற்கு நிலம் மண்ணில் வேறுபாடுகள் தோன்றுவது போல், மண்ணின் கனிமங்களும் வேறுபடுகின்றன. அதற்கு ஏற்றவாறு மண்ணின் சுவை அமைந்து, அந்தந்தச் சுவைக்கு ஏற்ப நலன்கள் அமைகின்றன என்பது பண்டைய கால வழக்கு.

"" உவர்ப்பில் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு

துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் அவற்றில்

புளிநோய் பசி காழ்ப்புப் பூங்கொடியே தித்திப்பு

அளிபெருகும் மாத வர்க்கு''190

என்று, சிலப்பதிகார காலத்தில் தோன்றிய பரத சேனாதிபதியம் உரைக்கின்றது. உவர்ப்பு கலக்கத்தையும், கைப்பு கேட்டையும், துவர்ப்பு அச்சத்தையும், புளிப்பு நோயையும், கார்ப்பு பசியையும், இனிப்பு நன்மையையும் மனிதர்க்குத் தருவதாக இதன் பொருளமையக் காணலாம்.

அதனால்தான் புள்ளிருக்கு வேளூரைச் சார்ந்த மருத்துவர் வைத்திய நாத ஈசுவரர், நோய் என்று வருகின்றவர்களுக்கு மருந்தாக மண்ணையே வழங்கி வந்தாராம். அந்த மண்ணும் நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தந்தது. எவ்வாறென்றால், அம்மருத்துவர் தந்த மண்ணுக்கு உரிய நிலம் மருத நிலம்–இனிப்புச் சுவையைக் கொண்டது என்பது பெறப்படுகிறது.

"" மண்டலத்தில் நாளும் வயித்தியராகத் தாமிருந்தும்

கண்டவினை தீர்க்கின்றார், காணீரோ? தொண்டர்

விருந்தைப் பார்த் துண்டருளும் வேளூர்என் னாதர்

மருந்தைப் பார்த் தால்சுத்த மண்.''191

என்று காளமேகப்புலவர் உரைக்கக் காணலாம்.

உப்பும் புளியும்

உணவின் சுவையைக் கூட்டுவதற்காக உப்பும், புளியும் உணவின் பாகமாக அமையும். அவை உணவில் பாகமாகக் கொள்ளப் பட்டாலும் இனிப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகள் இணைந்து உப்பு, புளிக்குரிய இயல்பான குணத்தை மாற்றிவிடுகின்றன. அவ்வாறிருந்தாலும் உப்பும், புளியும் உடலைப் பாதிக்கக் கூடியதாகவே அமைகின்றன. இவ்விரண்டும் நெஞ்சடைப்பு, கோழை, ஈளை ஆகியவற்றை ஆதியாகக் கொண்டு உருவாகும் நோய்களுக்கு மூலமாக அமை கின்றன. அதன் பொருட்டே மருந்துண்ணும் வேளையில் நோயாளி உப்பையும், புளியையும் விலக்கிட வேண்டுமென்பர். நோய் வாராதிருக்கவும் இவை தள்ளப்பட வேண்டிய தென்று உணர்த்துவதை உணரலாம்.192

உணவும் நோயும்

உணவும், உணவுப் பொருளும் உடலைப் பாதுகாக்கும் என்பது பொதுவான கருத்து. எந்த உணவு, எந்த உணவுப் பொருளோடு சேரலாம் என்றும், சேரக் கூடாது என்றும் தெரிவிப்பதும், உடல் நலனைப் பேணுகின்ற மருத்துவத்தின் கருத்தாகும்.

உணவு வகைகள் எதனை எதனோடு சேர்த்து உண்டால், உணவு நஞ்சு (ஊணிணிஞீ ணீணிடிண்டிணிண) உருவாகும் என்பதைத் தெளிவு படுத்துகிறது சித்த மருத்துவம். உணவு முறைக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதிகளைக் கடைப்பிடித்து விலக்க வேண்டியவற்றை விலக்கி வந்தாலே பெரும்பகுதி நோயிலிருந்து விடுபடுவதுடன் நோயற்ற வாழ்வும் வாழலாம்.

நஞ்சாகும் உணவு

1. வெண்கலப் பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல், பித்தளை, செம்பொன் ஆகிய பாத்திரங்களில் தயிர், மோர் வைத்திருந்து உண்ணல்.

2. கோழிக்கறி, பழைய மாமிசம் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து உண்ணல்.

3. தேனுடன் தயிர், மாமிசம், கொழுப்பு, எண்ணெய் ஆகியவற்றை உண்ணல்.

4. அழுகிய கனிகள், திரிந்தபால், ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு, நுரைத்த உணவு, நூல்விட்ட உணவு ஆகியவற்றை உண்டால், கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைக்கச் செய்து, மரணத்தைத் தரும் நஞ்சாகும்.193

5. ஆட்டு, மாட்டிறைச்சியுடன் உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளை கட்டிய பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றோ–பலவோ கலந்து சமைத்தாலும், வெல்லம் சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும்.194

6. மீன்கறி, கீரைக்கறி, முள்ளங்கி சேர்ந்த துணைஊண் (கூட்டு, சாம்பார்) ஆகியவையும், அதிக புளிப்புச் சுவையுடைய பழமும், கம்பு, வரகு, கொள், காட்டுப் பயறு (நரிப்பயறு, பாசிப்பயறு) ஆகியவை தனித்தோ சேர்ந்தோ உண்ட உடன், பால் அருந்தினால் நஞ்சாகும்.

7. பன்றி இறைச்சியுடன் முள்ளம் பன்றி இறைச்சியும், மான் இறைச்சியுடன் நாட்டுக் கோழி இறைச்சியும் தனியாகவோ, கலந்தோ தயிர் கூட்டி உண்டால் நஞ்சு.

8. உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும், குசும்பாக் கீரையுடன் செம்மறியாட்டின் இறைச்சி சேர்ந்தாலும் நஞ்சு.

9. கிச்சிலிப் பழத்துடன் பால், நெய், உளுந்து, வெல்லம் இவற்றில் ஒன்றிரண்டு கலந்தாலும் நஞ்சு.

10. மீன் சமைத்த சட்டியில் மணத்தக்காளிக் கீரை சமைத்தல், மீன் பொரித்த நொய்யில் திப்பிலியைப் பொரித்தல், பன்றிக் கொழுப்பில் நாரை இறைச்சி சமைத்தல், நஞ்சாகும்.

11. தேன், பசுவின் பால், நிணம், தண்ணீர் இவை நான்கும் சம அளவாக எடுத்துக் கலக்கி உண்டால் நஞ்சு.

12. சிட்டுக்குருவி, தித்திரிப்புள், காடை, மயில், உடும்பு இவற்றின் இறைச்சியை–ஆமணக்கு விறகு, எண்ணெயில் சமைத்தால் உடனே உடலை எமன் எடுத்துச் செல்வான்.

13. மஞ்சளைக் கடுகெண்ணெயில் வறுத்தல், நாரை இறைச்சியுடன் கள் குடித்தல், காராமணியுடன் நாரை சமைத்தல், தாமரை விதையுடன் தேனுண்ணல், தயிர் மோருடன் வாழைப்பழம் உண்ணல், பனம்பழத்துடன் வாழைப்பழம் உண்ணல், மணத்தக்காளிக் கீரையை இரவில் சமைத்துக் காலையில் உண்ணல் அனைத்தும் கடும் நோயைத்தரும் குற்ற உணவுகளாகும்195 என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல் நலனைப் பாதிப்படையச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் என்றும், விரிவாக உரைக்கப் பட்டுள்ளது. இவற்றில், வெண்கலம், பித்தளை, தயிர், மோர், பால், முள்ளங்கி, பருப்பு வகைகள், உளுந்து, பழங்கள், இறைச்சி, குசும்பாக்கீரை, மணத்தக்காளிக் கீரை, ஆமணக்கு, வாழைப்பழம் போன்ற உணவுகள் பிற உணவு வகைகளோடு சேர்ந்து உணவாகும் போது, அவ்வுணவு நஞ்சாகும் என்று உரைக்கப் பட்டிருக்கிறது. இவ்வகை உணவுப் பொருள்களும், பாத்திரங்களும் புளிப்புச் சுவையுடையவை எனத் தெரிய வருகிறது. புளிப்புச் சுவை அதிக அளவு அல்லது மிதமான அளவு உணவில் கலக்கும் போது அவை நஞ்சாக மாறுகின்றன எனத் தெரிகிறது. அல்லது புளிப்புச் சுவையைத் தருகின்ற நச்சுப் பொருள் வேறு ஏதேனும் அவ்வாறான உணவில் கலந்தோ அல்லது கலப்பதினால் வேதியல் முறையால் புதியதாக உருவாகின்றதா என்பதும் தெரியவில்லை. இதனை, ஆய்வுக் கூட ஆய்வின் மூலம் சுவையால் ஏற்படுகின்ற உடல் நலனையும் பாதிப்பையும் கண்டறிய முனைய வேண்டும்.195

உண்கலமும் உடல்நலமும்

உணவு உண்ணும் போது, ஒவ்வொரு வகையான உண்கலங்கள் பயன்படுகின்றன. உண்கலங்கள் அவரவர் நிலைக்கும், வசதிக்கும் ஏற்றவாறு மாறுபடும்.

பெரும்பாலான விருந்துகளில் வாழையிலை பயன்படுத்தப் படுகிறது. அரசு, அரச விருந்துகளில் உலோக உண்கலங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்றறிந்து செய்யப்படுவதில்லை. மதிப்பிற்காகவும், செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இலை

உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும்196 என்று உரைக்கப்பட்டுள்ளது.

உலோகம்

“உலோகவகை உண்கலங்களில் தங்கம், பித்தம், சோபப் பிணியை நீக்கித் தாது, பசி, வலிமை, பூரிப்பை உண்டாக்கும். வெள்ளி, கபம், பித்தம் போக்கும்; காந்தி, களிப்பு, வாதம் உண்டாக்கும். செம்பு, இரத்த தோஷத்தைப் போக்கும்; உடல் ஆரோக்கியம், காந்தி, கண்ணொளி உண்டாக்கும். வெண்கலம், சோபம், இரத்தப் பித்தம் போக்கும்.’’197 என்கிறது. உலோக உண்கலங்களிலேயே தங்கம் சிறந்த உலோக உண்கலமாகக் கருதப்படுகிறது.

வெந்நீரும் வியாதியும்

தண்ணீரின் தேவை உலக வாழ்வில் முதன்மையானது என்பது அறியப்பட்ட செய்தி. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பழந்தமிழர் நெறி. நீரைக் காய்ச்சிக் குடித்தால் உடலுக்கு நன்மை தரும் என்பது சுகாதாரம் விரும்புவோர் கூறும் பொதுக் கருத்து. ஆனால், நீரைக் காய்ச்சி, எந்தெந்த முறையில் அருந்தினால் என்னென்ன பயன்களைத் தரும் என்று சித்த மருத்துவ நெறியாக உரைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

“காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால், நெஞ்செரிச்சல், நெற்றிவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று நோய், இருமல் போகும். காய்ச்சி ஆறிய நீர் அருந்தினால், உழலை, விக்கல், அதிசாரம், பித்தம், மூர்ச்சை, விஷ வாந்தி, மயக்கம், மேகம், உலர்ச்சி, கண்ணோய், திரிதோஷம், செவிநோய், சூலை, குன்மம், சுரம், ஐயம், வாத கோபம் போகும்.’’198 என்று தண்ணீர் வெந்நீரானால் உண்டாகக் கூடிய பயனை விளக்கு கிறது.

வெந்நீரும் பாத்திரமும்

தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.

1. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.

2. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்

3. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.

4. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.

5. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.

6. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.

7. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.

8. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும்199

என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.

வெந்நீர் மருந்து

தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பலன் என்பதை,

"" கால் கூறு காய்ந்த வெந்நீர் பித்தத்தைப் போக்கும்

அரைக் கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்

முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,

பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்.''200

என்று பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.

வாத, பித்த, ஐயம் என்பதே அனைத்து நோய்களும் என்பதால், அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்

என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.

"" இயம்பிட வெளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்

நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்

சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்

வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்''201

என்றும்,

"" சொல்லிய நாழி கொண்டு தூணியில் எட்டொன் றாக்கி''202

என்றும்,

"" நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே''203

எனவும், காய்ச்சும் முறை உரைக்கப்பட்டுள்ளது. இம்முறை மருந்து தயாரிக்கும் போதும், தைலம் தயாரிக்கவும் பயன்படும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு காய்ச்சுவதனால் பெருக்கத்து வேண்டும் சுருக்கம் என்பது போல பெருக்கம் என வளர்த்த பொருளைச் சுருக்கம் என மூலப் பொருளாக மாற்றினால் அது மருந்தாக அமையும் எனத் தெரிகிறது.

ஆடைகளும் உடல் நலமும்

ஆடைகள் பலவகை. அவை கொண்டிருக்கும் வண்ணங்களும் பல என, ஆடைகள் வளர்ந்து வந்துள்ளன. பெரும்பாலும் ஆடை என்பது உடலை மறைக்கவும், மதிப்பு மரியாதைக்காகவுமே என்று கருதப்பட்டு வருகிறது. ‘ஆடையில்லாதவன் அரை மனிதன்’ என்பது பழமொழி யாகவும் இருந்து வருகிறது. ஆடை இருந்தால் தான் மனிதன் மதிக்கப்படுகிறான் என்பது அறியப் பட்டாலும், ஆடை உடல் நலனைப் பாதிப்படையச் செய்பவையாக இருக்கிறதென்கிறது, சித்த மருத்துவம்.

ஆடைவகைகள்:

சாலுவை : சலதோஷம், தலைவலி, வாத நோய், வயிற்றுவலி, குளிர்பனி போகும்.

பட்டாடை : பித்தம், கபம் போகும். மகிழ்ச்சி, உத்தி, வியர்வை, காந்தி உண்டாகும்.

வெண்பட்டு : சுரம், சீதம், வாதம் போகும். காந்தி, அழகு உண்டாகும்.

நாருமடி : சளி, நீர் ஏற்றம், வாய்வு, சந்தி போகும். உடல் சுத்தி உண்டாகும்.

வெள்ளாடை : முக்குற்றம், வியர்வை போகும். ஆயுசு, அழகு, களிப்பு, போதம், வெற்றி உண்டாகும்.

சிவப்பாடை : பித்தம், வெப்பம், சுரம், வாந்தி, அருசி, கபம், மந்தம் உண்டாகும்.

பச்சை ஆடை : உடல்வெப்பம், ஐயம் போகும், கண்குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உண்டாகும்.

கறுப்பாடை : காசம், வெப்பு, விஷம், மந்தாக்கினி, பித்தம் போகும்.

மஞ்சளாடை : நீர்க்கடுப்பு, காசம், விஷ சுரம், நமைச்சல், வெப்பு, மலம் போகும்.

கம்பளம் : பெரும்பாடு, அசீரணம், கிராணி, சூலை, பேதி, சீழ் போகும்.

அழுக்குத்துணி : அழகு, அறிவு, போகும்; நோய், குளிர், துக்கம், தினவு, வெட்கம் உண்டாகும்.204

என்று குறிப்பிடுகிறது. ஆடை வகைகள் எல்லாம் ஒவ்வொரு குணத்தை உடையவையாக இருக்கக் காணலாம். இவற்றில் சிவப்பு ஆடையும், அழுக்குத் துணியும் உடலுக்குப் பயன் தராதவைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் பழமொழி, அழுக்குத் துணியினால் வரக் கூடிய கெடுதல்களைக் கருதி உரைக்கப்பட்டதாகக் கொள்ளவும் இடமுண்டு. ஆக, ஆடை வகைகள் உடல் நலன் கருதியே பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிகிறோம்.

நீராடலும் உடல் நலமும் (நோயணுகா நெறி)

நீராடுதல் என்பது தினமும் நீரில் குளிப்பதை உரைப்பதன்று. அது புறத்தே உள்ள அழுக்கை நீக்குவது. அதனால் தான் ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நீராடுதல் என்பது ‘சனிநீராடு’ எனக் குறிப்பிடும் நீராடலையாகும். நீராடுதல் வாரம் ஒன்றுக்கு இருமுறை நீராட வேண்டுமென்று, ‘வாரம் இரண்டு’ என்று குறிப்பிடக் காணலாம். அவ்வகை நீராடலால் ஏற்படும் பயனைப் போகர் குறிப்பிடக் காணலாம். நெல்லி, கடுக்காய், மிளகு, மஞ்சள், வேம்பின் வித்து ஆகிய ஐந்துடன் கையான் தகரைச் சாறும் கூட்டி அரைத்து தலைக்குத் தேய்த்து வாரம் இருமுறை நீராடி வந்தால் கண் குளிர்ச்சியாகும் கண் எரிச்சல் நீங்கும், தலைவலி போகும், மண்டைக் குத்து தீரும். உடல் கல்தூண்போலாகும் என்று, நோயிலிருந்து பாதுக்காத்துக் கொள்வதுடன் உடலைப் பேணவும் வழி உரைக்கப் பட்டது.205 இம்முறையைக் ‘காயாதி கற்பம்’ என்பர்.

நோயின் வாயில்கள்

நோய் என்பது, துயரம் துன்பம் குற்றம் என்னும் பொருள்களைத் தருவதாக அமையும். நோய்க்கு உரிய செயல்களைச் செய்தல் குற்றம். அக்குற்றம் செய்வதனால் வருகின்ற பயனே துன்பமும், துயரமும். இன்பமும், துன்பமும் பிறர் தர வாரா என்பது ஆன்றோர் வாக்கு. துன்பமும், துயரமும் தருகின்ற நோய் பிறரால் தரப்படுவதில்லை. நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதென்றோ–தருவித்துக் கொள்வதென்றோ கொள்ளலாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழி, அளவுடன் இருப்பதே அமிருதம் எனப் பொருள் தருகிறது. அமிருதம் என்பது நோயற்றிருத்தல் என்றாகும்.

நாம் உண்ணுகின்ற உணவும், செய்கின்ற செயலும், எண்ணுகின்ற எண்ணமும் அளவுக்கு மிஞ்சியும் இயற்கையின் தன்மைக்கு மாறாகவும் இருக்குமேயானால், அவையே நோயின் மூலங்களாகி நோய்களை வருவிக்கும் வழிகளை ஏற்படுத்துகின்றன.

நாம் செய்யும் செயல்களில் எவையெல்லாம் நோயைத் தரும் செயல்கள் என்பதை அறிவுறுத்தி, அதன்வழி நடக்கச் செய்வதே மருத்துவ நீதியாகும். நீதிக்குப் புறம்பாக நடப்பது எவ்வாறு நாட்டில் குற்றமாகக் கருதப்படுகின்றதோ, அதைப்போலவே மருத்துவ நீதிக்குப் புறம்பாக நடப்பது உடலுக்குக் குற்றமாகும். இவ்விரண்டு நீதிகளுக்கும் புறம்பாக நடந்தால் தண்டனை உண்டு. ஒன்று, நீதிதரும் தண்டனை சிறை. இரண்டாவது உடல்தரும் தண்டனை நோய்.

வாத நோய்க்குரிய குற்றங்கள்

வாத நோய்கள் 84 ஆகும். மலச்சிக்கல், பெருந்தீனி, வாழைரசம், பலாப்பழம், மலைவாழை, மொந்தன் வாழை, கல்வாழை, வத்தக்காய், நந்திக்காய், பரங்கிக் காய், வாழைத்தண்டு, எருமைமோர், தயிர், வெண்ணெய், உணவு உண்டவுடன் போகம், புளி மிகுதி, கொள்ளுடன் பயறு, உளுந்து, தென்னை–பனங்கள், போகம் செய்யும் போது பால்–பழம் உண்ணல், முள்ளங்கி, கடலை, மொச்சை, முற்றிய அவரை, முற்றிய முருங்கை, முக்கனி, பால், சோறு, வெள்ளரிக் காய், செம்மறியும் உடும்பும் சேர்த்துண்ணல் ஆகியவை206 வாத நோயை வருவிக்கும் வழிகளாகக் கூறப்படுகின்றன.

மேற்கண்ட உணவும், உணவின் கலப்பும் வாத நோயை வருவிக்கும் என்றதனால், அவை உணவுப் பொருள் என்பதையும், முற்றிலும் விலக்குதற்கு உரிய பொருள்களல்ல என்பதையும் கருத வேண்டும். இவ்வகை உணவுகள் புளிப்புச் சுவைக்குரிய உணவுகள் எனத் தெரிவதால், அவை அளவாகவும் புளிச்சுவையை மாற்றக் கூடிய உணவுகளை உண்டால் அது சமநிலையடைந்து நோயை உருவாக்காமல் இருக்கு மெனலாம்.

பித்த நோய்க்குரிய குற்றங்கள்

பித்த நோய்கள் 48 ஆகும். அவை, மனம், செயல், உணவு என்னும் வழிகளால் நோய் வரும் எனப்படுகிறது. அவை காதல், காமம், கோபம், பழி, மன உளைச்சல், வருத்தம், துயரச் செய்தி, மரணச் செய்தி, வஞ்சகம், பகை, பயம், என்னும் மனம் சார்ந்த உணர்ச்சிகளும், உறக்கமின்மை, பட்டினி, செய்வினை, நடை, அலைச்சல், கடற்பயணம், நீண்ட உறக்கம். மருந்தீடு, அபின், கஞ்சா, நீர், மலம் அடக்கல் என்னும் செயல்களும், மிளகாய், பெருங்காயம், கஞ்சி, உப்பு, வெள்ளுள்ளி, காரம், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், ஏறண்ட எண்ணெய், தேங்காய் எண்ணெய், மிளகு, வற்றல், திப்பிலி, கடுக்காய், மஞ்சள், போன்றவை207 பித்தத்தை உண்டாக்கும் பொருள்களாகக் கூறப்படுகின்றன. பித்தம் உடலைக் காக்கும் செயலைச் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள், செயல் ஆகியவை பித்தத்தை உருவாக்கக் கூடியவையாக இருப்பதனால், அதனால் உடலுக்கு நன்மைதானே என்றால் நன்மைதான், எந்த அளவு என்றால், வாதம் ஒன்று, பித்தம் அரை, ஐயம் கால் என்னும் அளவில்தான் இருக்க வேண்டும். அந்த அளவை மீறினால் தான் நோய் வரும் வழிகள் திறக்கப்படும் என்று அறியலாம்.

ஐய நோய்க்குரிய குற்றங்கள்

ஐய நோயின் எண்ணிக்கை 96 எனப்படுகிறது. ஐயம் நீர்த்தன்மையுடையதாக இருப்பதனால் குளிர், குளிர்ந்த பொருள், குளிர்ச்சி என்று ஐயம் வரும் வழியைக் குறிப்பர். அவை, பனி, பலவகை நீர், காலையில் குளிக்காதது, காமம், மருந்தீடு, மணம், சயம், மருவல், சுத்தி செய்யாத மருந்து, பழித்த தோசம், தோசபானம், மழையில் நனைதல், தூக்கம், விஷம், போகம் மிகுதி, அலைச்சல், மந்தம்208 போன்றவை ஐய நோய்க்குரிய குற்றங்கள் என்பர்.

ஐயம் அழிக்கும் தொழிலுக்குரியதாகையால், வாதத்தின் அளவில் கால் அளவே ஐயம் இருக்க வேண்டும் என்கிறது நாடி நூல். எனவே கெடுதல்/அழிதல் குறைவாக இருந்தால், தானே பாதுகாத்துக் கொள்ளவும் உயிர்வாழவும் முடியும்? அதனால் தான் உடலில் சேரும் பொருளும் கெடுதலைத் தரக் கூடிய பொருள்களாக இருக்கக் கூடாது என்று கருதினர். மேற்கண்ட பொருள்களில், சுத்தி செய்யாத அவிழ்தம், பழித்த தோசம், தோச பானம் ஆகியவை ‘ஒவ்வாமை’யைக் குறிப்பதாகும். ஒவ்வாமை உடலுக்குக் கேட்டினை விளைவிக்கும் என்பதனை அறிந்தே, தமிழ் மருத்துவம் சுத்தி என்னும் தனிப் பிரிவையே மருந்துத் தயாரிப்பில் வைத்துள்ளது. ‘சுத்தியில்லையேல் சித்தியில்லை’ என்பது குறிப்பிடத் தக்கது. சுத்தம் என்னும் பழக்கமும் ஐயத்திலிருந்து விடுபடச் செய்யும். ‘ஒவ்வாமை’ எல்லாம் ஒவ்வாது என்பதும் ஒவ்வாதது. சிறிய அளவு இருந்தால் தான், அது இன்பம். அதனால் அது சிற்றின்பம். அளவு மிகுந்தால் சேரும் துன்பம் எனக் கூறுவதாகக் கருத வேண்டும்.

நோயும் நோயின் வகையும்

வாதம், பித்தம், ஐயம், தொந்தம் என்னும் பிரிவுகளினால் உருவாகும் நோய்கள் சுமார் 4448 என்று தொகையாக உரைக்கப் படுகிறது. அவை பல்வேறு குழுக்களாகக் கூறப்படுகின்றன. ஒவ் வொரு நோய்க் குழுவிலும் எத்தனை எத்தனை நோய்கள் இருக்கின்றன என்பது கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, கண்ணோய் என்பது 96 எனக் கூறப்படுகிறது. அதற்கு மேல் கண்ணில் நோய் கிடையாதா என்றால் இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். சித்த மருத்துவம் தோன்றிய நாளில் எத்தனை நோய்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் காணப்பட்டதோ, அவை மட்டுமே நோயின் குழுத் தொகையாகக் கூறப் பட்டுள்ளன எனக் கொள்வது சிறப்பாக இருக்கும். அவ்வாறு கூறப்பட்டுள்ள நோய்களின் குழுத்தொகை வருமாறு:

நோய்களின் பெயர்கள்

1. வாத நோய் – 84 2. பித்த நோய் – 48

3. ஐய நோய் – 96 4. தனுர் வாயு – 300

5. காச நோய் – 7 6. பெருவயிறு – 8

7. சூலை நோய் – 200 8. பாண்டு நோய் – 10

9. கண்நோய் – 96 10. சிலந்தி – 60

11. குன்மம் – 8 12. சந்தி – 76

13. எழுவை, கழலை – 95 14. சுரம் – 85

15. மகோதரம் – 7 16. தலையில் வீக்கம் – 5

17. உடம்பில் வீக்கம் – 16 18. பிளவை – 10

19. படுவன் – 11 20. கொப்புள் நோய் – 7

21. பீலி நோய் – 8 22. உறுவசியம் நோய் – 5

23. கரப்பான் – 90 24. கெண்டை – 10 25. குட்டம் – 20 26. கதிர் வீச்சு நோய் – 4

27. திட்டை (பல்லீறு நோய்) – 6 28. சோபை – 16

29. இசிவு – 6 30. மூர்ச்சை நோய் – 7

31. படு (குலை நோய்) – 46 32. மூல நோய் – 9 33. அழல் நோய் – 10 34. பீனிசம் 35. கடிவிஷம் – 76 36. நாக்கு, பல்நோய் – 76 37. கிராணி – 25 38. மாலைக் கண் – 20 39. அதிசாரம் – 25 40. கட்டி – 12 41. கிருமி – 6 42. மூட்டு(கீல்) நோய் – 30 43. முதிர்வு நோய் – 20 44. சத்தி (வாந்தி) – 545. கல்லடைப்பு – 80 46. வாயு நோய் – 90 47. திமிர் நோய் – 10 48. விப்புருதி நோய் – 18 49. மேகநீர் – 20 50. நீர்ரோகம் – 5 51. விஷ பாகம் – 16 52. காது நோய் – 10 53. விக்கல் – 10 54. அரோசியம் – 5 55. மூக்கு நோய் – 10 56. கடி தோஷம் – 500 57. காயம், குத்துவெட்டு – 700 58. கிரந்தி – 48 59. பொறி (பறவை) விஷம் – 800 60. புறநீர்க் கோவை – 200 61. துடி (உதடு) நோய் – 100 62. பிள்ளை நோய் – 100

என்னும் எண்ணிக்கையில் நோய்களின் குழுக்கள் குறிப்பிடப் படுகின்றன. இவற்றின் கூட்டுத்தொகை 4482 என வரும். ஆனால், நோய்களின் தொகை எண்ணிக்கை எனக் கூறும் 4448ஐ விடவும் 34 அதிகமாக இருக்கிறது. என்றாலும் நோய் எனக் கொள்வதில் இவ்வளவு தான் நோய் என்று மருத்துவத்துறை வரையறை செய்திட இயலாது. நோய்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பவை. 4448 என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். பின்னர் அவை வளர்ந்திருக்கலாம். அதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர் என்பதையே காட்டாகக் கூறலாம். ஒரு காலத்தில் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக் கையில் மாற்றங்கள் நேர்ந்தன. சித்தர்கள் பலர் பின்னாளில் உருவானதே அதற்குக் காரணம். அதே போல நோய்களின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும், குத்து–வெட்டு என்னும் தொகை 700 என்கிறது. இவை நோயல்ல, இத்தனை காயமும் குத்து வெட்டும் இப்போது நிகழுமா? என்று வினா எழலாம். நிகழலாம்; நிகழாமலும் போகலாம். அதுபோல், பறவை விஷம் 800 என்று இருக்கிறது. இதுவும் விளங்கவில்லை. பறவைகளினால் உண்டாகக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை விளக்கும் நூல்கள் கிடைத்தில. அதுபோல், கடிதோஷம் என்பதும் புறநீர்க் கோவை என்பதற்கும் நூல் விபரங்கள் இல்லாததால் அறிவது கடினமாக இருக்கிறது. என்றாலும், நோயின் தொகை மருத்துவம் பார்க்கப் பயன் படாது. நோயின் குறி, குணங்களைக் கொண்டே மருத்துவம் பார்க்க முனைவர் என்றாலும், மருத்துவ நூல் கூறியவற்றை ஈண்டு தொகுத்துக் காட்டவே எடுத்துக் காட்டப்பட்டது.

சித்த மருத்துவத்தில் மருந்து மருந்துப் பொருள் விளக்கம்

மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water)210 ஆகிய பொருள்கள் உள்ளன.

துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம்211 எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம்.

சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன.

மருந்து முறை

சித்த மருத்துவ நூல்கள் கூறும் மருந்து முறைகளில் உடலுக்கு உள்மருந்தாக அளிக்கப்படும் அக மருந்துகள், உடலுக்கு வெளிமருந் தாகப் பயன்படும் புற மருந்துகள், என இரண்டு வகைகள் குறிப்பிடப் படுகின்றன.

அக மருந்துகள் 32

1. சுரசம் 12. நெய் 23. பதங்கம்

2. சாறு 13. இரசாயனம் 24. செந்தூரம்

3. குடிநீர் 14. இளகம் 25. நீறு (அ) பற்பம்

4. கற்கம் 15. எண்ணெய் 26. கட்டு

5. உட்களி 16. மாத்திரை 27. உருக்கு

6. அடை 17. கடுகு 28. களங்கு

7. சூரணம் 18. பக்குவம் 29. சுண்ணம்

8. பிட்டு 19. தேனூறல் 30. கற்பம்

9. வடகம் 20. தேநீர் 31. சத்து

10. வெண்ணெய் 21. மெழுகு 32. குளிகை

11. மணப்பாகு

புற மருந்துகள் 32

1. கட்டுதல் 12. நசியம் 23. பொடி

2. பற்று 13. ஊதல் 24. முறிச்சல்

3. ஒற்றடம் 14. நாசிகாபரணம் 25. கீறல்

4. பூச்சு 15. களிம்பு 26. காரம்

5. வேது 16. சீலை 27. அட்டைவிடல்

6. பொட்டணம் 17. நீர் 28. அறுவை

7. தொக்கணம் 18. வர்த்தி 29. கொம்பு கட்டல்

8. புகை 19. சுட்டிகை 30. உறிஞ்சல்

9. மை 20. சலாகை 31. குருதி வாங்கல்

10. பொடிதிமிர்தல் 21. பசை 32. பீச்சு

11. கலிங்கம் 22. களி

என்பனவாகும்.

மேலே கூறப்பட்ட அகமருந்துகள்32, புற மருந்துகள்32, ஆக 64 மருந்துகளில், அகமருந்துகளுக்குத் தயாரிக்கப்படும் முறைகளினாலும், புறமருந்துகளுக்குச் செயல்படுத்தப்படும் முறைகளினாலும் பெயர்கள் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இம்மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் தமிழ்ப் பெயராகவே இருப்பது, தமிழ் மருத்துவத்துக்கு உரிய மருந்துகள் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.

மருந்து செய்முறைகள்

மருந்துகள் 64–ம் செய்யப்படும் போது கீழ்க்கண்ட 24 வகையான வினைகளால் செய்யப்படுகின்றன.

1. கருக்கல் 9. உலர்த்தல் 17. பொசுக்குதல்

2. அரைத்தல் 10. உறைத்தல் 18. நனைத்தல்

3. கசக்கல் 11. குழைத்தல் 19. எரித்தல்

4. கலக்கல் 12. உடைத்தல் 20. வழிக்குதல்

5. வறுத்தல் 13. நறுக்குதல் 21. இறுக்குதல்

6. சுழற்றுதல் 14. உருட்டுதல் 22. இழைத்தல்

7. உருக்குதல் 15. நகத்துதல் 23. குழைத்தல்

8. இறுத்தல் 16. நசுக்குதல் 24. எடுக்குதல்

என்பனவாகும். இவை, மருந்து செய்யும் வினையாகக் கொள்ளலாம்.

மருந்துகளின் மூலங்கள்

சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகள் இம்மருத்துவத்தின் சிறப்பை உணர்த்த வல்லவையாக இருக்கக் காண்கிறோம். அவை வருமாறு,

1. உப்பு வகைகள் – 25 4. பாடாணங்கள் – 64

2. உலோகங்கள் – 12 5. மூலிகைகள் – 1008

3. உபரசங்கள் – 120 6. கடை மருந்துகள் – 64

இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன. 1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் வேறு எந்த மருத்துவ முறையிலும் பயன்படுத்தப்படுவதில்லை எனத் துணிந்து கூறலாம். அதே போல், எல்லா மருத்துவ முறைகளிலும் பொதுவாக 4 வகைகளில் மட்டுமே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால், சித்த மருத்துவத்தில் 1. உப்பு, 2. பாடாணம், 3. உபரசம், 4. இரசம், 5. உலோகம், 6. கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன. மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப் படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே என்பர். அவ்வாறு பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,

1. இரசம் செய்முறை 2. இரசக் செந்தூரம் செய்முறை

3. வீரம் செய்முறை 4. பூரம் செய்முறை

5. அரிதாரம் செய்முறை212

இயற்கையில் கிடைக்கக் கூடிய பாடாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாடாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாடாணங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

"" வயதென்ன நல்லபாம் பொன்றை வாங்கி

மாளாம லதன்விஷத்தை வாங்கிக் கொண்டு

அயதென்ன சூதமொரு கழஞ்சு கொண்டு

ஆலகால விஷத்தில் ஊற்றிக் கொண்டு.''213

நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்–காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தை–குயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்கு–உடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு214 போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை உயிரினங்களும் மருந்திற்குப் பயன்படுவன என்று ஆராய்ந்து காண்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என எண்ணிப் பார்த்தால், இந்த மருத்துவ முறைகள் எத்தனை ஆண்டுகள் பழைமை கொண்டவை என்பது விளங்கும்.

சுத்தி

சுத்தி என்பது தூய்மைப்படுத்துதல் அல்லது பொருள்களில் இயற்கையாகவும், செயற்கையாகவும் தங்கியிருக்கின்ற மாசுகளை நீக்குதல், குற்றம் களைதல் என்பதாகும். மூலிகை, மருந்துப் பொருள், உலோகம், பாடாணம், இரச வகை ஆகிய அனைத்தையும் சுத்தி செய்த பின்பே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்பது, சித்த மருத்துவ நெறிகளுள் ஒன்றாகும்.

சுத்தி செய்யப்படாமல் செய்யப்படுகின்ற மருந்தினால் முழுமையான மருத்துவக் குணமில்லாமல் போவதுடன், தீமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதால், சுத்தி முறைகள் வலியுறுத்தப் படுகின்றன. சுத்தியில்லையேல் சித்தியில்லை என்னும் மருத்துவப் பழமொழியும் இதனையே வலியுறுத்துகிறது.

"" சுசியா னதுலோகத் தோமகற்ற லென்ன

சுசியா னதுலோகந் துவ்வாய்ச் சுசியா

முளரி யுலகை முயறலின் மாலுத்தி

முளரியுல கையுறு முன்.''215

பிரபஞ்சம் என்று சொல்லக் கூடிய இந்த உலகத்தின்கண் சிறப்பினை வளரச்செய்ய, இவ்வுலகத்திலுள்ள குற்றங்கள் என்று சொல்லக் கூடிய உட்பகையை எப்படி நீக்க வேண்டுமோ அப்படி, மருந்துப் பொருள்களிடத்திலே தங்கியுள்ள மாசுகளை நீக்கி ஆண், பெண் ஆகிய இரு பாலார்க்கும் ஏற்றவாறு வகுத்துரைக்கப் பட்டதே சுத்திமுறையின் சிறப்புத் தன்மையாகும் என்று, தேரையர் கூறக் காணலாம்.

இஞ்சிக்கு மேல் தோலும், கடுக்காய்க்குக் கொட்டையும் மரங்களுக்குச் செதிலும் நஞ்சு என்பர். மருந்துக்குப் பயன்படுத்து முன், அந்நஞ்சு நீக்கப்பட்டால் சுத்தியாகும். குண்டுமணி, அலரிவிதை ஆகியவற்றை உண்டால் மரணத்தை உடனே வருவிக்கும். ஆனால், மருந்துகளில் அவை அரிய பணியைச் செய்கின்றன. அவற்றைக் கொண்டு செய்யப்படுகின்ற மருந்தை உண்பவர் மரணமடைவதில்லை. காரணம், சுத்தி செய்த பின்னர் மருந்தாகச் செய்யப்படுவதாலேயாம். பாடாணங்கள் எல்லாம் உயிரைக் கொல்லும். ஆனால், மருந்தாகப் பயன்படுகின்றன என்பதால், சுத்தி என்பதன் தேவை மருத்துவத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.

சுத்திப் பொருள்கள்

உலோகங்கள், பாடாணங்கள், நச்சுத்தன்மையுடைய கொட்டை, பருப்பு, விதை போன்ற பொருள்களைச் சுத்தி செய்வதற்காக, மூலிகைச் சாறு, கள், நீர், பால், மோர், பூநீர், இளநீர், சிறுநீர், சுண்ணாம்பு நீர், காடி நீர், எண்ணெய், பழநீர், செம்மண், செங்கல்தூள் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ஒரு பொருளால் எல்லாவித மருந்துகளையும் சுத்தி செய்ய முடியாது. பொருள்களின் குணமும், சுத்திக்காகப் பயன்படுத்தப் படுகின்ற பொருள்களின் குணமும் கண்டறிந்து, அவற்றின் சேர்க்கை யால் உண்டாகும் எதிர் விளைவுகளையும் கண்டறிந்தே சுத்தி செய்யப் படும். மருந்துகளைச் சுத்தி செய்யும் முறை விரிவாகவும் விளக்க மாகவும் சித்தர்கள் கலைக் களஞ்சியத்தில் விளக்கப் பட்டுள்ளது.216

மூலிகைகள்

தாவர இனங்களில் மூலிகைகள் தலை சிறந்தவை. உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் தாவரங்களைச் சார்ந்து வாழ்ந்திருப்பதைப் போல, மருத்துவ முறைகள் நேர் முகமாகவோ மறைமுகமாகவோ மூலிகைகளைச் சார்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக சித்த மருத்துவம் மூலிகைகளையே மூலப் பொருளாகக் கொண்டுள்ளது. இயற்கை வழி அமைந்த இலக்கியங்களும், மருத்துவமும் இயற்கைப் பொருளான மூலிகைகளின் குண நலன்களை அறிந்து அவற்றின் பண்புகளையும், மருத்துவக் குணங்களையும் தம்முள் சேர்த்துக் கொண்டுள்ளன.

தமிழ் மருத்துவ நூலார் அவற்றின் குணங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். மண்ணில் தோன்றிய பல்லாயிரக் கணக்கான தாவரங்கள் அனைத்தையும் மருத்துவம் ஏற்றுக் கொள்ளா விடினும், அறிந்தவற்றைப் பயன்படுத்தத் தக்கவை என்றுணர்ந்த வற்றை ‘மூலிகை’ எனப் பெயரிட்டுப் பயன்படுத்தி வருகிறது.

"" மூலி யனேக மூவாயிரத்து முன்னூ ரெனினுங்

காலியின் வேகங் கடற் சூழ்ந் தகில காட்ட கத்திற்

பாலினம் நீரினம் நீரில்லா வேரினம் படரினமுஞ்

ஜோலிய தாட்டம் வாதத்தின் மூலியுஞ் சொர்ணமிதே.''217

கடல் சூழ்ந்த நில உலகத்திலுள்ள காடுகளில் பாலினம், நீரினம், வேரினம், படரினம் எனும் வகைப்படுத்தப் பெற்ற மூலிகைகள் 3300 என்பர். இதனால் இத்தனை மூலிகைகளைச் சித்தர்கள் அறிந்திருந்தனர் எனக் கருதலாம்.

"" சொன்னதொரு மூலிகையின் தொகுப்புக் கேளு

சுளுக்காக நானூற்று யெழுபத்து மூன்று''218

என்று, 473 மூலிகைகளின் பெயர்கள் பட்டியலிட்டுக் காட்டப் பட்டுள்ளன.219 இதனால், இந்நூலாசிரியர் தொகுத்த மூலிகை 473 எனக் கொள்ள வேண்டும். திருவருட்பாஉரைநடைப் பகுதியில்,220 சீந்தில் தொடங்கி துளசி ஈறாக 485 மூலிகைப் பெயர்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மருந்தாகும் மூலிகைகளாக இருக்கக் காணலாம். அவை, வடலூர் இராமலிங்க வள்ளலார் அறிந்திருந்த மூலிகைகள் எனக் கருதலாம்.

இந்தியாவில் சுமார் 2000 வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. அதில் 500 வகைகள் நாட்டு மருத்துவத்திலும் 100 வகை ஆங்கில மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன என்பர்.221 இது, இந்நூலாசிரியர் அறிந்திருந்த செய்தியாக இருக்கலாம். என்றாலும், இவர் 300 வகை மூலிகைகளின் பெயர்களைத் தான்222 பட்டியலிட் டுள்ளார். எனவே, அவரவர் தொகுத்த காலத்திற்கு ஏற்ப மூலிகைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்கக் காண்கிறோம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை மருத்துவ மூலிகையின் தொகுப்பு பெயர் பெற்று விளங்கக் காணலாம்.

ஏலாதி : சுக்கு, இலவங்கம், சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, ஆகிய ஆறு மருந்துப் பொருள்களும் முறையே 1,2,3,4,5,6 என்ற எடை அடிப் படையில் கலந்ததற்கு ஏலாதி எனப்பெயர்.

திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் சேர்ந்தது திரிகடுகம் எனப்படும்.

சிறுபஞ்சமூலம் : கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெரிஞ்சில்நெரிஞ்சில் இவ்வைந்தின் வேர்கள் சிறுபஞ்ச மூலமெனக் கருதப்பெறும்.

இவ்வாறு தொகுப்பு மூலிகைகளாகக் காணப்படுபவை, திரிகண்டம், திரிஏலம், திரிகந்தம், திரிகாயம், திரிகாரசிகம், திரிகுமரி, திரிசாதம், திரிநிம்பம், திரிபலை, திரிபழம், திரிமஞ்சள், திரிமதம், திரிமூலம் எனவும்,

இரு ஓமம், இருகரந்தை, இருகுமிழ், இருசங்கன், இருசண்பகம், இரு சந்தனம், இரு சீரகம், இருதொட்டி, இரு நன்னாரி, இரு நாபி, இரு நிம்பம், இரு நெரிஞ்சில், இரு நொச்சி, இருபகம் எனவும்,

பஞ்ச கந்தம், பஞ்சகமம், பஞ்சகற்பம், பஞ்சகசாயம், பஞ்ச காயம், பஞ்ச காரகம், பஞ்ச கோலம், பஞ்ச சருக்கரை, பஞ்ச சீதம், பஞ்ச தரு, பஞ்ச நிக்தம், பஞ்ச திரவியம், பஞ்ச தீபாக்களி, பஞ்ச நிம்பம், பஞ்ச பட்டை, பஞ்ச பத்திரம், பஞ்ச லோதகம், பஞ்ச பாணப்பூ, பஞ்ச பூதமூலம், பஞ்ச பூடணம், பஞ்ச முட்டி, பஞ்ச மூலம், இடைப்பஞ்ச மூலம், பெரும் பஞ்ச மூலம், புற்பஞ்சமூலம், பஞ்ச மூலிகற்பம், பஞ்ச மூலிக் குடிநீர், பஞ்ச மூலித்தைலம், பஞ்ச லோகச் சாயம், பஞ்ச வர்க்கம், பஞ்ச வலக்கம், பஞ்சவாசம், பஞ்ச வில்வம், பஞ்சாக்கினிக் கொடி, பஞ்சாமிலம் எனவும் மருத்துவத் தொகையகராதி தெரிவிக்கக் காணலாம்.

""மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய்வேறு வகிர்களாகக்

கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக் கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்

மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர

ஆண்டு ஏகி, கொணர்தி என அடையாளத் தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்''223

எனக் கம்பன் உரைக்கக் காணலாம். மாண்டாரை உய்விப்பதும், உடலை இரு வேறாக வகிர்ந்தாலும் பொருந்துவிக்கச் செய்வதும், படைக்கலங் களைக் கிளர்ச்சி செய்யச் செய்வதும், இழந்த உருவத்தை மீளச் செய்வது மாகிய மருந்து மூலிகையாகும் என்றதனால் மூலிகையின் சிறப்பு விளங்கச் செய்யும்.

தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்ற ‘இருவேலி’ வேலூர்ப்பாளையச் செப்பேட்டிலும், ‘வழுதிலை’யைச் சேலம் மாவட்டம் தாரமங்கலம் செப்பேட்டிலும் காண முடிகிறது. செவ்வல்லி, செவ்வாம்பல், செங்குவளை எனப்படுகின்ற செங்கழுநீர் சமயத்தோடு தொடர்புடைய மூலிகையாகும். இதனை நடுவதற்கு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும், இதை ‘உரிமை மலர்’ என்று தேவாரமும், தாரமங்கலம், செங்கம் இடங்களிலுள்ள சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. செங்கழுநீர் சிவனுக்கு உகந்த மலர் என்பதால், இதற்கு வழங்கப்பட்ட வரி ‘குவளைக் காணம்’ எனப்பட்டது. அதே போல், மருத்துவக் குணமிக்க நீலமலர் வளர்க்க ‘குவளை நடுவரி’யும், கண்ணோய், ஆஸ்துமா, காமாலை, இரத்தக் குறைபாடு முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசலாங்கண்ணிக்கு ‘கண்ணிட்டுக் காணம்’ என்னும் வரி செலுத்தி வளர்க்க வேண்டும் என்று, பல்வேறு வரி முறைகள் முடியாட்சிக் காலத்தில் மூலிகைகளுக்கு இருந்ததை அறியலாம்.224 மூலிகைகளின் சிறப்பினையும் அதன் தன்மையையும் கருத்திற்கொண்டு, மூலிகைகளைக் கடவுளோடு இணைத்துக் கொண்டனர்.

சிவனுக்குரிய மூலிகை வில்வம்; விநாயகனுக்குரிய மூலிகை அருகு

சக்திக்குரிய மூலிகை வேம்பு;முருகனுக்குரிய மூலிகை கடம்பு

திருமாலுக்குரிய மூலிகை துளசி; பிரம்மாவுக்குரிய மூலிகை அத்தி

கிருஷ்ணணுக்குரிய மூலிகை ஆல்; கலைமகளுக்குரிய மூலிகை தாமரை

தேவதைகளுக்குரிய மூலிகை வெற்றிலை

என வகுத்துக் கொண்டனர்.225

மூலிகைகளும் மருத்துவ மலர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் வனங்கள் (கச்ணூடு) ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டன. அவற்றைப் பராமரிக்கும் பொருப்பும் கோயில்களைச் சார்ந்தே இருந்தால், அவை பாதுகாக்கப்பட்டதுடன் அவற்றின் புனிதமும் போற்றப்பட்டதெனலாம்.

1. கடம்பவனம் – மதுரை 7. மதுவனம் – நன்னிலம்

2. குண்டலி வனம் – திருவக்கரை 8. மறைவனம் – வேதாரணியம்

3. சண்பகவனம் – திருநாகேச்சுரம் 9. மாதவிவனம் – திரு முருகன் பூண்டி

4. சூதவனம் – திருவுச்சாத்தானம் 10. முல்லைவனம் – கருகாவூர், திருமுல்லைவாயில்

5. பாரிஜாதவனம் – திருக்களர் 11. வில்வவனம் – திருவாடனை

6. மகிழவனம் – திருநீடூர் 12. வேய்வனம் – திருநெல்வேலி226

மூலிகை எனக் கொண்ட மரம், செடி, கொடி ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதில் சைவத் திருக்கோயில்கள் அதிக ஆர்வம் கொண்டன வாகக்காணப்படுகின்றன. சைவத் திருக்கோயில்கள் (தமிழ கத்தில் உள்ளவை மட்டும்) அனைத்திலும் ‘தல விருட்சம்’ எனும் பெயரில் ஏதேனும் ஒரு மூலிகைக் குணங்கொண்ட தாவரத்தைப் பாதுகாக்க முற்பட்டிருக்கின்றன.

தல விருட்சங்களாக உள்ள தாவரங்களில் ஒருசில வற்றின் குறிப்புகள்:

ஏர் இழிஞ்சி : பொன்னேரி சின்னக் காவணம் சிவன் கோயில், இதன் பழம் கீழே விழுந்து மறுபடியும் கிளையில் சென்று ஒட்டிக் கொள்ளும்.

தில்லை : தில்லை, நடராசர் திருக்கோயில். இதன் நிழல் வெய்யிலில் குளிர்ச் சியையும் குளிரில் வெப்பத்தையும் தரும்.

மாமரம் : காஞ்சி, ஏகாம்பர நாதர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டிற்கும் முற்பட்டது. நான்கு கிளைகள் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வாரு சுவையுடைய பழங்கள்.

பிறவாப்புளி : பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். விதை எப்போதும் முளைத்ததில்லை.

இறவாப் பனை: பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். சாகாவரம் பெற்ற மரம்.

நாவல் : பழமுதிர்சோலை. நாவல் மரம் இயல்பாக ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியின் போது தான் பழம் பழுக்கும். ஆனால், இங்குள்ள மரம் மட்டும் கார்த்திகையில் கந்த சஷ்டியின் போதுதான் பழம் பழுக்கும். (ஒளவையிடம் கந்தன் சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்றதும் நினைவிற் கொள்ளத்தக்கது.).227

ஏகமூலிகை : ஏகமூலிகை என்பது கையான் தகரையைக் குறிக்கும். முறைப்படி செய்தால் அம்மூலிகை 9 உலோகங்கள், 64 பாடாணங்களையும் புடமிட்டுப் பற்பமாக்கப்பயன்படும். அதனாற்றான் அதற்கு அப்பெயர். 228

வேலு மூலிகை:“பல்லுக் கடுத்த பலநோ யகற்றியரைக் கல்லுக்கு நேராகக் காட்டுமே’’229 வேல் என்னும் மூலிகை பற்களின் நோய்கள் பலவற்றையும் நீக்கு வதுடன், பற்களை வலிமையடையச் செய்து கற்களைப் போல உறுதிப் படுத்தும்.

பூனைக்காலி : வாத, பித்த, ஐயம் என்னும் இம்மூவகைக் குற்றங்களால் வரும் நோய்களைப் போக்கும்.230

காந்தனள் : சங்க இலக்கியம் குறிப்பிடும் காந்தளை. அதன் கிழங்கு ஏர்போல வளைந்து காணப்படுவதனால் கலப்பைக் கிழங்கு என்றும் பெயர் பெறும். அக்கிழங்கின் மேல்பகுதியும் கீழ்ப் பகுதியும் பண்பால் வேறு பட்டவை. ஒரு பகுதி இதய ஓட்டத்தை ஊக்குவிக்கும். மறுபகுதி, எதிராகப் பணிபுரியும். அதில் அடங்கிய கோகோசின் என்ற ‘அல்கலாய்ட்’ புற்றுநோய்க்கு நல்ல மருந்து. விஷமும் அதில்; மருந்தும் அதில். அமுதமும் நஞ்சும் ஒரே இடத்து231

என்னும் சிறப்பிற்குரியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான சிறப்புகள் மட்டுமல்லாது மேலும் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண் டிருப்பவை மூலிகைகளாகும்.

“அவுரி, ஓரிலைத் தாமரை, செவ்வல்லி, பிளியறணை, அமுரி, கோவை, பிடர்முக்கி, கொடியொளிச் சிகப்பு, செந்திராய், கரிய சாலை, சிறுகீரை ஆகியவற்றின் சாற்றைத் தனித்தனியே பாண்டத்தில் வைத்து, வெண்கரு, குன்றி, சீனம் இவற்றைப் பொடி செய்து, மேற்கண்ட சாற்றில் போட்டுக் காய்ச்சும் போது தாரம், இந்துப்பு, மெழுகு, வெண்ணை சேர்த்து மூடிசீலை செய்து எரித்தெடுத்து,அதன் சாம்ப லுக்கு எட்டுக்கு ஒன்று ஆவின் நெய், வெண்காரம், வெல்லம், குன்றி இவற்றைச் சேர்த்துப் பிசைந்து, பத்துக்கு ஒன்று குடோரி சேர்த்து மூன்று நாள் அரைத்து வெய்யலில் காய வைத்துசரஉலையில் ஊத மூலிகை செம்பாகும்”232

என்பதனால், மூலிகையிலிருந்து செம்பு உருவாகும் என்பதுடன்,

இந்தச் செயற்கைச் செம்பினால் செய்யப்படுகின்ற மருந்து வீரிய மிக்கதாகவும் நோயையும், நோயின் மூலத்தையும் அழிக்க வல்லதாகவும் இருக்கு மென்பர்.

"" விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை

மிக்கான பொற்றலையும் நீலிவல் லாரை

பழலாகப் பாக்களவு பாலில் கொள்ளு

பாங்கான மண்டலந்தான் உண்டா யானால்

கழலாக காயந்தான் ஆயிரத் தெட்டு

கனகம்போல் சடந்தானும் கனிந்து மின்னும்

மழலாக வார்த்தையது கின்னரத்தின் ஒலியாம்

மகத்தான வாசியுமே இறுகும் பாரே.''233

கரிசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமை யானதாகவும்மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று தெரிகிறது.

கறுப்பு மூலிகை

மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது.

“இரண்டாள் மட்டம் குழியில் நிறையச் சேங்கொட்டையைப் போட்டு மூடி, அதன்மேல் கரு நெல்லி, கருநொச்சி, கஞ்சா, கொடி வேலி வைத்து வளர்க்க அவை கருத்து வளரும். அவற்றை முறையாக உண்ண கற்பமாகும்.”234

“இடுப்பளவு குழியில் சேங்கெட்டை இரண்டு முழ உயரம் கொட்டி, மண்போட்டு மூடி, நீர் பாய்ச்சி நன்றாக அழுகச் செய்து மூன்று திங்களுக்குப் பின்,

குமரி, ஓமம், கஞ்சா, வல்லாரை, கரிசாலை, செருப்படி, நீலி, வீழி, பொற்றலை, நொச்சி, கரந்தை, மத்தை, தும்பை, கொல்லன் கோவை, வாழை ஆகியவற்றைப் பதியமிடவும். அவை நன்றாக வளர்ந்து காய்ந்த பின் அவ்விதைகளை முன்போலவே சேங்கெட்டை யிட்டுப் பாத்திக் கட்டி, வளர்த்துஇவ்வாறு நான்கு முறை வளர்த்தால் சிறப்பான கருப்பு மூலிகையாகும். இவ்வகை மூலிகைகைளை மலைதோறும் சித்தர்கள் வளர்த்துள்ளார்கள். அவ்வகை இலையைக் கசக்கி, கொக்கின் இறகில் பூச, அவ்விறகு காக்கை நிறம் போலாகும். அவ்விலைகளைத் தின்றால் காய சித்தி அடைந்து பல்லாண்டு வாழலாம்.235 மேற்கண்டவாறு வளர்க்கப் பெற்ற கறுப்பு மூலிகை களை உண்டு காயசித்தி பெற்ற சித்தர்கள் வருமாறு:

மச்சமுனி வல்லாரை பலர் குமரி

கமலமுனி கொடுவேலி காலாங்கி ஓமம்

பிரமமுனி செறுப்படை சிவயோகமுனி இராமதேவர் கரிசாலை

வாசமுனி பொற்றலை பிரமமுனி நீலி

கோரக்கர் கஞ்சா/பொற்றலை கஞ்சமலைச் சித்தர் வீழி

கொங்கணர் கரிசாலை பதஞ்சலி கரந்தை

சொரூபாநந்தர் திருமேனி நந்தீசர் கோவை237

போகர் கொல்லங் கோவை236

மேற்கண்டவர்கள் மூலிகைகளை முறைப்படி உண்டு காயசித்தி பெற்று நீண்ட நாள் வாழ்ந்திருந்ததாக அறியப்படுவதனால் மூலிகையின் சிறப்புகள் அறியப்படும்.

மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருந் தற்குச் சான்றாகக் கீழ்க்கண்ட பாடல் விளங்கக் காணலாம்.

"" போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு

புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்

வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்

மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு

நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்

நொடியிலே காயசித்தி கிடைக்கு மப்பா

போக்கான பூ பூத்த மற்றாநாள் பழமாம்''238

என்று, கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன்,அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம்.

“ போக்கான கிளிமூக்கு மரம தொன்று

புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்

வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்

மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு.239

என்று, பிறநூல்களும் ஒத்த பாடல்களால் அம்மரத்தைப் பற்றி கூறக் காணலாம்

“இந்தியா முழுவதும் ஏறக்குறைய 8,000 மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் ஒவ்வொன்றிலும், சராசரியாக 1700 முதல் 1900 மூலிகைகள் வரை பயன்படுத்தப் படுகின்றன. இவை தவிரவும், கிராமிய மருத்துவ முறைகளில் (ஊணிடூடு டஞுச்டூtட tணூச்ஞீடிtடிணிண) பயன் படுத்தப்படும் மூலிகைகளின் எண்ணிக்கை அதிகமானதாக உள்ளதைப் பெங்களூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரம்பரிய மருத்துவ மறுமலர்ச்சி’ அறப் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15,000 பூக்கும் வகைத் தாவரச் சிறப்பினங்களில் பாதியளவு தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஏறக்குறைய 2000 தாவரங்கள் பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இதில் பல தாவரங்கள் தமிழகத்தில் விளையாமல், பத்து சதவீதம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, கச்சா மருந்துகளாகக் கிடைக்கின்றன என்று மருத்துவ மூலிகை ஆய்வறிஞர் முனைவர். என். லோகநாதன் தெரிவிக்கிறார்.’’

இவற்றிலிருந்து மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் உண்மையான நிலைமை புலப்படும். ஆனால், சித்த மருத்துவ நூல்களில், மருத்துவத்துக்காகப் பயன்பட்ட மூலிகைகளின் முழு விபரங்கள் காணப்படவில்லை. காரணம், அவ்வாறான நூல்கள் அருகி விட்டன போலும்.

சென்னை, அரும்பாக்கத்தில் செயல்படும் இந்திய மருத்துவத் துறை வெளியிட்ட குணபாடம்மூலவர்க்கம் நூலில் ஏறக்குறைய 800 மூலிகை இனங்களின் பெயர்களும், அவற்றின் மாற்றுப் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.

மருத்துவக் கலைக் களஞ்சியத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மருத்துவத் தாவர இனங்கள் இடம் பெற்றுள்ளன.

மூலிகைக் கலைக்களஞ்சியத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களுடன், அவற்றின் உபயோகங்களும் தாவரவியல் பெயர் களும் குறிப்பிட்டுள்ளன.

ஆனால் மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள் கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார். அவை,

1. கற்ப மூலிகைகள் (Refuvemating Herbs)

2. ஞான மூலிகைகள் (Spiritual Herbs)

3. இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)

4. வசிய மூலிகைகள் (Psychie Herbs)

5. மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)

6. வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)

7. பிணி தீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)

8. உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)

9. உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)

10. வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)

11. விஷ மூலிகைகள் (Toxic Herbs)

12. நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)

13. எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Sectors)

14. சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle Tones)

15. பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)

16. காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)

17. பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)

18. கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)

என்று மூலிகைகள் வகைப்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.240

மேற்கண்ட நூல்களில் இடம் பெற்றுள்ள மூலிகைகள், மூலிகை பற்றிய ஆய்வுகள் மேலும் விரிவடைந்து மருத்துவப் பயனுக்குத் துணைபுரிய வேண்டும்.

மூலிகைகளின் பட்டியல்கள் மட்டும் பயன்தந்து விடாது. அத்தகைய மூலிகைகள் எந்தெந்த மருந்துகளுடன் இணைந்து மருந்தாகி, எவ்வகையான நோய்களைத் தீர்க்கின்றன என்பதும் கண்டறியப் படவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் தான், மூலிகை ஆய்வு முழுமை கொண்ட தாக அமையும்.

புடம்

மருந்தியல்

சித்த மருந்தியல் அணுவை அடிப்படையாகக் கொண்டது. மருந்துப் பொருள்களில் உள்ள அணுவை நுண்ணணுவாகவும்’ பரமாணுவாகவும் மாற்றுவது, சித்த ‘மருந்தியல்’ ஆகும்.

ஒரு பொருளிலுள்ள அணுக்களை வேறொரு பொருளிலுள்ள அணுக்களுடன் இணைத்து, வேதியல் முறைப்படி புதிய அணுக்களை உருவாக்கி, அதன் மூலம் நோய்களைக் களைவது சித்த மருந்தியலின் அடிப்படை யாகும்.

இவ்வாறு, அணுவியல் மாற்றங்களை உருவாக்க, வெப்பம், தீ, நெருப்பு போன்ற உலைகளின் மூலம் அணுக்கள் தயாரிக்கப் படுகின்றன. மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்ற உலைகள், ‘புடம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றது.

புடம்

மருந்துகள் தயாரிக்கும் போது, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர்.

தீயின் அளவு

புடமிடும் போது, விறகின் மூலம் எரிக்கப்படும் தீ நான்கு வகைப் படும். அவை,

தீபாக்கினி : விளக்கின் சுடரைப் போல எரிவது.

கமலாக்கினி : தாமரைப் பூப்போல எரிவது.

கதலியாக்கினி: வாழைப் பூப்போல எரிவது.

காடாக்கினி : தீப்பந்தம் போல எரிவது.

புடத்தின் வகை

எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும்.

"" புடம் போடச் சொல்வேன் பேஷான காடை

நடமாடு விராட்டி நல் ஒன்று திடமாக

கவுதாரி விராட்டி கனமா யெருமூன்று

நவுதாரி சேவல் நலம்பத்துப் பவமாகும்

பண்ணி புடவிராட்டி பதமாக ஐம்பது தான்

எண்ணிக் கனபுடமே எழுநூறாம் பின்னாம்

கசபுடமே விராட்டி கடிபடவே ஆயிரமாம்

தசமாக இப்படியே சாற்றுவீர்''243

என்று, உலாநூலில் உரைக்கக் காணலாம்.

காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும்.

"" புடம்போடுந் திட்டங்கள் பேசக் கேளு

பேரான யெருவொன்று காடை யாகும்

நடம்போடுங் கவுதாரிப் புடமும் நல்ல

நாடியே யெருமூன்று ஞானிக்குத்தான்

விடம்போடு பத்தெருவில் புடமு மாகும்

விராட்டிதான் ஏனத்தின் செயலுக்குத்தான்

கடம்போடு அறைதோறு மழுக்கி நல்ல

களமாகப் போடுவது கணக்கு மாமே

திடமா யெருநூறு கன புடந்தான்

திடமான கெசபுடமும் ஆயிரந்தான்''244

என்னும் வாத சூத்திரம், காடை 1; கவுதாரி 3; ஏனம் 10; கனம் 100; கெசம் 1000 என்னும் எண்ணிக்கையைத் தருகிறது.

மருந்துகள் ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் வருமாறு;

வரிசை எண் புடம் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை

1. காடைப் புடம் 1

2. கவுதாரிப் புடம் 3

3. குக்குடப் புடம் 10 (அ) 8

4. வராக புடம் 50

5. கஜம் (அ) யானை புடம் 500 (அ) 1000

6. கன புடம் 700 (அ) 800

7. மணல் மறைவுப் புடம் 800

8. கோபுடம் 1000

என்னும் செயற்கைப் புட வகையால் மருந்து தயாரிக்கப் பட்டன. தீயினால் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு மட்டுமே மருந்து தயாரிக்கப் படுவதில்லை. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பத் தைக் கொண்டும் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப் பயன்படும் புடங்கள் இயற்கைப் புடம் எனப்படும். அவற்றின் விபரம் வருமாறு:

வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்

1. கோபுர புடம் மணல்

2. பாணிடப் புடம் தண்ணீர்

3. உமிப் புடம் உமி

4. தானியப் புடம் நெல்

5. சூரியப் புடம் வெயில்

6. சந்திரப் புடம் நிலவொளி

7. பருவப் புடம் பௌர்ணமி நிலவு

8. இருள் புடம் அமாவாசை இரவு

9. பனிப்புடம் பனி

10. பட்டைப் புடம் மரத்தூள்

11. நிழற்புடம் சூரிய ஒளி படாத அறை

எரி பொருள்கள்

தைலம், எண்ணெய், களிம்பு, குழம்பு போன்ற மருந்துகள் எரிப்பு முறையால் தயாரிக்கப்படுபவை. அவை, எரித்தெடுக்கப் பயன்படும் விறகுகள் பல வகையாகும். ஒரே வகையான விறகுகளால் தயாரிக்கப் படாமல், மருந்தின் குணத்திற்கு ஏற்ற விறகுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

விறகின் வகையும் அவற்றால் தயாரிக்கப்படும் மருந்தின் விபரமும்245 வருமாறு:

வரிசை விறகின் பெயர் தயாரிக்கப்படும் மருந்தின் பயன்

எண்

1. ஆவாரை உடலில் ஏற்படும் வெப்பு முதலிய

2. சிற்றா முட்டி நோய்களுக்கான தைலம்

3. உசில் கண், காது, மூக்கு, பாதம் ஆகிய

4. இலந்தை இடங்களுக்கு இடும் நெய், தைலம்

5. இலுப்பை உடலில் பூசுவதற்காகப் பூசும்

6. புளி பிடித் தைலம்

7. வேம்பு வாத நோய்களுக்குப் பயன்படும்

8. பூவரசு குடிநீர், தைலம்

9. அரசு

10. நுணா

11. வன்னி வாத நோய் தைலம்

12. மாவிலிங்கம்

13. நெல்லி

14. வேம்பு பித்த நோய் தைலம்

15. விளா

16. உசில்

17. வேலன் ஐய நோய் தைலம்

18. கொன்றை

19. வேங்கை

20. பனை

21. தென்னை இரசம் சேர்ந்த மருந்து

22. வேம்பு

23. வேலன் இரும்பு சேர்ந்த மருந்து

24. வேங்கை

மேற்கண்ட பட்டியல்களைக் கொண்டு சித்த மருத்துவ மருந்துகள் தயாரிக்கப்பட்ட முறைகளை அறியலாம்.

மருந்து செய்முறை

சித்த மருத்துவத்தில் பயன்படும் அகமருந்துகள் முப்பத்திரண்டு. இவற்றின் செய்முறைகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட முறைகளைக் கொண்டிருக்கும். அவற்றை முறைப்படி செய்து முடிக்க வேண்டுமானால், மருந்துப் பொருளின் குணத்தையும், செய்யப்படும் மருந்துக்கு உரிய காலத்தையும் அறிந்திருக்க வேண்டும். செய்யப்படும் மருந்து ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால எல்லைக்குள் பலனளிப்பது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அம்மருந்து பலனளிப்ப தில்லை என்பன போன்றவை மருத்துவர் அறிந்து செய்ய வேண்டியவை.

அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும் வருமாறு:246

வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு

1. சுரசம் மூலிகைகளின் இலை, வேர், பட்டை, 3 மணி

பூ, காய் இவற்றைத் தனித்தோ சேர்த்தோ நேரம்

இடித்து, காய்ச்சி, முரித்து எடுப்பது

2. சாறு மூலிகைகளின் சாறு பிழிவது 3 மணி

நேரம்

3. குடிநீர் மருந்துகளை இடித்துக் காய்ச்சி 3மணி

வடிகட்டி எடுப்பது நேரம்

4. கற்கம் இரும்புத்தூளை மருந்துகளுடன் சேர்த்துக் 3 மணி

கெட்டியாக அரைப்பது நேரம்

5. உட்களி வறுத்து அரைத்த அரிசி மாவுடன் உளுந்து, 3 மணி

விதைப் பொடி கலந்து வெல்லம், சர்க்கரை நேரம்

சேர்த்துக் காய்ச்சி, களிபோலக் கிளறி வைப்பது

6. அடை அரிசிமாவுடன் சில மூலிகைகள் 3 மணி

கூட்டியரைத்துத் தட்டி, வேகவைப்பது நேரம்

7. சூரணம் மருந்து, மூலிகை உலர்த்தி, வறுத்து, 3

பொடித்து, வடிப்பது தினங்கள்

8. பிட்டு மருந்துகள் உலர்த்திப் பொடித்துப் பாலின் 3

ஆவியில் இட்லிபோல் அவிப்பது திங்கள்

9. வடகம் பிட்டு அவிப்பது போல் அவித்து, உரலிட்டு 3

இடித்து, உருண்டையாக உருட்டுவது திங்கள்

10. வெண்ணெய் மருந்துகளைப் பொடித்து 3

ஆவின் நெய்விட்டு இரும்புக் திங்கள்

கரண்டியில் எரித்து, கடைவது.

11. மணப்பாகு தேவையான மருந்துகளுடன் மூலிகைச்சாறு 6

விட்டு, கற்கண்டு, சர்க்கரை கலந்து திங்கள்

காய்ச்சி மணப் பக்குவத்தில் காய்ச்சுவது.

12. நெய் மூலிகைச்சாறு, கிழங்குச் சாறு, கற்கம், 6

சிலவகைக் குடிநீர் ஆகியவற்றுடன் நெய் திங்கள்

கூட்டிக் காய்ச்சி, நெய் பதத்தில் வடிப்பது.

13. இரசாயனம் மருந்துப் பொருள்களைச் சூரணஞ் செய்து 6

(சுவைப்பு) சர்க்கரை, நெய் சேர்த்துக் குழம்பு போலச் திங்கள்

செய்வது.

14. இளகம் மூலிகைச் சாறு வகைகளுடன் சர்க்கரை, 6

வெல்லம் சேர்த்து வற்றக் காய்ச்சி, திங்கள்

மருந்துப் பொடிகளைத் தூவி, நெய்

சேர்த்துக் கிளறி இளக்கமாக எடுப்பது.

15. எண்ணெய் நல்லெண்ணெய்யுடன் மருந்துகளைச் ஓராண்டு

சேர்த்துக் காய்ச்சி வடிப்பது.

16. மாத்திரை மருந்துகளை மூலிகைச்சாறு, பால், குடிநீர் ஓராண்டு

இவற்றில் அரைத்து உருட்டி உலர்த்துவது.

17. கடுகு மருந்துகளை நெய், எண்ணெய் விட்டுக் ஓராண்டு

காய்ச்சிக் கடுகு பதத்தில் எடுப்பது.

18. பக்குவம் மருந்துகளைப் பக்குவப்படுத்த ஓராண்டு

ஊறவைப்பது, கழுவுவது,பொடிப்பது

போன்ற செயல்களாகும்.

19. தேனூறல் நெல்லிக்காய், கடுக்காய், இஞ்சி ஓராண்டு

போன்றவற்றை நீரில் ஊறவைத்து,

அவற்றின் மேல் துளை செய்து,

உள்ளிருக்கும் நீரைப் போக்கி, பாகு,

தேன் போன்றவற்றில் ஊறவைப்பது.

20. தேனீர் மருந்துகளை வாலையில் நீர்விட்டு ஓராண்டு

எரித்து எடுப்பது.

21. மெழுகு இரச கலப்புள்ள மருந்துகளைத் ஐந்தாண்டு

தனியாகவோ, மருந்துப் பொருள்களுடனோ

தேன், மூலிகைச் சாறுகளில் அரைத்து

மெழுகு பதத்தில் செய்வது.

22. குழம்பு மூலிகைச்சாறு, மருந்து, சர்க்கரை ஐந்தாண்டு

போன்றவற்றைக் குழம்பு பதத்தில் காய்ச்சி

வடிப்பது.

வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு

23. பதங்கம் இரசம் தனியாகவோ கலப்புள்ள பத்து

மருந்துகளையோ மண்சட்டியில் உப்பு ஆண்டுகள்

செங்கல் தூள் நடுவில் மருந்துகளை

வைத்துச் சீலை செய்து எரித்து, மேல்

சட்டியில் படிந்திருப்பதை வழித்தெடுப்பது.

24. செந்தூரம் உலோகம், பாடாணம் போன்றவற்றை 75

மூலிகைச்சாறு, புகை நீர், செயநீர் இவற்றில் ஆண்டுகள்

அரைத்துப் புடம் போட்டு எடுப்பது.

25. பற்பம் உலோகம், பாடாணம், உபரசம் ஆகிய 100

இவற்றை மூலிகை, புகைநீர், செயநீர் ஆண்டுகள்

இவற்றில் அரைத்துப் புடமிட்டு நீறாக்குவது.

26. கட்டு பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்து, 100

பற்பம், செந்தூரம் போன்ற பொருள்களுடன் ஆண்டுகள்

சேர்த்து அரைத்து மாத்திரையாகச் செய்வது.

27. உருக்கு பாடாணம், உலோகம் இவற்றுடன் நட்பு, 100

பகைப் பொருள்களைக் கூட்டி எரித்து ஆண்டுகள்

எடுப்பது.

28. களங்கு இரசம், பாடாணம் போன்ற மருந்துகளை 100

மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் ஆண்டுகள்

சுருக்குக் கொடுத்து, புடமிட்டு, மணியாக்கி,

தங்கம் நாகம் சேர்த்துக் கூட்டி எடுப்பது

29. சுண்ணம் இரசம், பாடாணம், உலோகம் என்னும் இவை 500

தனியாகவோ கலந்தோ மூலிகை, செயநீர், ஆண்டுகள்

புகைநீர் இவற்றில் அரைத்து சீலை செய்து

நெருப்பில் ஊதி எடுப்பது.

30. கற்பம் மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பல

வற்றைப் பக்குவத்துடன் செய்வது. ஆண்டுகள்

31. சத்து காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல

பாடாணங்களைச் சேர்த்து அரைத்து ஆண்டுகள்

ஊதி இரசம், கந்தகம், தங்கம் சேர்த்து

எரித்து எடுப்பது.

32. குளிகை வாலை ரசத்தை மணியாக்கிக் கோவை பல

யாக்கிக் கொள்வது. ஆண்டுகள்

மேற்கண்ட பட்டியலின்படி மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப் படும் என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. இம்மருந்துகள் செயல்புரியும் கால அளவு மூன்று மணி நேரத்திலிருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் என்று குறிப்பிடப்படுவதைக் கொண்டு, அம்மருந்துகளின் வன்மையைக் கண்டறியலாம். சுண்ணம் ஐந்நூறு ஆண்டுகளும், களங்கு, உருக்கு, கட்டு, பற்பம் ஆகிய மருந்துகள் நூறு ஆண்டுகளும் வன்மையுடையது என்றால், அவற்றை உண்பவர் உடம்பில் அத்தனை ஆண்டுகள் மருந்தாக நின்று செயல்படும் என்பதே சரியாம். அத்தனை ஆண்டுகள் உடலைக் காக்கக் கூடிய மருந்தென்றால், அவை மக்களைக் காக்கும் மகத்தான மருந்தெனலாம்.

பத்தியம்

பத்தியம் என்பது நன்மை செய்யும் ஒன்று (தீடச்t டிண் ஞ்ணிணிஞீ) எனவும், நோயாளிக்கு இசைந்த உணவு (கணூஞுண்ஞிணூடிஞஞுஞீ ஞீடிஞுt ஞூணிணூ ணீச்tடிஞுணt) என்றும் பொருளுரைக்கப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட நோயாளிக்கு வந்துற்ற நோயின் வீரியத்தை அதிகப்படுத்துகின்ற உணவை உண்டால் நோய் தீவிரமடையும். அதனால், விலக்க வேண்டிய பொருள்களை விலக்கிவிட வேண்டும். நோய்க்கு ஆதரவாக இல்லாமல், நோயாளியின் உடல் நலத்துக்கு ஆதரவாக அமையும் பொருள்களைப் பத்தியப் பொருள் என்றும், அதனைக் கடைப்பிடித்து வருவதற்குப் பெயர் பத்தியம் என்றும் கூறுவர். பத்தியம் என்பதை ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் கருத்துடைய சொல்லாகக் கொள்ளலாம்.

பத்தியம் என்னுஞ்சொல் ‘லங்கணம்’ என்னுஞ் சொல்லாலும் வழங்கப்படுகிறது. லங்கணம், பட்டினி என்னும் பொருளைத் தருகின்ற வட சொல்லாகும். அச்சொல், இங்கு காரணவாகு பெயராக நின்று பொருள் தருகிறது. அதாவது, பட்டினி என்னும் காரணத்தால், நோயாளியின் நோய்க்காக ஊட்டப்பட்ட மருந்துக்கு எதிர்ப்பாக உள்ளது கொழுப்புச் சத்தும், நோயாளியின் உடல் நல இழப்புமாகும். அவ்விரண்டும் பட்டினியால் குறைக்கப்படுகின்றன247 என்பர்.

நோயாளி மருந்துகளை உண்ணும் போது, மருந்தின் வீரியம் உடலுக்குள் சென்றடைய சில பொருள்கள் தடையாக இருக்கின்றன. மருந்தின் தன்மையை மாற்றக் கூடிய அல்லது நோயாளிக்கு எதிர்வினைகளை உண்டாக்கக் கூடிய உணவுகள் உண்ணப்படாமல் தடுக்கப்படுவதும் பத்தியமாம்.

பத்தியத்தின் தேவை

நோய் வந்த போதும், நோய்க்கான மருந்துண்ணும் போதும் ஒதுக்கப்பட வேண்டிய பத்தியப் பொருள் ஒதுக்கப் படாவிட்டால் நோய் குணமாகாது என்பது சித்த மருத்துவக் கொள்கையாகக் கூறப் படுகிறது.

"" பத்தியம் இல்லார்க்கு என்றும் பகர்பிணி நீங்காது என்று

சத்திய சித்த வேதம் சாற்றிய உண்மை யாலே.''248

பத்திய ஒழுக்கம் பிணி நீங்கத் தேவையான ஒன்று என்பதே மருத்துவ உண்மை என்கிறது.

"" திருப்பாகும் பத்தியந்தான் இல்லாவிட்டால்

தீராது சொல்லிவிட்டேன் திறந்தான் காணே''249

என்று, பத்தியம் இல்லாவிட்டால் நோய் குணமாகாது என்று அகத்தியர் நூல் உறுதிப்படுத்துகிறது.

நோயைக் குணப்படுத்திக் கொள்ள தேவைப்படுகின்ற மருத்துவத் தின் அங்கமாகவே பத்தியமும் கருதப்படுகிறது.

பத்தியத்தின் பயன்

பத்தியத்தினால் நோய்க்காக உண்ணப்படும் மருந்து நோயைப் போக்கக் கூடிய பலனைத் தருவதாக அமையும். பத்தியம் தவறிவிட்டால், நோய் தீர்க்கும் பணியிலிருந்து மருந்தும் தவறிவிடும். நோயைத் தீர்க்கும் மருந்துவப் பணியைச் செய்கின்ற மருத்துவனுக்கு, அவன் தருகின்ற மருந்தை விடவும், அவன் கூறுகின்ற பத்தியமே அவனின் மருத்துவ வெற்றிக்குக் காரணமாக அமையும். பத்தியமுறை மருத்துவமே சித்த மருத்துவத்தின் நுண்ணறிவுக்கு எடுத்துக் காட்டாகும்.250 பத்தியம், மருந்துவம் சார்ந்த முறை என்பதுடன், மருந்தினும் சிறந்ததாகவும் கூறப்படுகிறது.

பத்தியக் குற்றம்

பத்தியத்தில் எவ்விதமான தவறும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே மருத்துவ நெறியாகக் கூறப்பட்டு வருகிறது. பத்தியத்தில் தவறு நேர்ந்து விட்டால் என்ன ஆகும்.

“பத்தியத்தின் குற்றத்தினால் மருந்தின் பயன் கெடுவது மட்டு மல்லாமல், உடம்பிலுள்ள தாதுக்களில் எலும்பு வரை நோயின் கடுமை தீவிரமாகி நோயாளியை வருத்தும்.”251

என்பதால், பத்தியத்தில் குற்றம் நிகழக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.

பத்தியக்குற்ற விளைவு

எந்தச் செயலுக்குமே பயன் என ஒன்றிருந்தால், எதிர் விளைவு என ஒன்று இருந்தே ஆகவேண்டும். எதிர்வினை ஆற்றல் என்பதே செயலுக்குரிய ஆற்றலாகக் கூறுவர். அதைப் போல, பத்தியத்தினால் உண்டாகக் கூடிய பயன் என ஒன்று இருக்கும் போது, எதிர்விளைவு என்ன என்பதையும் அறிந்தால் பத்தியத்தின் தேவை புலப்படும்.

நோய்க் காலங்களில் மட்டுமல்லாமல், நோயைத் தடுக்கும் கற்ப முறை மருந்துகளை உண்ணுகின்ற காலத்திலும், புளிக்கறி உண்டால் பெருவயிறு உண்டாகும். கிழங்கு வகை உண்டால் சோகை முற்றி பாண்டு நோயை உருவாக்கும். மீன் மயக்கம், கெடுதி, சுரம் போன்ற நோய்களை வருவிக்கும். மோர், குன்ம நோயைத் தரும். பச்சை உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் கண்ணிரண்டும் பாதிக்கும் என்று பத்தியப் பொருள்களினால் வரக்கூடிய விளைவுகள் உரைக்கப்பட்டன.

ஒரு நோய்க்காக மருந்தை உண்ணும் போது, அந்நோய் தீராமல், வேரொரு நோயை வருவித்துக் கொள்வது அறிவுடைமையாக அமையாது என்பதால், மருத்துவக் காலங்களில் மருத்துவர் கூறும் பத்திய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறியலாம்.

பத்தியப் பொருள் பொதுவிதி

பத்தியப் பொருள் என்பது விலக்க வேண்டிய பொருள், விலக்க வேண்டாப் பொருள் என்னும் இரண்டையும் குறிக்கும். இங்கு, விலக்க வேண்டிய பொருளைக் குறிக்கவே பத்தியம் என்னும் சொல் பயன் படுத்தப்படுகிறது.

பொதுவாகப் பத்தியப் பொருள்களில் முதலிடம் வகிக்கக் கூடிய பொருளாக அமைபவை, புளி, புகை ஆகிய இரண்டுமாகும்.

"" தீருந்தான் புகையோடு புளியுந் தள்ளு''

"" சங்கற்பம் புளியுடனே புகையிலையுந் தள்ளு''

"" வெறுத்திடுவாய் புளிபுகை மாங்கிஷங்கள்''252

எனக் கூறக் காணலாம்.

புளி, புகை ஆகிய இரண்டும் மருந்துக்கு எதிர்வினை ஆற்றலைத் தூண்டக் கூடிய பொருளாகக் கண்டறியப் பட்டிருப்பது தெரிகிறது. அதனால் தான் குறிப்பாக, புளி என்றும் புகை என்றும் கூறக் காண்கிறோம்.

இவை மட்டும் பத்தியப் பொருள்களல்ல. பொதுவான பத்தியப் பொருள்களாகக் கூறப்படுகின்றவை, உப்பு, புளி, கடுகு, எள், இறைச்சி, மீன், பூசுணைக்காய், பெண்போகம், வரகு, கொள்ளு, புகையிலை என்பன முக்கியமானவை.

நோய்க்குறிய பத்தியம், சிறப்பு விதி

பத்தியம், உடல் வகை–நோய் வகை என வகைப்படுத்தப் பட்டிருக்கின்றது. உடல் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும், நோய் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும் குறிப்பாகக் கொள்ளப்படும்.

வாத உடலினர், வாத நோய்க்கு உரிய பத்தியத்தையும், பித்த உடலினர், ஐய உடலினர் அவரவருக்குரிய பத்தியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பத்திய வகை

வாதம் பித்தம் ஐயம்

புடல் அகத்தி வெள்ளரிப் பிஞ்சு ஆட்டுப்பால்

அவரைக்கீரை சிறுபயறு சீனி, கற்கண்டு கோதுமை

அவரைக்காய் தண்டுக்கீரை மல்லி மணத்தக்காளிக்கீரை

அரைக்கீரை கதளிப்பிஞ்சு சீரகம் முளைக்கீரை

துவரை வெந்தயம் முந்திரிகை மீன்

மிளகு பேரீச்சை பசும்பால் கருவாடு

மஞ்சள் நெய் மோர் ஊறுகாய்

வெள்ளுள்ளி பழம் நெல்லி

கடுக்காய் புளி

ஏலம் சம்பா

இம்முறையைச் சிறப்பு விதியாகக் கருதலாம். கூறப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு பத்தியம் எந்த அளவுக்கு ஆழ்ந்த நுண்ணறிவுடன் கண்டறியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.

பத்திய விலக்கு

சலுகை முறையில் அளிக்கப்படுகின்ற விதிவிலக்கைப் போல, பத்தியத்துக்கும் விலக்கு அளிக்கக் கூடிய முறை கூறப்படுகிறது.

"" இல்லையேல் முப்பதின்மேல் பத்தியங்கள்

இடம்வேணும் பொருள்வேணும் ஏவல்வேணும்

வல்லையே முப்பதுக்குள் வந்த தானால்

வலுக்குமே பத்தியங்கள் வேணும் வேணும்.''253

பொது விதியாக முப்பது வயதுக்கு மேல் பத்தியம் வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டாலும், இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் பத்தியத்தை முடிவு செய்க என்று, மருத்துவர்க்குக் கூறப்பட்டுள்ளது.

இடம் என்பது, நோயாளி வாழுகின்ற இடத்தையும், நோயாளி யின் உடல் வகையும், பொருள் என்பது நோய், நோயினால் நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பையும், ஏவல் என்பது மருந்தையும், மருந்து தரப்பட வேண்டிய காலத்தையும் கருத்தில் கொண்டு பத்தியம் தேவை. தேவையில்லை என்பதை முடிவு செய்ய வேண்டிய முடிவு, மருத்துவரிடம் விடப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் உடலைக் காக்கவும், உடற்பிணியைப் போக்கவும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை அறிவார்ந்த ஒழுங்குமுறை போல, வகுக்கப்பெற்றது.

அகத்தியர் குழம்பு

சித்த மருத்துவ மருந்துகளில் மிகவும் புகழ்பெற்ற அரிய மருந்து களில் அகத்தியர் குழம்பும் ஒன்றாகும். நோயாளிக்கு இம்மருந்தைத் தரும்போது, அனுபான முறைகளை மாற்றித் தருவதாலேயே பல நோய்களைத் தீர்க்கும் வன்மை இம்மருந்துக்கு உண்டு எனக் கூறப்படுகிறது.

இம்மருந்து, அகஸ்தியர் குழம்பு, அகத்தியர் குழம்பு, அருவு குழம்பு என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. இதன் செய்முறை களை, அகத்தியர் குழம்பு, சித்த மருத்துவத்திரட்டு, வைத்திய சார சங்கிரகம், அனுபோக வைத்திய பிரம்ம இரகசியம், சகஸ்ர சித்த யோகம், தன் வந்திரி வைத்திய காவியம், யூகி முனிவர் கும்மி, அகத்தியர் அமுத கலைஞானம், தேரையர் சேகரப்பா, வைத்தியத் திருப்புகழ், நோய்களுக்கான சித்த பரிகாரம் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

செய்முறைகளில் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் மருந்தும் அதன் பயன்பாடுகளும் ஒன்றாகக் காணப்படுகின்றன.

அகத்தியர் குழம்புக்கு 54 அனுபானங்களால் சுமார் 118 நோய்களைக் குணமாக்கும் எனத் தெரிகிறது.254

ஒரே மருந்து இத்தனை நோய்களைத் தீர்க்கிறது என்பது சித்த மருத்துவ முறைக்கு அரியதல்ல. இம்மருந்தை விடவும் அதிக எண்ணிக்கையில் நோய்களைக் குணப்படுத்துகின்ற மருந்துகள் பல காணப்படுகின்றன. ஆனால், அகத்தியர் குழம்பு ஒன்றே, நோய்க்குத் தக்க அனுபானங்களைக் கொண்டு குணப்படுத்தக் கூடியதாக இருக் கிறது என்பது குறிப்பிடதக்கது. (அகத்தியர் குழம்பு இணைப்பு 8).

சித்த மருத்துவம் பயிலத் தொடங்கும் ஒருவர், முதன் முதலில் இந்த மருந்து ஒன்றை மட்டும் செய்து கொண்டு பயிற்சி பெறத் தொடங்கி னால் நல்ல மருத்துவராக வளர முடியும்.

அகத்தியர் குழம்பு மூல மருந்து, குரு மருந்து என வழங்கப் படுகிறது. சித்த மருத்துவத்தில் குரு மருந்து என வேறுமுறை கூறப்படுகிறது. அந்தக் குரு மருந்துக்கு இணையான பயனை அகத்தியர் குழம்பும் தருகின்றது என்னும் காரணத்தினால், இதற்கும் குரு மருந்தென பெயர் கூறப்படுகிறது.

கற்பம்

‘கற்பம்’ என்பது உடலைக் காக்கும் மருந்து அல்லது உடலைக் கற்போல் மாற்றுகின்ற கருவி. கற்பம் உண்பவர், நீண்ட நாள் வாழ்வர் என்பதும், கற்பம் உண்டவர் நோயற்ற நிலையடைவார் என்பதும் பொது வழக்கு.

கற்பம் இரண்டு வகையாக உரைக்கப் பெறும். ஒன்று மருந்து கற்பம்; மற்றொன்று யோகக் கற்பம்.

‘கற்பம்’ எல்லாப் பொருளினும் சிறந்தது. அல்லது எல்லா முறையினும் சிறந்தது என்பதும் பொருந்தும்.

"" காலமே யிஞ்சி யுண்ணக் காட்டினார் சூத்தி ரத்தில்

மாலையதி லேக டுக்காய் மத்தியானஞ் சுக்க ருந்த

சூலமே தேக மடா சுக்கிலத்தைக் கட்டி விடும்

ஞாலமே உனது விந்து நற்றேங் காய்போ லாமே''255

காலையில் இஞ்சியும், கடும்பகலில் சுக்கும், மாலையில் கடுக்காயும் அருந்தி வந்தால் துரும்பான உடல் இரும்பாகும். விந்து கட்டி, இறுகும். என்பது இதன் கருத்தானாலும், இந்த முறை ஒன்று மட்டும் கற்பமல்ல. மருந்துகளில், மூலிகைளில், சாதன முறைகளில் கற்பங்கள் பல உள்ளன.

"" கற்பமுறை முக்க டுகுணவி கற்பமுறை

மூவருக்கங் கட்டை முதலொடு நென் மாத்திரமன்

மூவருக்கங் கட்டையது முன்.''256

முக்கடுகு என்பது சுக்கு, திப்பிலி, மிளகு ஆகியன. முதிர்ந்த எருக் கங்கட்டையை வேருடன் கொணர்ந்து வரிசைப் படியே ஒரு மண்டலம், ஒரு நெல்லளவு, சுக்குடன் தண்ணீரில் உண்டால், வாதப் பிணியும், திப்பிலியுடன் உண்டால் பித்தப் பிணியும், மிளகுடன் உண்டால் ஐயப்பிணியும் அற்றுப் போகும் என்பதும் கற்ப முறையில் ஒன்றாகும்.

மூன்று வகை நோயும் இருக்கவொட்டாமற் செய்வதே கற்பத்தின் சிறப்பு என்பதனால், கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்தாகும். கற்பம் உண்டால், நெடுங்காலம் உயிர் வாழலாம். உடம்பு கற்×ணைப் போல் உறுதி கொண்டு விளங்கும். சித்தொளி தோன்ற வாழலாம்257 என்னும் அகத்தியர் வாக்கினால் கற்பத்தின் சிறப்பினை அறியலாம்.

கற்பமுறை:

‘இருக்கவென்று மனம் உரைத்தால்’ கற்பம் உண்க, என்று கற்ப நூல் கூறுகின்றது. இந்த உடலம் நீண்டநாள் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே கற்பம் என்னும் முறை கண்டறியப்பட்டிருக்கிறது.

"" கேளப்பா மண்டலந்தான் ஒருமா வீதம்

கொண்டாக்கால் சிவனவனாய்க் கூடி வாழ்வான்

கொள்ள கற்பமிது கொண்டா யானால்

கோடியுகஞ் சென்றாலுமோ சாவில்லைதான்''258

ஒரு சிறிய அளவு, ஒரு மண்டலம் (48 நாள்கள்) கற்பம் உண்டால் மரணமில்லை என்று அறிவிக்கப்படுகிறது. இம்மருந்தை உண்பது எளிது–அரிது எனக் கருதத் தோன்றுகிறது. ஆனாலும்,

"" உருக்கமுடன் பெண்ணாசை பிள்ளை யாø

ஒட்டினால் கற்பமெல்லாம் ஓடிப் போமே.''259

கற்பம் உண்ணுகின்ற காலத்திலும், உண்டபின்பும் ஆசைக்கும், பாசத்திற்கும் இடமளித்தால் கற்பம் உண்டது வீணாகும் என்று உரைக்கப்படும். இருப்பினும், உடலில் நோய்கள் தங்காமல் பாதுகாக்க கற்பம் வகை செய்யும். கற்பங்கள், காசினியில் நூற்றெட்டுக் கப்ப மானால், பேசாது மவுனமுற்றுக் கொள்ள வேண்டும்,260 என்று, கடுமையான கட்டளை பிறப்பிக்கப் படுவதனால், கற்பங்கள் 108 என அறிய முடிகிறது. மூலிகைகள், இரசங்கள், உப்புகள், உபரசங்கள் முதலியவற்றைச் சிறந்த முறையில் மருந்துகளாக அமைத்து, அவற்றை உடல் அழியாமல் இருத்தற் பொருட்டு உபயோகித்தார்கள். அவ்வாறு உபயோகித்த மருந்துகளையே ‘கற்பம்’ என்பர்.261

கற்பம் உண்ணும் காலம்

கற்பம் எப்பொழுது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் உண்ணக் கூடியதாக இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு உண்ணுகின்ற முறையில் வேறுபாடு வேண்டும் என்று தெரிவிக்கப் படுகிறது. அதாவது,

“ ஆனி, ஆவணி மாதங்களில் வெல்லத்திலும், சித்திரை, வைகாசி யில் சுக்கு கசாயத்திலும், புரட்டாசி, ஆடியில் குறிஞ்சித் தேனிலும், ஐப்பசி, கார்த்திகையில் குமரிச் சோற்றிலும், மார்கழி, தை, மாசியில் கற்கண்டிலும், பங்குனியில் நெய்யிலும்”262 உண்ணுமாறு உரைக்கப் பட்டுள்ளது.

இதனால், கற்ப மருந்திற்கும், இயற்கைச் சூழலுக்கும் தொடர்பு இருப்பதாகப் புலப்படுகிறது. மருந்தின் துணைப் பொருளாக உரைக்கப் பெற்ற வெல்லம், சுக்கு, குறிஞ்சித் தேன், குமரிச் சோறு, கற்கண்டு, நெய் ஆகிய பொருள்களின் குணத்திற்கும், மேற்கண்ட மாதங்களின் பெரும்பொழுது குணத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளதை உணரலாம்.

"" நானுண்ட படி சொன்னேன் நீயும் உண்ணு''263

என்று, தாம் உண்ட முறையைப் பிறர்க்கும் உரைக்கின்ற பாங்கு சிறப்பிற்குரியதாகும்.

கடுக்காய் கற்பம்:

கடுக்காயைத் தேர்ந்தெடுத்து உடைத்து, அமுரியில் ஊறவைத்து மறுநாள் வெய்யலில் காயவைக்க வேண்டும். இவ்வாறு பத்து முறை செய்ய கடுக்காய் சுத்தியாகும். சுத்தி செய்த கடுக்காய் செங்கடுக்காய் ஆகும்.264

பத்திய முறைகள்:

காலை வல்லாரை, மதியம் அமுது, மாலையில் கடுக்காய்த்தூள் வெருகடி அளவு உண்ணவும். சிறுபயறு, சர்க்கரை, பழம், நல்ல காய்கறிகள் உண்டுவர காய சித்தியாகும்.265 கற்பம் உண்போர் ஒரு வேளை உணவே உட்கொள்ள வேண்டும். பச்சரிசியும் சிறு பயறும் சேர்த்து சமைத்த சோறும், சர்க்கரை, தேன், முக்கனி, பால் இவற்றுடன் ஒரு போதே உண்ண வேண்டும். ‘ஒரு வேளை உண்பவன் யோகி’என உரைப்பதும் நோக்கத் தக்கது. ஒரு படி அமுதுடன் துவரம் பருப்பும் சேர்த்து சோறு பொங்கி, அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை, நெய்யுங் கூட்டி உண்ணவும். அதன்பின் கற்பம் உண்ணவும். அப்படி உண்டால் உடல் உறுதியாகும்.266

இவ்வாறு பல்வேறு முறைகளில் கற்பங்கள் உரைக்கப்படு கின்றன. ஒரு வேளை உணவும், உணவுக்குப் பின் கற்ப மருந்து என்பதும் எல்லா முறைகளிலும் ஒன்றாகவே காணப்படுகின்றன.

"" பானென்ற பச்சையுப்பை தின்றா னானால்

பட்டுதா கண்ரெண்டும் பரிந்து காணே.''

"" வாய்பட்ட கொழுப்பாலே (பச்சை) யுப்பைத் தின்றால்

வாய்த்திருந்த சித்தியது மண்ணாய்ப் போமே.''267

கற்பங்கள் உண்ணும் போது, சாதாரணமான உப்பைத் தின்றால் கற்பத்தினால் கிடைத்த பலன் கெடுவதுடன், கண்ணிரண்டும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே, கட்டிய உப்பை மட்டுமே உண்ண வேண்டும் என்னும் சிறப்பு விதிகள் உரைக்கப் படுவதனால், மருந்துண் போர் நலனை நுணுக்கமாகக் கண்காணித்து உரைக்கப்படுவது தெரிகிறது. மருந்து பயனுடையதாக இருந்த போதிலும், மருந்துண் போரின் நலனைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும் மருத்துவத்தின் தலையாய கடன் என்பது தெற்றென விளங்கும்.

கற்பங்கள் உண்ணும் முறைகளையும், பத்திய உணவுகளையும் பின்பற்றி உடலைப் பாதுகாப்பதைப் போலவே, சாதாரணமாகத் தலைமுழுகப் பயன்படுத்தும் பொருளும் கற்பமுறையாக உரைக்கப் படுகிறது.

"" நேமேதான் நெல்லிக்காய் பலந்தான் ஆறு

நிலையாக நீர்மிளகு பலந்தான் அஞ்÷

அஞ்சப்பா கடுக்காய்தான் பலந்தான் நாலு

அப்பனே வேப்பரிசி பலந்தான் மூன்று

மஞ்சளப்பா மஞ்சளது பலந்தான் ரெண்டு

வகையாக இவைகளைக் கூட்டிக் கொண்டு''268

என்று பொருள்களை வரிசைப்படுத்திய முறையை அவற்றின் அளவைக் கொண்டே அமைந்திருப்பதும் நோக்கத் தக்கது. இதனையே,

"" பூ நெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான்மஞ்சள்

கானகத்து வேம்பரிசி காரிகையே மானங்கேள்

ஒன்றரை ஒன்றே கால் ஒன்று உறுதிமுக்கால்

கன்றரைக்கை யான் நீரில் தேய்.''269

இச்செய்யுளும் மேற்கண்ட ஐந்து பொருள்களையே உரைத்திருந் தாலும், வேம்பரிசியும், மஞ்சளும் அளவில் மாறுபடுகின்றன.

மேற்கண்ட கற்பத்தினால் தலை (கபாலம்) இறுகும் என்று திருமூலரும் (கற்பமுறை. செய். 37) திருமந். செய். 849), (கபாலம்) தலை இறுகுவதுடன், முடி கருக்கும்; பகலில் வான்மீன்கள் தோன்றும். உடலிலுள்ள நச்சு நீர் வற்றும், உடல் பொன் போலாகும் என்று நந்தீசரும் உரைக்கக் காணலாம்.

தூதுவளையைக் கறி, வற்றல், ஊறுகாய், கீரை இப்படி முறைப் படுத்தி, ஒரு மண்டலம் உண்டு வந்தால் இரவும் பகல்போலத் தோன்ற கண்ணொளி கூடும்.இதனை இலக்கிய நயத்துடன்,

"" திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையே னல்ல

திருக்குளத்தைப் போலே திருத்துந் திருக்குளத்தை

யெல்லா மிரவுவிளை யென்னவருந் தூதுவளை

யெல்லா மிரவு மிளி யென்''270

நீர்க்குளத்தைத் திருத்தி விளங்கச் செய்வதைப் போல் கண்குளமான நேத்திரத்திலிருக்கின்ற பித்த நீர் முதலான மலினங்களைப் போக்கும் செயலைத் தூதுவளை செய்யும் என்பதைக் அறியலாம்.

கூறப்படும் கற்பத்தின் பொருள்கள் சிறந்த பொருள்களிலிருந்து மட்டுந்தான் செய்யப்படுகின்றன என்ற நிலையில்லை. குப்பைக்குச் செல்ல வேண்டிய பொருள் என்று தூக்கி எரியப்படுகின்ற பொருள்கள் கூட கற்பங்களாக ஆகின்றன என்பது வியப்பிற்குரிய ஒன்றாகவும், அதனால் விளையக் கூடிய நன்மை அதனினும் வியப்பாகவும் தோன்றும்.

பல்வேறு வகைப்பட்ட பறவைகளின் முட்டை ஓடுகள் கற்ப மாகின்றன. கோழி, பருந்து, கிளி, காக்கை, காடை, மயில் ஆகிய வற்றின் முட்டை ஓடுகள் பற்பம் எனும் முறையில் கற்பமாகின்றன. அவை, முறையே, அத்திசுரம், மூர்ச்சை, காசம், சத்தி , பிடிப்பு, வெட்டை, உப்புசம், பெருவியாதி, வெப்பம், மாரடைப்பு, கபமிகுதி, சன்னி ஆகியவற்றைப் போக்குகின்றன.271

இரத்தச்சுத்தி

உடல் தூய்மைக்கு (காயசித்தி) இரத்தம் தூய்மையாக வேண்டும். இரத்தத்தை கொண்டே உடலின் நோய்க் குற்றங்கள் அறியப்பட்டு வருகின்றன. அதேபோல் இரத்தத்தைத் தூய்மையாக்கி, உடலைத் தூய்மையாக்கும் முறை சித்த மருத்துவத்தின் கோட்பாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இரத்தத்திலுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதே மருத்துவத் துறையின் தலையாயப் பணி என்பதை அடிப்படையாகவும் கொண்டிருக்கக் காண்கிறோம். அதே போல், உடல் நோயுற்

றிருந்தால் துர்நாற்றமும், நிறத்தில் மாற்றமும் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இதற்கு இரத்தத்தில் நோய்க்கிருமிகள் அண்டி யிருப்பதே காரணமாகும். இவற்றையெல்லாம் முறைப்படுத்துவதே மருந்தின் பணியாகும். அதனையே காயசித்தியின் தொடக்கமாகக் கருதுவர்.

"" கரிசாலை, குப்பைமேனி, கரந்தை, வல்லாரை, நீலி,

பொற்றலை, செருப்படை ஆகியவற்றை நிழலிலுலர்த்தி

இடித்துச் சூரணம் செய்து வெருகடி அளவு, தினமும்

தேனில், ஒரு மண்டலம் உண்டால், உடல்

நோய்கள் போகும் காய சித்தியாகும்.''272

மேற்கண்ட மூலிகைகள் மிகவும் எளிமையாகக் கிடைக்கக் கூடியவை. ஆடு, மாடுகள் அன்றாடம் தின்னக் கூடியவை. என்றாலும் அவற்றி லுள்ள மருத்துவக்குணங்களும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஆற்றுகின்ற மருந்தாற்றலும் அறியப்படாமல் இருக்கும் செய்திகளாகும்.

"" உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்

உதிரத்தில் உத்தமனே நோயும் போகும்.''273

ஒரு மண்டலம் உண்டால் நோய் போவதுடன் இரத்தத்திலுள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து போகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிருமிகள் எவை என்று குறிப்பிடாமல் கூறப்பட்டுள்ளதால், உடலில், இரத்தத்தில் இருக்கத் தகாத கிருமிகள் என்றே கருத வேண்டும்.

"" பண்ணப்பா பவளம்போல் சிவந்தி ருக்கும்

காயமெல்லாம் சம்பழத்தின் வாசம் வீசும்

விண்ணப்பா அந்தரத்தில் மீன்க ளெல்லாம்

வெகுளாமல் பகல்காணத் தோற்று விக்கும்''274

உடல் வண்ணம் பவளம் போல் சிவந்து காணும். அத்துடன் சம்பழத்தின் வாசம் போல உடலிலிருந்து மணம் வீசும். கண்ணொளி ஏற்படுவதுடன், விண்ணகத்திலுள்ள மீன்களெல்லாம் கற்பம் உண்டவர் காண்பதைக் கண்டுவெகுளாமல் கண்ணின் காட்சிக்கு ஏதுவாகித் தோற்றமளிக்கும் என்று கண்ணொளியைச் சிறப்பித்துக் கூறப் பட்டுள்ளது

முறைகள் மிகவும் எளிதாக இருக்கின்ற போதிலும் அதனுள் புதைந்துள்ள பயன்கள் அரிதாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன.

கற்ப மருந்தின் சாதனை

தன் இனத்தைப் பெருக்குதலும், உயிரைப் பாதுகாத்தலும் இவ்வுலகில் ஒவ்வொரு பிராணியின் பிறவிக் கடன். இத்தலையாயக் கடன் அது அதன் பண்பு. ஆனால், பகுத்தறிவு மிக்க மனிதனோ தன் இனத்தை மட்டும் பெருக்கிப் பாதுகாப்பதுடன், ஒருபடி முன்னே சென்று தன் வாழ்நாளையும் நெடுங்காலம் பாதுகாக்கும் வழிவகைகளைக் காண முற்பட்டான். இந்த முயற்சியில் உடலை வாட்டும் நரைதிரை மூப்பையும், வாழ்வை வதைக்கும் நோய் நொடி சாக்காட்டையும் எதிர்த்துப் போராடும் மருந்துகள் பலவற்றையும் கண்டான்.

இந்த மருந்துகள் இருவகைப்படும். முதல்வகை இயல்பாகத் தோன்றும் உடல் நோய்களுக்கு மருந்தாக அமைந்து உடல் நலத்தைப் பேணுபவை. இரண்டாம் வகை, உறுப்புகளின் இளமையைப் பாதுகாத்து மனித வாழ்வை நெடுங்காலமாகப் பேணுகின்ற காய கற்ப மருந்துகள் (சித்த மருத்துவம் பக்.76) என்று, காயகற்பம் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர்.

வாத வைத்தியம்

சித்தர்கள் வாதத்தை ‘வகார வித்தை‘ என்று குறிப்பிடுவர். ‘வ’என்னும் எழுத்து ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயம் என்பது தலையின் உச்சியையும், ஞானத்தின் முத்தி நிலையையும் குறிக்கும். ஞானத்தின் முத்தி நிலையை அடைய முனைவோர் வாத முறையில் தயாரித்த மருந்தை உண்டால் உடல் சுத்தியாகும். அதன்பின் ஞானத்தை மேற்கொண்டால் சித்தியாகும் என்பதால், வகார வித்தை என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது.

வாதத்தை ‘உலோக மாற்றுக் கலை’ யென்றும் குறிப்பிடுவர். இதனை ‘இரச வாதம்‘ என்பர். பாதரசத்தை ஆதாரமாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்ற மருந்தினால், குற்றமுடைய செம்பு, வெள்ளி, இரும்பு, பித்தளை, நாகம் போன்ற உலோகங்களைக் குற்றமில்லாப் ‘பசும் பொன்’ னாக மாற்றலாம் என்பர். உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது மருத்துவத்தின் பணி அல்ல. ஆனால், வாத முறையில் தயாரிக்கப்படும் மருந்து, உலோகங்களைக் கொண்டு சோதிக்கப் படுகிறது. அச்சோதனையில், உலோகம் தங்கமாக மாற்றுக் கொண்டால், மனிதனுக்குப் பயன்படும் என்று அறியப்படுகிறது. குற்றமுடைய உலோகங்களைப் பசும்பொன்னாக மாற்றுகின்ற மருந்து, மனித உடம்பிலுள்ள நோய் என்னும் குற்றங்களையும் தீர்த்து உடலைப் பொன் போலாக்கும் என்பதே வாத வைத்தியத்தின் மூலக் கருத்தாகும்.

சித்தர் நூல்கள் பெரும்பாலும் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கையும் இணைத்தும் விரவியும் கூறக் காணலாம். வாத முறைகள் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டியிருப்பதனால் இம்முறையைச் செய்த பலர் தோல்வி கண்டுள்ளனர் போலும். அவர்கள், வகார வித்தை பொய் என்று சொல்லியிருக்கின்றனர். அதற்கு,

"" ஆமேதான் உலகத்தில் வாதம் பொய்யோ

அடுத்துமே ஞானமது பொய்யோ அல்ல''275

என்றும்,

"" கொள்ளவே நவகண்டந் தன்னிலே தான்

கூறரிய ரசவாதம் பொய்யோ யென்றால்

துள்ளவே வங்கிசங்கள் எல்லாம் பொய்யாம்

சூதாடு வார்போலச் சொல்ல வேண்டாம்.''276

வகார வித்தை என்னும் வாதக்கலை பொய்யென்று சொன்னால் ஞானமும் பொய்தான். ஞானத்தை அடைய வாதமே படிக்கல்லாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரசவாதம் பொய்யென்று சொல்லிவிட்டால் சித்தர் பரம்பரை என்பதும் பொய்தான். அறிவற்றவர் போலப் பேசாதீர்கள் என்று யூகி முனிவர் கண்டிக்கிறார். ‘வாதமுறை யில் தயாரிக்கப்படுகின்ற ‘தங்க மெழுகு’ என்னும் மருந்தை, காலை மாலை ‘இருவேளை’ உண்டுவந்தால், உடல் உறுதியாவது மட்டுமல்ல, நரையும் திரையும் மாறிப் போகும்’277 என்று வாத மருந்தின் பயன் கூறப்படுகிறது. ‘செம்பு மெழுகு‘ என்னும் மருந்து நரைதிரையைப் போக்கி, நரம்புகளைப் பச்சையாக்கும்278 என்பர். நரம்பே மனிதனின் ஆயுளைக் கூட்டுவதும் குறைப்பதுமாக இருக்கிறது. அதனையே, நரம்பு பச்சையாகும் என்பர். நரம்புகள் இளையதாக ஆகி உடலைக்காக்கும் என்று பொருள் கொள்ளலாம். ‘செம்பு மெழுகு’ என்னும் வாத மருந்து, வாத நோய் என்னும் 84 வகை நோய்களைத் தீர்க்கும் என்பர். குறிப்பாக நரம்பின் தொடர்பாக உண்டாகும் நோய்களான வாதவலி, மகோதரம், இசிவு, அண்டவாதம், நரித்தலை வாதம் போன்றவை தீரும்279 என்பர். ‘பஞ்சலோகச் செந்தூரம்’ என்னும் மருந்து நானூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைத் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. இதன் செய்முறைகள் பெரும்பகுதி மறைபொருளாக அமைந்துள்ளன. முறையான பயிற்சியும் முறையான கல்வியும் இல்லாதவர்கள், இதனுடைய உண்மையான செய்முறைகளை அறியாமல் பொருள்களை வீணடித்திருக்கிறார்கள். உண்மைப் பொருளை உணரும் திறனில்லாதவர்கள் வாதம் பொய்யென் பார்கள்’280 என்று வாத மருந்தின் நேர்மையை எடுத்துரைக்கக் காண்கிறோம்.

‘வாத முறைகள் ஞான நெறிக்குள் செல்லப் பயன்படும் கருவிகளில் ஒன்றெனக் கூறுவர். ஞானம் கண் என்றால் வாதம் அதன் இமை’281 என்று வாதத்துக்கும் ஞானத்துக்கும் உரிய தொடர்பைக் கூறுவர். ‘வாத முறையினால் ஞானத்தை அடைந்து, அதன் பயனைத் தானும் நுகர்ந்து மக்களுக்கும் நுகர்ந்தளிக்கச் செய்யாமல், வாதத்தைக் கருவியாகக் கொண்டு, பெண்களை மயக்கிச் சிற்றின்பத்தில் சிக்கிச் சிதைந்து போகிறார்கள்’282 என்பதனால், வாதமுறைகள் தெளிவாக உரைக்கப்படாமல், சில மரபு வழி நுட்பங்களைக் கொண்டு உரைக்கப் பட்டிருப்பதன் உண்மை விளங்குகிறது.

‘பொருள் தேடல்’ என்னும் கொள்கையை மட்டுமே கொண்டு வாத முறையில் மருந்துகளைத் தயாரிக்க எண்ணுகின்றவர்களே மிகுதியாகக் காணப்படுகின்றனர். ஆனால், சித்தர்கள் இதற்கு உடன்பட்டவர் களாகத் தெரியவில்லை. பொருள் என்பது சித்தர்களுக்குப் பொருட் டாகவே தோன்றவில்லை என்பதுடன், ஞானம் என்னும் அறிவு வழிப் பயணமே சித்தர்கள் மேற்கொண்ட பயணத்தின் பாதை என்பது உய்த்துணரத்தக்கது.

வர்மம்

சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இயங்குவது வர்மமாகும். வர்மத்தை மர்மம் என்றும் கூறுவர். இது மறைவு என்னும் பொருளை உணர்த்துவதாக இருக்கிறது.

வர்மக்கலை

வர்மம், கலையின் பாற்பட்டது. இது மருத்துவத்துக்கு மட்டும் பயன்படாமல், எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கிறது.

வர்மத்தின் பெயர்கள்

“உயிரினங்களின் உடலில் பேசிகள், தசிரங்கள், நரம்புகள், என்புகள், பொருந்துகள், விசிகள், ஆகியன எவ்வெவ் விடத்தில் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றனவோ அவ்விடங்களில் ‘பிராணன்’ அடங்கி நிற்கும். இதனை, ‘அமிர்த நிலைகள்’ என்றும், ‘மர்ம நிலைகள்’ என்றும் கூறப்படும். இவ்விடங்களில் தாக்கு, காயம், குத்து, வெட்டு, தட்டு, இடி, உதை படும்போது, வலி, விதனம், வீக்கம், இரத்தம் வெளிப்படுதல், மறத்துப் போதல், உறுப்புகள் செயலிழத்த லோடு மரணத்தையும் நேர்விக்கும். இதனைக் காயம் பட்டிருக்கிறது அல்லது மர்மம் கொண்டிருக்கிறது என்று கூறலாம். இத்துன்பத்தை நீக்கும் மருத்துவ முறைகள் ‘வர்ம பரிகாரம்’ அல்லது ‘வர்மானி’ என்று வழங்கப்படுகிறது.”283 என்று வர்மத்துக்கு வழங்கி வரும் வேறு பெயர்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

வர்ம முறைகளால் எலும்பு முறிவு, எலும்பு ஒடிவு போன்ற வற்றுக்குச் செய்யப்படும் மருத்துவம் ‘வர்ம மருத்துவ’ மாகும். வர்மத்தின் துணை கொண்டு பல நோய்களைக் குணப்படுத்த முடியும். நோயாளியின் மர்மப் பகுதிகளில் அடித்தும், தட்டியும், தொட்டும், தடவியும், செய்யப்படும் மருத்துவ முறை வர்மத்தைச் சார்ந்ததாகும். இன்றைய நவீன மருத்துவ முறையில் ஒன்றாகக் கூறப்படும் ‘நரம்பியல் முறையே’ பழங்காலத்தில் வர்ம முறையாக அழைக்கப்பட்டுள்ளது.284 என்பது வர்மத்தின் அடிப்படைத் தத்துவமாக அமைகிறது.

வர்ம நிலைகள்

வர்மத்தில் கூறப்படும் ‘அமிர்த நிலை’களில் அடி, குத்து போன்றவை ஏற்பட்டால், உறுப்புகள் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகிறது. அதே போல, மருத்துவம் செய்யக் கூடாத நாள் எனக்கூறும் குறிப்பும் காணப்படுகிறது. அது அமிர்த நிலைகள் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து, முப்பத்திரண்டு இடங்களில் காணப்படும். அது நிற்கும் இடத்தில், நிற்கும் நாளில் அடி–குத்து போன்றவையால் வர்மம் எற்பட்டால் மரணம் ஏற்படும் என்பர். அவ்வாறு கூறப்படுவதனை உற்று நோக்கினால், அமிர்த நிலைகள் நகரும் தன்மை உடையதாகவும், நிலையற்ற தன்மை கொண்டதாகவும் இருக்கக் காண்கிறோம்.

ஜப்பானியரின் ஜுடோ

வர்மக்கலை ஜப்பானியரின் ஜுடோ முறைகளுடன் ஒத்துப் போகும். ஜுடோ முறை தற்காப்புக்காகவும் பிறரைத் தாக்கவும் பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தின் வர்மக் கலை, தாக்குதலால் காயப்பட்டு அதனால் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும், கேடுகளுக்கும் சிறந்த பரிகார முறைகளின் உதவி கொண்டு நிவாரணம் அளிக்கப் பயன்படுகிறது.285 என்பதால், ஜப்பானியக் கலைக்கும் தமிழகத்து மருத்துவக் கலைக்குமுள்ள வேறுபாடு விளங்குகிறது.

வர்மத்தின் தேவை

நரம்பில் அடிபட்டு அதனால் நோய் உண்டானால், மருந்தினால் மட்டும் மருத்துவம் பார்த்துச் சரிசெய்துவிட முடியாது. நரம்பில் ஏற்பட்ட அடியை வர்ம முறையில் சரிசெய்த பின்பு, ஏற்பட்ட நோய்க்கான மருந்தைச் செலுத்திக் குணப்படுத்த வேண்டும்.

"" அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ

கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்

நரம்பு கோணிடில் நாமதற் கென்ன செய்வோம்''286

என்னும் பழம்பாடல், வர்ம மருத்துவத்தின் தேவையைக் குறிப்பால் உணர்த்துகிறது. அரும்பு கோணினால் அதன் மணம் குன்றாது. கரும்பு கோணினால் பாகாவும் வெல்லமாகவும் பயன்படும் . இரும்பு கோணினால் வேல், ஈட்டி, அம்பு, அங்குசம் போன்ற ஆயுதங்களாகும். உடம்பிலுள்ள நரம்பு கோணினால், நாம் எதுவும் செய்ய முடியாது; பயனற்றுப் போக நேரிடுமே என்று கருத்துரைக்கிறது.

வர்ம நூலாசிரியர்

வர்மக் கலை மர்மக்கலை என்பது போல, வர்மக்கலை வரலாறும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது என்பர். வர்மக்கலை நூல்கள், வர்ம பீரங்கி, வர்ம ஆணி, வர்ம சூத்திரம், வர்மக் கண்ணாடி போன்றவையாகும். அகத்தியர், போகர் போன்ற முனிவர்கள் இந்த நூல்களை இயற்றினார்கள் என்பது மரபு. பீரங்கி போன்ற பிற்காலச் சொற்கள் வழங்குவதிலிருந்து, இந்நூல்களை அகத்தியரோ, போகரோ எழுதியிருக்க முடியாது என்பர். ஆனால் சித்தர்கள் தங்கள் உள்ளொளி உணர்வினால் கண்ட உண்மைகள் வாய்மொழியாக, வழி வழியாக வழங்கி வந்து பிற்காலத்தில் ஏட்டுருவம் பெற்றிருக்க வேண்டும். இதனால்தான் சித்தர்களால் போதிக்கப்பட்டு வந்த தமிழ்மருத்துவம், சித்த மருத்துவம் என்றே வழங்கி வருகிறது.287

வர்மமும் வடமொழியும்

“வடமொழி நூலாகிய சரகத்திலும் சுசுருதத்திலும் வர்மத்தைப் பற்றிக் காணப்படினும் தமிழ் நூல்களிலே காணப்படும் அளவு விரிவாகவும் நுட்பமாகவும் வழக்கில் உள்ளதாக இல்லை என்று தெரியவருகிறது288” என்றதனால், ஒரு கலையைப் பற்றிக் கூறும் தகவலுக்கும், கலையைக் கற்பிக்கும் கல்விக்கும் வேறுபாடு உடையதைப் போல, வர்மத்தைப் பற்றிய தகவலைத் தருகின்ற சரகர், சுசுருதர், ஆகி யோருக்கும், வர்மக்கலையைத் தோற்றுவித்துக் கற்பிக்கும் கல்வி முறையாக உள்ள தமிழ் வர்மத்துக்கும் உள்ள வேறுபாடாக இதனைக் கொள்ளலாம். ஜப்பானிய ஜுடோவைப் பற்றிய நூல் தமிழிலும் இருக்கிறது என்பதற்காக, ஜுடோ முறை தமிழ் நாட்டுக்கு உரியது என்று கூறினால் எவ்வாறிருக்குமோ, அவ்வாறே வடமொழிக்கும் வர்மத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவதுமாகும். உலக நாடுகளில் மிகச் சிறந்த இலக்கியங்களெல்லாம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அமெரிக்காவில் சேமிக்கப் படு கின்றன. அதனால் அவற்றை அமெரிக்க இலக்கியங்களாகக் கூற முடியுமா? அது போலத்தான், தமிழகம் அல்லாத பிறமொழிகளில் வர்மத்தின் தகவல்கள் காணப்படுகின்றன என்ற ஒரே காரணத்துக்காக, வர்மத்துக்கும், அம்மொழிக்கும் தொடர்பை ஏற்படுத்துவதுமாகும்.

வர்மங்களின் எண்ணிக்கை

உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலுள்ள உடற்பகுதி களில் காணப்படும் வர்மங்களின் எண்ணிக்கை 108 என்று வர்ம சூத்திரமும்,289 ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்று, ஒடிவு முறிவு சாரி நிகண்டகராதியும290 கூறுகின்றன.

"" பாரப்பா படுவர்மம் பன்னி ரண்டும்

பாங்கான தொடுவர்மம் தொண்ணூ<ற் றாறாம்''291

என்று, படுவர்மம், தொடுவர்மம் என இரண்டு வகையாகக் கருதப் படும்.

"" மங்கையர்க்கே குறைந்த வர்வம் பீனசக் காலம்

சொந்தமென்ற இந்தவர்மம் ஒன்று நீக்கி

தொகையாக ஒரு நூற்றி ஏழாம் பாரு.''292

பெண்களுக்குப் பீனசக் காலமாகிய (கூஞுண்tடிண்) விரை நீங்கலாக 107 வர்மமாகும்.

வர்ம இடங்கள்

வர்மங்கள் பொதுவாக 108 என்றும், ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்றும் கூறப்பட்டாலும், வர்மத்தின் இடங்களைக் குறிப்பிட்டு, எந்தெந்த உறுப்புகளில் எத்தனை வர்மங்கள் ஏற்படும் என்று கூறும் போது, இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.

வர்மம் நேரும் உறுப்புகள் எனக் குறிப்பிடப்படுபவை வருமாறு:

கால் இரண்டு 22 ; கை இரண்டு 22; வயிறு3; மார்பு9; முதுகு14; கழுத்தின் மேல்37; தசையில்10; எலும்பில்8; நாடியில்21; பெரு நரம்பில்9; நரம்பில்36; சந்தில்20 என 159 வர்மங்கள்293 கூறப்படுகின்றன.

மேலும், வர்மங்களின் எண்ணிக்கை 122 என, ‘வர்ம சிகிச்சை’ என்னும் நூலில் காணப்படுகிறது.

படு வர்மம்12 (varmam due to violent injury)

தொடுவர்மம் 96 (varmam due to touch injury)

தட்டுவர்மம் 8 (varmam due to blow injury)

தடவு வர்மம் 4 (varmam due to massage injury)

நக்கு வர்மம் 1 (varmam due to licking injury)

நோக்கு வர்மம் 1 (varmam due to sight injury)294

122

மேற்கண்ட வர்ம சிகிச்சை என்னும் நூலின் பட்டியலில் வரைபடத்துடன் வர்மங்களின் எண்ணிக்கை 130 ஆகக் கொள்கிறது.

உடல் அளவுகளில் வர்மம்

உடலின் அளவுப்படி, தலை முதல் கழுத்துவரை, கழுத்து முதல் தொப்புள் வரை, தொப்புள் முதல் மூலம் வரை, கை, கால் என்னும் அளவின்படி வர்மங்கள் உரைக்கப்படும்.

தலை முதல் கழுத்துவரை – 25

கழுத்து முதல் தொப்புள் வரை– 45

தொப்புள் முதல் மூலம் வரை – 9

கைகளில் – 14

கால்களில்– 15

108

என்று , 108 வர்மங்களை வர்ம பீரங்கி கூறுகிறது.295

வர்மத்தில் நாடிகள்

வர்மங்கள் நாடிகளின் வகையாகவும் பிரித்துக் காணப்படுகிறது. இவ்வாறு பிரித்துக் காணப்படுவதனால், வர்மத்தினால் உண்டாகும் நோய்களின் குணங்கள் அறியப்பட்டு, மருத்துவம் செய்ய வழியேற்படும்.

வாத வர்மம்64; பித்தவர்மம்24; ஐய வர்மம்6; உள் வர்மம்6; தட்டு வர்மம்8 = 108 296என்னும் வகைகளாகும்.

வர்மத்தில் இயல்பு

உடம்பில் வர்மம் கொண்டால் உடனே பரிகாரம் செய்து நிவர்த்தி செய்யப்பட்டாலும், ஏற்பட்ட வர்மம், வர்மத்தின் மாத்திரை அளவை விட மிஞ்சிய அளவில் ஏற்பட்டிருக்குமே யானால், நாள் பல கடந்த பின்பும் உடலைப் பாதிக்கும் கடுமையான நோய்களை உண்டாக்கும். கண், காது போன்ற உறுப்புகள் பழுதாகி விடுவதும் உண்டு.

“ கேளேநீ; வர்மமது கொண்டு தானே

கெடிதப்பி காலமது சென்று போனால்

ஆனதுவே நிறமாறி கறுத்துப் போகும்

அன்னமது சிறுத்துவிடும் குன்னிக் கொள்ளும்

நாளதிலே நீர்மலமும் பிடித்துக் கொள்ளும்

நாயகமே தாதுகெடும் தீர்க்க மாக

பாழான சயம் இளகி கொல்லும் கொல்லும்

பண்டிதத்தை அறிந்துநீ செய்யில் மீளும்''297

வர்மம் கொண்டு நாள்கள் சென்ற பின்னர் அன்னம் ஏற்காமை, உடல் கூனுதல், உடல்கட்டுதல், கேடடைதல், சயம், பீனிசம், காச நோய் (ஆஸ்துமா), கண் மயக்கம், காது மந்தம், அஸ்தி சுரம், எலும்புருக்கி போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்பிருப்பது தெரியவரும்.

வர்ம மரணங்கள்

வர்மங்களில் ஆயுதமோ அடியோ பட்டால் மரணம் நேரும் என்பது பொதுவாக உரைக்கப்படும் கருத்தாக இருப்பினும், எந்தெந்த வர்மங்களில் அடிப்பட்டால், எத்தனை யெத்தனை நாள்களில் மரணம் வரும் என்பதை வர்ம விதி அறிவிக்கிறது.

1. உந்தி2; சங்கம்2; தயமதிபன்1; குதம்1; வத்தி1; சிருங்காடம்4; கிரிகை8; என்னும் பத்தொன்பது வர்மங்களிலும் அடியோ, ஆயுதமோ; புண்ணோ பட்டால் ஏழு நாள்களுக்குள் மரணம் நேரும்.

2. தம்பம்2; தலம்2; இருதயம்4; சந்தி2; சுரோணி5; தனம்2; வத்தி4; சிப்பிரம்4; அபலாபம்2; பிருகிருதி2; நிதம்பம்2; தனரோகி2 எனும் முப்பத்து மூன்று வர்மங்களில் அடி, ஆயுதம், புண்பட்டால் ஒரு திங்களுக்குள் மரணம் நேரிடும்.

3. உற்சேபம்1; தபனி1 ஆகிய இரண்டில் வர்மம் ஏற்பட்டால் சதை அழுகும்.

4. வர்மங்களில் அடியோ காயமோ ஏற்பட்டால் துன்பத்தை மட்டும் தந்து, உயிரைப் போக்காத வர்மங்கள் என நாற்பத்து நான்கு கூறப்படும்.

5. புற்று நோய்க்கு நிகராக கழு நீர் போலப் புண்ணாகிச் சீழ் கொண்டும், உடல் வெளுத்தும் பல வித நோய்களினால் உயிரைப் போக்கும் வர்மமாகத் தசைவர்மம் கூறப்படும்.

6. தசைகளின் தாது தண்ணீர் போல என்புகளில் ஊறி, இரத்தம் பாய்ந்து வலியை உண்டாக்குவதுடன், பதைக்க வைத்துக் கொல்லும் என்று ‘எலும்பு வர்மம்’ உரைக்கப்படுகிறது.

7. மாங்கிஷத்தில் அடங்க, வெறிபட நின்று வேதனை உண்டாக்கிக் கொல்வது ‘சிறுநரம்பு’ வர்மமாகும்.

8. உடலை முடக்குவித்து, மடக்கி, தாதைக் கெடுத்து, தசையில் இரத்தத்தைப் பாய்ச்சி, நடையைக் குன்றச் செய்து, அறிவை வேறொன்றாக்கிக் கொல்லும் பெரு நரம்பு வர்மம்.

9. அதிக அளவு இரத்தம் பாய்ந்து உடலை மெலியச் செய்து காசம், சலிப்பு, இளைப்பு, விக்கல் போன்றவற்றை உண்டாக்கிக் கொல்லும் என்று உறுதிப்பட உரைக்கப்படுவது நாடி வர்மம்.

10. உடலைச் சூடாக்குவதும், குளிரடையச் செய்வதும், வேதனை அடையச் செய்து உடலை வீங்கச் செய்வதும், வீக்கம் வடிந்ததும் உடலின் வடிவத்தை வேறாகக் காட்டுவதும், உடலைத் தளர்ச்சிடையச் செய்வதும் சந்து வர்மமாகும்.298

மேற்கண்ட வர்மங்கள் உடலைக் கொல்வதற்கு முன் மரணத்தை விடவும் கொடுமையான நோய்களையும் துன்பங்களையும் தந்து, பின்னர் மரணத்தைத் தரும் என்று அறியப்படுகிறது. சில நோய்களையும் நோயின் கொடுமைகளையும் காணும் போதும், கேட்கும் போதும் அவை, என்றோ ஏற்பட்ட வர்மத்தினால் வந்த துன்பமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதுபோல் வர்மத்தின் செயல்கள் காணப்படுகின்றன.

மேற்கண்ட வர்மங்களின் தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வர்மங்களாகக் கீழே குறிப்பிடப்படவிருக்கின்றன. அவை, நோய்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்து விட்டு, மரணத்தை மட்டும் அதுவும் மிகவும் விரைவாக மரணத்தை உண்டாக்குபவையாகக் கூறப்படுகின்றன.

1. உச்சியின் மத்தியில் உள்ள தூண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.

2. இதயத்திலிருந்து மூன்று அங்குலத்துக்கு மேலே இருக்கும் பூவலசன் நரம்பு முறிந்தால் ஐந்தாம் நாளில் மரணம்.

3. இடுப்பு சாலத்தில் உள்ள ‘நீர்ப்பிசி‘ நரம்பு முறிவு கொண்டால் மூன்றாம் நாளில் மரணம்.

4. பஞ்வர்ணக் குகையிலிருக்கும் ‘குடகரி’ வர்மம் முறிந்தால் மூன்று நாளில் மரணம்.

5. ‘சுவாசப்பை’ நரம்பு முறிந்தால் மூன்று நிமிடங்களில் மரணம் உண்டாம்.

6. கருவுற்ற மங்கையர்க்குத் துறபேசி நரம்பில் வர்மங் கொண்டால், ஈனும் குழந்தை ஓராண்டில் மரணமடையும்.299

என்று, வர்மத்தின் கடுமை உரைக்கப்பட்டுள்ளது. வர்மத்தால் உடனே மரணம் வரும் என்பதற்கும், கடுமையான நோய்களைத் தந்து துன்பத்துள்ளாழ்த்தி மரணமடையச் செய்யும் என்பதற்கும் மாறான குணமுடைய வர்மமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"" நேரப்பா தாருநரம்பு அதிர்கா யங்கள்

நேராக தீருமதில் தீர்ச்சை யுற்றால்

காரப்பா நாற்பத்தி யொன்றா யிரத்தி நாள்

கடந்தே காயசுரம் போல் காயும்''

"" உறுவான தாரை நரம்பதி லெழுந்த

உற்றநோய் தீருமடா வதிர்ச்சி யுற்றால்

மாறாகும் நாள் இருபத்தி ஓராயி ரத்துள்

மறலியினால் உயிர்பிரியும் வண்மையாய்''300

கடைக்கண்ணின் அருகிலுள்ள ‘தாரு” நரம்பு முறிந்தால் கண்பார்வை போகும். மருத்துவத்தால் குணமாகும். முறையான வர்மமுறை மருத்துவம் பார்க்காவிட்டால் தலையில் வலி, வீக்கம், நாக்குத் துடித்தல், மயக்கம் ஆகியவை உண்டாகும். முறையான மருத்துவம் பார்க்கப்பட்டால் 41,000 நாள் கடந்து சுரம், தலைகனம், சிரசு எரிச்சல், வாய் உளறல், தாகம், பொருமல், அதிசாரம் உண்டாகும். மருத்துவம் முறையாகச் செய்யாவிட்டால் 21,000 நாளில் மரணம் நேரும் என்று கூறப்படுகிறது.

21,000, 41,000 நாளுக்குப் பின் நிகழும் நோயையும் மரணத்தையும் ‘தாரு’ நரம்பு முறிவினால் தான் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டிருப்பது மிகையாகத் தோன்றுகிறது. 58 ஆண்டுக்களுக்குப் பின் வரும் மரணத்தையும், 113 ஆண்டுக்குப் பின் வருகின்ற நோயையும் கணித்திருப்பதாகக் கூறினாலும், அதில் உண்மையிருப்பதாகத் தோன்றவில்லை. மனிதனின் வாழ்நாளே நோயில்லாமலிருந்தாலும் நூறு ஆண்டுதான் என்று சித்த மருத்துவம் கூறியிருக்க, நூறாண்டைக் கடக்க வேண்டுமென்றாலே கற்ப முறைகளை உண்ண வேண்டும் எனத் தெரிகிறது. கற்பம் உண்ட பின்னர், நோய் வரும் என்றால், கற்பம் முறை தவறானவை என்றாகி விடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், வர்ம முறைகளின் மூலம் உடம்பிலுள்ள நரம்புகள் பல கண்டறியப் பட்டிருக்கின்றன. நரம்பும், நரம்பினால் உண்டாகக் கூடிய நோய்களும் விளக்கப் பட்டிருப்பதால், விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்னரே நரம்பியல் முறை மருத்துவமான வர்மம் தமிழகத்தில் நன்கு வளர்ச்சி யடைந்த நிலையில் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.

நரம்பு முறிவினால் உண்டாகும் (பக்க விளைவுகள்) குறிகுணங்கள்

ஆங்கில மருந்துகளினால் பக்க விளைவுகள் ஏற்படுவதைப் போல, நரம்பில் முறிவு ஏற்பட்டால், நோயாளிக்கு உண்டாகும் குறிகுணங் களைப் பக்க விளைவுகள் எனக் குறிப்பிடலாம். அத்தகைய குறி குணங் களாவன:

நரம்பை அறிந்து, நரம்பின் செயலைக் கண்டறிந்து, நரம்பினால் உண்டாகும் விளைவு கூறப்பட்டிருப்பது, நரம்பியல் முறைகளில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியைக் காட்டுவதாக இருக்கிறது. மனித உடம்பின் அனைத்துச் செயல்களும் மூளை என்னும் தலைமைச் செயலகத்திலிருந்தே இயக்கப்படுகின்றன என்பதை அறிவோம். இங்கே குறிப்பிடும் நரம்பு முறிவினால், மூளையின் கட்டளை மூலங்களில் பாதிப்பை உண்டாக்கிப் பக்க விளைவுகள் தோன்றுவ தாகக் கருதலாம். நரம்புகள் ஒவ்வொன்றும் மூளையின் தலைமை நிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் உடலியல் துறை சார்ந்த மருத்துவ அறிவியல் கருத்து என்பதால், அத்துறை சார்ந்த வல்லுநர்கள், வர்மநூல்கள் கூறுகின்ற நரம்புகளையும், நரம்பின் தன்மைகளையும் ஒப்பாய்வு முறையில் விளக்கிக் கூறினால் பயனுடையதாக இருக்கும்.

வர்ம அடங்கல்

வர்ம இடங்களில் அடிப்பட்டு உயிர் முழுவதும் சலிக்காமல் வர்மங்களில் உள்ளடங்கி நிற்கும். அவ்வாறு வர்மங்களில் அடங்கி நிற்கின்ற இடங்கள் அடங்கல் என்று குறிப்பிடப் படுகிறது.

உயிர் உள்ளடங்கி நிற்கும் வர்ம அடங்கல் என்று 16 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு சொல்லப்பட்ட போதிலும் நூல்களில் குறிப்பிடப்படாமல் கையடக்கமாகவும் கர்ண பரம் பரையாகவும் இருந்து வரும் அடங்கல்கள் ஏராளம் எனத் தெரிகிறது.

பொதுவாக, வர்மங்களில் அடிப்பட்டு மூர்ச்சை அடைந்தவர் களுக்கு, வர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய தன்மைகளுக்கு ஏற்ப, மாறுபட்ட குணங்கள் தோன்றும். வர்ம நோயாளியை வர்ம மருத்துவர் சோதிக்கும் போது முதலில் கவனிக்க வேண்டியது, நோயாளியிடத்தில் அபாயக் குறி தெரிகிறதா என்பதே. வர்மத்தில் அடிப்பட்ட நோயாளிக்குக் கண் நட்டு வைத்தது போல் குத்தி நிற்கும். விந்தும் மலமும் கழிந்திருக்கக் காணலாம்.

நாடி, துரிதமான நடையில் அல்லது மிகவும் மெதுவான நடையிலும் காணப்படும். நாடித் துடிப்பில்லாமலும் இருக்கும். இவ்வாறு மூன்று வித நாடிக் குறிக்குணங்கள் அறியப்பட்டால், அந்நோயாளியைத் தொடவே கூடாது. ஒரு சிலருக்கு, ஒலிகுன்றியும், துணிகளைக் கிழிக்கும் குணமும், அசாத்தியமான அலரலும், முகம் அதிகப் பிரகாசத்துடனும், கறுத்தும் காணப்படும். அவ்வாறான வர்ம நோயாளிகள் மிக விரைவில் மரணத்தைச் சந்திப்பார்கள்301 என்று, வர்ம மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள் கூறப்படுகின்றன.

வர்ம மருத்துவம்

வர்ம மருத்துவம், நூல் வழி அனுபவம் பெறும் மருத்துவமல்ல; மரபு வழியாகப் பயிற்றுவிக்கும் அரிய மருத்துவ மாகும்.

இளமைக் காலங்களில் இளைஞர்கள் மன மகிழ்ச்சிக்காக விளையாடும் போதும், போர் வீரர்கள் போர்புரியும் போதும், வர்ம நிலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுகின்ற வர்ம அடிகள், அவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக் கூடிய கொடுமை நிறைந்ததாக இருப்பதனால், அதற்குரிய வர்ம மருத்துவக் கல்வியால், அறிவால், பயிற்சியால், நுட்பமான உணர்வால் முதிர்ந்த நிலையுள்ள வராக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

“ஒடிவு முறிவுக்குரிய மருத்துவம் செய்பவர் படுவர்மம் 18–ம், தொடுவர்மம் 96உம் சரநிலைகள், இடகலை, பிங்கலை, சுழுமுனை முதலியவற்றின் இயக்கங்களைக் கண்டறிவதில் நன்கு தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வர்மத்தின் நிலைகளை அறிவதுடன், மயக்கம், கபம், சீதம், வியர் வை, சுவாசம் முதலிய குறிகுணங்களையும் கண்டறிய வேண்டும”302

என்று, வர்ம மருத்துவம் செய்யத் தொடங்குமுன், மருத்துவன் கண்டறிய வேண்டிய தேர்வுமுறை அடிப்படைகள் எடுத்துரைக்கப் படுகின்றன.

படுவர்மங்களுக்கு, வர்மம் கொண்ட நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்துக்குள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்னும், ‘அவசரச் சிகிச்சை’ முறை குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளது. அக்காலத்தைக் கடந்து விட்டால் நோயாளியைக் காப்பாற்ற முடியாது எனத் தெளிவாக உரைக்கப்படுகிறது.

பருவத்தைப் பாழாக்கும் வர்மம்

வர்மங்களில் சில மரணத்தைத் தரும். சில கடுமையான நோயையும் துன்பத்தையும் தரும் என கூறப்பட்டது. ஆண்களை அலியாகவும், பெண்களை மலடியாகவும் ஆக்கக் கூடிய வர்மம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"" கருவூன்றி பூக்காத மங்கை யர்க்கு

மாயமாய் கொண்டாலோ பூப்பு ஏது

மாதவிடாய் ஒருநாளும் வாரா தப்பா

ஓயுமிடை காணா திருளி யாவாள்.''303

இடுப்பு சாலத்தில் உள்ள நீர்ப்பிசி நரம்பு முறிந்தால், மூன்றாம் நாளில் மரணம் வரும். மதி மயக்கம் உண்டாகும். கண் ஒளி போகும். உடலில் குத்தல் உண்டாகும். சிறுநீரோடு சீழ் கலந்து போகும். இந்தக் குணங்களே ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டாகும் என்றாலும், இளம் பெண் பூப்படைய மாட்டாள். பருவடைந்தவள் மாதவிடாய் அடைய மாட்டாள். கருத்தரிப்பு உண்டாகாது. அதே போல், ஆண்களுக்கு ஆண்மை குன்றிப் போகும்304 என்று, உரைக்கப் பட்டுள்ளது.

எலும்பு முறிவு வகைகள்

1. சாதாரண முறிவு (Simple Fracture).

2. கலப்பு முறிவு (Compound Fracture).

3. சிக்கலான முறிவு (Complicated Fracture).

4. நொறுக்கப் பட்ட முறிவு (Comminuted Fracture).

5. முறிந்த பாகம் இன்னொரு பாகத்துடன் மாட்டிக் கொண்டு

அசையாதிருப்பது (Impacted Fracture).

6. பச்சைக் கொம்பு முறிவு (Green Stick Fracture).

7. தன்னில் தானே முறிவது (Spontancous Fracture).

8. பள்ளம் ஏற்படும் முறிவு (Depressed Fracture).

எனப்படும். இத்தகைய வர்ம முறைகளால் நரம்பு முறை மருத்துவமும், எலும்பு முறை மருத்துவமும், ஒருங்கிணைந்து தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்று ‘வர்ம மருத்துவம்’ என்று போற்றக் கூடியதாக அமைந்திருக்கிறது.

மருத்துவமும் காலமும்

காலம் என்பது தாம் செய்யக் கருதிய செயலுக்கு ஏற்ப அமையும். காலத்தைக் கருத்திற் கொண்டு செய்கின்ற செயல், காலத்தைப் போலச் சிறப்பிற்குரியதாக அமையும். காலத்தைக் கருதிச் செய்கின்ற செயலைப் போலச் சிறந்த செயல் ஒன்றிருப்பதில்லை.

"" அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.''305

என்னும் குறள், காலத்தை அறிந்து செய்கின்ற செயலின் சிறப்பை அறிவிக்கும். செய்கின்ற செயலின் வெற்றிக்கும் தோல்விக்கும் ஆதாரமாகக் காலம் அமைகிறது.

மருத்துவ நூலில் பல்வேறு காலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனின் சராசரி ஆயுளைக் குறித்தும், மருந்து செய்வதற்கு ஏற்றகாலம் எது என்பதும், மருத்துவன் நோயாளியின் நாடியை அறியத் தேர்வு செய்வதற்குரிய காலமும், நோயின் வன்மையினால் நோயாளியின் இறுதியை அறிவிக்கும் காலமும் காலக் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. இவை, ஆயுள், ஆண்டு, பெரும்பொழுது, சிறு பொழுது, கிழமை, நாள், நட்சத்திரம், வாரம், நாழிகை, திதி, கணம் எனப்படும்.

முறையாகப் பிறந்த பிள்ளைக்கு ஆயுள் 100 ஆண்டுகள் ஆகும். அதில் ஒன்று முதல் 10 வயது வரை பாலப்பருவம். 20 வயது வரை வளர்ச்சிப் பருவம். முப்பதாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒளி குறையத் தொடங்கி, 40 வயதுக்குள் அழகு குன்றி, 50–ஆம் வயதில் நிலம், நீர் இவற்றின் தன்மை மிகுந்து நெருப்பின் தன்மையால் நரை உண்டாகி உடல் தளர்ச்சியுறும். 60–ஆம் வயதில் நீர், மண் இவற்றின் தன்மை மிக அதிகரிக்கும். கண்ணின் ஒளி குறையும். நடையில்

தடைகள் காணப்படும். 70–ஆம் வயதில் உடல் ஒடுங்குவ துடன் நீர்ச்சத்து குறைந்து தாதுவில் தீத்தன்மை அதிகரிக்கும். தாதுக்கள் உலர்ந்து அறிவும் குன்றும். 80–ஆம் வயதில் வாய்வு அதிகம் வெளியாவதுடன் மேல் மூச்சு வாங்கும். தொண்ணூ<றாமாண்டில் புலன்கள் ஐந்தும் சீவனோடு பொருந்தும். விந்து மறைந்து போகும். 100 –ஆவது வயதில் நலம் எதுவுமே இல்லையாய் மரணம் உண்டாகும்.306 என்று இயல்பாக மனிதனின் வாழ்க்கையைப் பற்றிக் கூறப்படுகிறது.

மனிதன் கருவாக உருவான போதே வாழ்நாள் இவ்வளவு என்பதும், சாகும் நாள் இன்னது என்பதும், நற்குணம், தாழ்குணம், புகழ் இன்னவை என்பதும் கருவில் பதிப்பிக்கப்படுவதாகும்.

"" விட்டபின், கர்ப்ப வுற்பத்தி வீதியிலே

தொட்டுறுங் காலங்க டோன்றக் கருதிய

கட்டிய வாணாள்சா நாள்குணங் கீழ்மை சீர்

பட்டநெறி யீதென் றெண்ணியும் பார்க்கவே''307

எனப்படுவதனால், எல்லா நன்மை தீமைகளும் கருவில் பதியப் பெற்றவை என்பதை அறியலாம்.

இன்றைய அறிவியல் வல்லார்கள் கண்டறிந்த “ஜீனோம்” பற்றிய கருத்துகள் இதனோடு ஒத்திருப்பதைக் காணலாம். அணுவின் உள்ளே எல்லாம் பதியப் பெற்றவை என்பதே ஜீனோம் கண்டறிந்தவர்கள் கூற்றாகும்.

ஒவ்வொருவரின் உடல் அமைப்பு கருவில் இயல்பாக எப்படி அமைந்திருக்கின்றதோ, அப்படியே அவரின் ஆயுட்காலமும் அமைந்திருக்கும் என்பதை அறியும் முறை கூறப்படும்.

மனிதன் விடுகின்ற மூச்சுக் காற்றானது 6 விரல் அளவு வெளியே சென்றால் 80 ஆண்டும், ஏழுவிரல் அளவு வெளியே சென்றால் 62 ஆண்டும், எட்டுவிரல் அளவு வெளியே சென்றால் 50 ஆண்டும், ஒன்பது விரல் அளவு வெளியே சென்றால் 32 ஆண்டும், ஆயுளாக அமையும்.

"" ஏறிய வாறினில் எண்பது சென்றிருந்

தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்

ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்

தேறியே நின்று தெளியிவ் வகையே''308

என்றதனால், வெளிவிடும் சுவாசம் அளவுக்கு அதிகமானால் ஆயுள் குறையும். குறைவாக வெளியே விட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அறியலாம்.

காலமும் மருத்துவ நூலாரும்

காலத்தைக் கணிப்பதில் மருத்துவ நூலார் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதற்கோர் எடுத்துக் காட்டாகப் பின்வரும் செய்தி அமையக் காணலாம். அதாவது, பொழுதைப் பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் வகுத்தனர் முன்னோர். அதனையே ஏற்று மருத்துவ நூலாரும் தங்கள் மருத்துவக் காலங்களைக் கூறாமல், அதிலுள்ள சிறு சிறு குறைகளையும் நீக்க முயன்றிருப்பது தெரிய வருகிறது.

தென்தமிழ் நாடானது, சூரியனுடைய செங்குத்தான கிரணங் களால் வெப்பமும் ஒளியும் பெறுவதான வெப்ப மண்டலம் எனப்

பட்ட, பூமியின் நடுப்பாகத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கும் காரணத்தால், ஆறு பெரும்பொழுதுகளும் காலக் கணிதத்தில் கூறப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும் என்பதை அறிவாயாக. இக்கூற்று உண்மை என்பது கார்த்திகை பதினைந்து தேதிக்குப் பின் பனி பெய்வதையும், பங்குனி பதினைந்து தேதிக்கு மேல் சூரியனுடைய வெப்பம் அதிகரித்து வருவதையும் கண்ட பெரியோர்கள் ,மேற்படி ஆறு பெரும்பொழுதுகளையும் காலக் கணிதத்தில் கூறப்பட்ட தேதிக்கு 15 நாள் முன்னதாகவே மருத்துவப் பெரும் பொழுதாகக் கொண்டு, அவ்வக் காலத்து ஒழுக்கங்களைத் தவறாமல் ஏற்று வந்தாலே காலத்தின் மாறுபாடுகளால் ஏற்படும் நோய்களைத் தடுத்துக் கொள்ள இயலுமென்பதை அனுபவத்தால் கண்டறிந் துள்ளனர். இவ்வகைக் கணிப்பு தென்கீழ்த் தமிழ் நாட்டுக்கு ஒவ்வும் என்க.309

"" ஆதித்தர்க் குச்சமோ டாட்சிக்குட் பட்டதென்

றோதிடும் பூமத்திக் குத்தரத்தே பூதிசார்

தென்றமிழ்நா டுள்ளதால் செப்பாறு போழ்துசற்று

முன்னதாகத் தோன்று முணர்''310

என்று பெரும்பொழுதைத் துல்லியமாகக் குறித்துள்ளதால் மருத்துவ நூலின் தோற்றம் தென்தமிழ்நாடு என்பதை விளக்குவதாகத் தெரிகிறது.

காலமும் மருந்தும்

மருந்துகளைச் செய்ய எந்த எந்த மாதங்களில் எந்த எந்த மருந்துகளைச் செய்ய வேண்டுமென்று உரைக்கப் பெற்றுள்ளனவோ, அந்த அந்த மாதங்களில்தான் அந்த அந்த மருந்துகைளைச் செய்ய வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளதால் மாதங்களின் முக்கியத்துவம் விளங்குகிறது.

அதாவது, பங்குனி முதல் மாசி ஈறாக வரும் மாதங்கள் பன்னிரண்டில் இரண்டு இரண்டு மாதங்களாகப் பெரும் பொழுது காலத்தைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு மருந்தை ஒவ்வொரு பொழுதில் முடித்திடுமாறு கூறப்படுகிறது.

பங்குனி, சித்திரை – குரு மருந்து; தை, மாசி – செயநீர்;

ஐப்பசி, கார்த்திகை – உருக்கு வகை; ஆடி, ஆவணி – திராவகம்;

வைகாசி ஆனி – சாரணை; புரட்டாசி, மார்கழி – செந்தூரம்;

ஆகியவை செய்திட வேண்டும். இதில் ஏதோனும் தவறுகள் நேர்ந்தால் செய்யும் மருந்து சரியான பாகமாக அமையாது. கவனமாகப் பார்த்துச் செய்யவும் என்ற கண்டிப்பும் காணப்படுகிறது. 311

காலமும் வெப்பமும்

இதனால், இயற்கையின் வெப்பமும், மருந்திற்குத் தேவைப்படும் வெப்பமும் ஆராயப்பட்டிருப்பது தெரிய வரும். இளவேனில் காலத்தில் செய்ய வேண்டிய குரு மருந்தைக் கூதிர் காலத்தில் செய்ய நேர்ந்தால், நூறு வறட்டிகளினால் இளவேனில் காலத்தில் கிடைக்கும் வெப்பத்தை விடவும் குறைவாகக் கூதிர் காலத்தில் கிடைக்கக் கூடும். காரணம், இயற்கையாகவே இளவேனில் காலமும் கூதிர் காலமும் வெப்பத்தால் வேறு வேறானவை. ஒரு மருந்து, வேதியல் முறையில் ஒரு மாற்றத்தைப் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு வெப்ப நிலையில் அம்மருந்து வைக்கப்பட்டால்தான் நிகழும் என்பதே அறிவியல் உண்மை. அத்தகைய வேதியல் மாற்றம் நிகழாமல் செய்யப்படும் மருந்து நோயைத் தீர்க்கக் கூடியதாக அமையாது. நோயின் தன்மையை மாற்றவும் கூடும். அவ்வாறானால் மருத்துவரின் நற்பெயர் கெட நேரிடும். காலம் கருதினால் அவ்வாறு நிகழாமல் போகலாம்.

காலமும் நாடியும்

எந்த நோயையும் நாடியின் துடிப்பு கொண்டு கண்டறிய முடியும். இந்நாடியைக் கணிக்க காலம் பார்த்தல் வேண்டும். இந்தெந்த மாதங்களில் தான் நாடியைப் பார்க்க வேண்டும் என்பது விதியாகக் கூறப்படுகிறது.

“ சித்திரை, வைகாசிவைகறை; கார்த்திகைநண்பகல்;

ஆனி, ஆடி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி மாலை;

பங்குனி, ஆவணி, புரட்டாசி இரவு'' 312

என்னும் நான்கு சிறுபொழுதுகளில் நாடி பார்க்க வேண்டும்.

இதில் குறிப்பிட்டுள்ள சிறுபொழுதுக்கும் இயற்கையின் வெப்பத்துக்கும் ஏற்ப நாடிகள் இயங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் நண்பகலில் ஏன் நாடி பார்க்கக் கூடாது எனச் சிந்தித்தால் அதன் பொருள் விளங்கும்.

காலமும் மருத்துவனும்

மருந்துகளைச் செய்ய மாதத்தையும் பருவத்தையும் அறிந்து அதன் வழிச் சென்று, அதற்குரிய மருந்துகளைச் செய்து சேகரிக்கப் படுவதுடன், நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்ப்பதும் கூடாதென்பது கூறப்படும்.

"" நாள்களின் பேதம் பாரு நடவடி யின்ன தென்று

கோள்பாரு உச்சம் பாரு குணம்குறி வந்த குற்றம்

ஆள்பாரு நடக்கை பாரு அவரவர் செய்கை பாரு.''313

நோயாளியைக் காணுகின்ற நாளின் பேதா பேதங்கள்; கோள்களின் நிலை; அவற்றின் உச்சம்; அதனால் உண்டாகும் விளைவு; நோய்க்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பு; நோயாளிக்கும் கோள்களுக்கும் உள்ள நட்பு, பகை என்னும் உறவு; நோயாளிக்கு வந்த நோய்க்கு மருந்து தயாரிக்கும் காலம் என்பன கண்டறியப்பட்ட பின்பே, மருத்துவம் பார்க்க வேண்டும்.

"" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்''

"" உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்''314

என்னும் குறள்களின் பொருள் மேற்கண்டவற்றை உறுதி செய்ய அரணாக அமைவது கருதத்தக்கது.

காலமும் உணவும்

உணவை எந்த முறையில் உண்ண வேண்டும். உணவின் அளவு, உணவுண்ணும் நேரம் முதலியவற்றை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே“315 என்று பழந்தமிழ் மக்கள் கருதினர்.

“நுதல் வியர்க்கும் படியாக உணவை உண்டனர்“316 என்னும் செய்தியும் சங்க நூல்களில் காணப்படுகிறது.

"" விலாப்பக்கம் புடைக்கும் அளவிற்கு உணவுண்டனர்''317

என்பவற்றிலிருந்து உணவை எவ்வாறு உண்டனர் என்பது தெரியவரும். ஆனால், மருத்துவ நோலோர் மேற்கண்ட முறை யிலிருந்து மாறுபட்டிருக்கின்றனர்.

"" இரும்புறு பசியே யாகில்

இதயமே மலர்ந்து தோன்றும்

இரும்புறப் பசித்த ஊணும்

மிகுந்தஇன் பத்தைக் காட்டும்.''318

பசி உண்டான பின்னர் உண்ணும் உணவே உடலுக்கு இன்பத்தைத் தரவல்லதாகும் என்று கண்டனர்.

"" அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.''319

முன்னர் உண்ட உணவு செரிப்புண்டானதை அறிந்தும், பின்னர் மிக்க பசி உண்டான பின்பும், உடலுக்கு எந்தவித ஒவ்வாமையையும் உண்டாக்காத உணவை அறிந்தும் உண்க என்றனர். அதுவே, ‘நெடிதுய்க்குமாறு’ 320 என்றதைப் போல, நீண்ட நாள் வாழ வழி வகுக்கும் என்று வாகட மறையோர் வகுத்த முறையாம்.

அதே போல், உணவை எத்தனை பொழுது உண்பது என்பதும் கேள்விக்குரியது. சராசரியாக நாளொன்றிற்கு மூன்று வேளையை விடவும் அதிகமாக உண்ணுபவர் உண்டு. என்ற போதிலும் மூன்று வேளை உணவு என்பதே முறையானது என்பது பொதுவான கருத் தாகும். ஆனாலும், மருத்துவ வல்லார் உரைப்பது வேறாக உள்ளது.

"" உண்பதே ஒருபொழு தாகில் உடலுக்கு உறுதி யாகும்

உண்பதே இருபோ தாகில் உயர்பெலம் எழுதாது எய்தும்

உண்பது மூன்று காலம் உண்டிடில் பிணிஉண் டாகும்

உண்பதும் இரண்டு காலம் உரைத்ததாம் உலகத் தோர்க்கே

உரைத்திடும் காலம் ஆறும் உயர்நிலம் ஐந்தும் ஒக்கும்

நெறியுறு காலம் தப்பா நேர்மையாய்ச் சமைத்த அன்னம்

நெறியுற உண்பார்க்கு இல்லை நீள்நிலம் மீதில் நோயே.''321

ஒரு வேளை உணவினால் உடலுக்கு உறுதியும், இருவேளை உண வினால் உடலுக்கு வலுவும் உண்டாகும். மூன்று வேளை உணவு உண்டால் நோயும் உண்டாகும். இது உலகத்தோர்க்கு உரைத்தது. ஆறு காலத் திலும் ஐவகை நிலத்திலும் வாழும் மக்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்.

இவ்வாறு காலமாறுபாடு இல்லாமல் குறித்த காலத்தில், முறை யாகச் சமைக்கப் பெற்ற உணவை உண்ணுகின்றவர்களுக்கு நோய் என்பதே வராது என்று வகுத்துரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

காலமும் கற்பமும்

சாகா நிலையை எய்துவதற்காகவும், நோயற்ற வாழ்விற்காகவும் மருத்துவ, ஞான நூல்கள் கற்பங்களைக் கூறியுள்ளன. அக்கற்பங்களை உண்பதற்கு நாள்கள் குறிக்கப்படுகின்றன. கற்பங்களைப் பௌர்ணமி நாளிலும், மூன்றாம் பிறை நாளிலும் உண்ண வேண்டும் என்பர்.322

காலமும் யோகமும்

யோக முறைகளைப் பின்பற்றிச் சித்த நிலையைப் பெற முயல் பவர்கள், எந்தெந்தக் காலங்களிலிருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு அரிய முறைகளைக் கூறக் காண்கிறோம்.

யோகிகள் தங்கள் செயல் ஆவணி, மார்கழி, ஐப்பசி, பங்குனி, வைகாசி, ஆடி, தை ஆகிய ஏழு மாதங்களில் தொடங்கினால் குற்ற மில்லை.

மேஷம், மீனம், கன்னி, அவிட்ட நட்சத்திரங்களும்

குரு, மதி, புகர், புந்தி ஆகிய இலக்கினங்களும்

மீனம், வில், துலை, கன்னி ஆகிய இராசிகளும்

பஞ்சமி, சஷ்டி, சத்தமி, தசமி, திருதிகை, சதுர்த்தி

ஆகிய திதிகளும் குருபூசை, சிவபூசை, தீட்ø

ஆகியவற்றுக்கு நல்ல நாள்களாகும் என்பர்.323

காலமும் நோயும்

நோயுற்றது எந்த நாள் என்பதை அறிந்தால், இயல்பாக எந்த நாளில் அந்த நோய் போகும் என்பதை அறிய விண்மீன்களைக் கொண்டும்324 திங்களைக் கொண்டும்325 அறிந்துள்ளனர். விண்மீன், திங்கள் ஆகியவற்றின் கதிர் இயக்கங்கள் மனித நோயின் ஆற்றலைக் குறைக்கவும் கூட்டவும் வல்லவை என்பது இதனால் பெறப்படும். இது, நாளோடும், கோளோடும் நோய்களுக்கும் மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அறிய வழிவகுக்கும் எனலாம்.

அறுவை சிகிச்சைக்குரிய காலம்

அறுவை சிகிச்சை என்பது மருத்துவ உலகின் மகத்தான சாதனை எனலாம். இதன் தொடக்கம் என்று ஏற்பட்டது என்பதை அறிய முடியாது. வேல்பட்ட புண்ணைத் தைக்கும் முறை326 நம் முன் னோர்கள் வகுத்த முறை என்பது தெரியவரும். அவ்வாறு புண் களையோ நோய்ப் பகுதிகளையோ நீக்கவோ, சரிசெய்யவோ செய்யப் படுகின்ற அறுவை மருத்துவத்தை எந்தெந்த நாளில் எந்தெந்தப் பகுதிகளில் செய்யக் கூடாது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் மனித உடலில், ‘அமுத நிலைகள்’ சுழன்று கொண்டிருப்பதாகவும், அதன் சுழற்சியின் போது, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியிலும் நின்று செல்லும். அந்தப் பகுதி எது என்பதை அறிந்து,அந்த நாளில் அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாதிருப்பது நலமென்பர். அது மட்டுமல்ல, அந்த நாளில் அந்தப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டாலோ, குத்து வெட்டு போன்றவை ஏற்பட்டாலோ, பாம்பு, அட்டை, சிலந்தி போன்றவை கடித்தாலோ நோய் தீராமல் மரணம் ஏற்படும் என்றும், திதிகளை அறிந்து அறுவை சிகிச்சை செய்தால் நோய் நீங்குமென்றும் கூறப்படுகிறது.327 இவ்வாறான அமுத நிலைச் சக்கரம் ஒன்றை மதனநூல் உரைத்திடக் காணலாம். அந்தந்த திதிகளில் அந்தந்த நிலைகளில் அமுதம் நிற்கு மெனவும், அவ்விடத்தைத் தொட்டாலே இச்சை உச்ச நிலையை அடையுமெனவும், அந்த நிலைக்கு எட்டாமிடம் நஞ்செனவும், அவ்விடத்தைத் தொட்டால் இச்சையில் வெறுப்பு ஏற்படுமெனவும் கூறப்படும். (அமுதநிலை இணைப்பு 14).

உயிர்க்கதிரலை

வானவெளியில் வீசப்படும் மின்காந்த நுண்ணலைகள் (இணிண்ட்டிஞி ணூச்தூண். ஈணூ. ஏ.ஆர். மில்லிகன் என்பவரால் 1925–ல் கண்டுபிடிக்கப்பட்டது.) விண்மீன்களின் இடையிலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது.328

அதேபோல், பூமியின் நடுவிலுள்ள நெருப்புக் குழப்பிலிருந்து வீசப்படும் பூகம்பக் கதிர் அலைகள் (குஞிடிஞுணtடிண்tண் டச்திஞு ணணிtடிஞிஞுஞீ tடச்t ச்t ச் ஞீஞுணீtட ணிஞூ ணிணஞு tடணிதண்ச்ணஞீ ஞுடிஞ்டt டதணஞீணூஞுஞீ ட்டிடூஞுண், tடஞுணூஞு டிண் ச் ண்தஞீஞீஞுண ஞிடச்ணஞ்ஞு டிண tடஞு தீச்தூ ண்ஞுடிண்ட்டிஞி தீச்திஞுண் tணூச்திஞுடூ. Oணஞு டுடிணஞீ ணிஞூ தீச்திஞு ஞிடச்ணஞ்ஞுண் ஞீடிணூஞுஞிtடிணிண ச்ணஞீ ச்ணணிtடஞுணூ ண்tணிணீண் ஞுணtடிணூஞுடூதூ. குணி tடஞுணூஞு ட்தண்t ஞஞு ச் ஞ்ணூஞுச்t ஞிடச்ணஞ்ஞு டிண tடஞு ட்ச்tஞுணூடிச்டூ ணிஞூ tடஞு ஞுச்ணூtட ச்t tடஞு ஞீஞுணீtட. ஏச்ட்டூதூண, கூஞுடூடூட்ஞுதீடதூ க.28) பூமியில் நில அதிர்வை ஏற்படுத்தி பல அழிவுகளை உண்டாக்கு கின்றன. அதே போல் மனித உடம்பினுள் உயிர்க் கதிரலை வீசப்படுகிறது. அது உலா வந்து கொண்டிருக்கும் பகுதிகளில் (உறுப்பு) காயமோ கத்தியோ பட்டால் அக்கதிர்கள் அப்புண்களின் வழியே வெளியேறிவிடும். அதனால், உயிர்க்கதிர் உடலிலிருந்து வெளி யேறினால் மரணம் ஏற்படுகிறது. இக்கதிருக்கு மருத்துவ நூல் வைத்த பெயரே அமுதநிலையாகும்.

இதனைக் கொண்டு பார்த்தால், வானவெளியாகிய அண்டத்திலும் பூமியாகிய பிண்டத்திலும் என்ன நிகழ்கிறதோ அதுவே, மனித உடம்பிலும் நிகழ்கிறது எனக் கண்டனர் போலும். இதன் முழு உண்மைகளையும் கண்டறிய அறிவியல் துறை அறிஞர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும்.

தொகுப்புரை

தமிழ் மருத்துவம் பஞ்சபூதக் கோட்பாட்டு முறையால் வகுக்கப் பட்டுள்ளது.

உலகப் பொருள்கள் அனைத்தும் பஞ்சபூதக் கூறுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பஞ்சபூதம், நோயை உருவாக்கும் காரணியாகவும், நோயைத் தணிக்கும் மருந்தாகவும், உடலைக் காக்கும் கற்பமாகவும், சாகாக் கலைக்குரிய சித்தியாகவும் அறியப்பட்டிருக்கிறது.

நோய்த் தேர்வு முறைகளும், மருந்து தயாரிப்பு முறைகளும் அறிவியல் முறையாக அமைந்துள்ளன.

அவசர மருத்துவம், நீண்டகால மருத்துவம் என மருத்துவம் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

உணவுப் பொருள்களே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நோய்வரும் வழிகளும், நோயணுகா நெறிகளும் கண்டறியப் பட்டுள்ளன.

தமிழ் மருத்துவம், ஒரு முழுமையான மருத்துவம் என்பதுடன், மிகுந்த பயன்மிகு மருந்துகளையும் கொண்டிருக்கிறது.

தமிழ் மருத்துவம், தமிழர் நாகரிகத்தில் ஓர் அங்கமாக அமைந்துள்ளது.

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions